மகா கும்பமேளா 2025: 44 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Maha kumbhamela 2025
Maha kumbhamela 2025
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் மகா கும்பமேளா (Maha Kumbh Mela) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஜனவரி 13 ஆம் நாளில் தொடங்கி பிப்ரவரி 26 ஆம் நாள் வரை 44 நாட்கள் நடைபெற இருக்கிறது. சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

மகா கும்பம் என்பது நதிகள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம். மகா கும்பமேளாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாகர் மந்தன் என்ற தெய்வீக நிகழ்வைப் பற்றி ரிக்வேதம் குறிப்பிடுகிறது. இந்து சமயப் புராணங்களின் படி, கடவுள்கள் (தேவர்கள்) மற்றும் அசுரர்கள் (அரக்கர்கள்) இறப்பின்றி இருக்க வேண்டுமென்பதற்காக, அதற்குரிய அமிர்தத்தைப் பெறுவதற்காக மந்தாரா மலையை மத்தாகப் பயன்படுத்தி ஆதிகாலப் பெருங்கடலைக் கடைந்தனர்.

பெருங்கடலிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைத் தேவர்களும், அசுரர்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, இரு தரப்பினரும் கடலைக் கடைந்தனர். இரு பிரிவினரின் கூட்டு முயற்சிக்குப் பலனாக, கடலிலிருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அமிர்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக, இரு பிரிவினருக்குமிடையே போர் ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து காக்க, மகாவிஷ்ணு, மோகினியின் வடிவில் தோன்றி, அமிர்தம் அடங்கிய கலசத்தை (கும்பம்) இரு பிரிவினரின் கைகளிலிருந்து பிடுங்கித் தூக்கி எறிந்தார்.

இதையும் படியுங்கள்:
அனிமோ மீட்டர் அப்படின்னா என்னன்னு தெரியுமா?
Maha kumbhamela 2025

அப்போது, அந்த கும்பத்தில் இருந்து அமிர்தத்திலிருந்து நான்கு துளிகள் பூமியில் வந்து விழுந்தது. இந்தியாவிலுள்ள ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என்று அழைக்கப்படும் நான்கு நகரங்களில் அந்த அமிர்தத் துளிகள் விழுந்தன. எனவே, இந்த நான்கு இடங்களும் வரலாற்று ரீதியாகப் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அமிர்தம் க்டைந்தெடுக்கும் முயற்சி 12 ஆண்டுகள் நீடித்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு, பிரயாக்ராஜ் மட்டுமின்றி, ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பம் 2025 மேளா கீழே உள்ள அட்டவணையின்படி நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறும்.

ஹரித்வார் - சூரியன் மேஷத்திலும், வியாழன் கும்பத்திலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஹரித்வாரில் மேளா நடத்தப்படுகிறது.

பிரயாக்ராஜ் - சூரியன் மகர ராசியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிரயாக்ராஜில் மேளா நடத்தப்படுகிறது.

நாசிக் - சூரியனும் வியாழனும் குறிப்பிட்ட நிலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நாசிக்கில் மகா கும்பமேளா நடைபெறுகிறது.

உஜ்ஜயினி - சூரியன் மேஷ ராசியிலும், வியாழன் சிம்ம ராசியிலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் உஜ்ஜயினியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது.

பிரயாக்ராஜில் நடைபெறும் இந்த 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில், ஜனவரி 13 அன்று பௌஷ் பூர்ணிமா, ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தி, ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசை, பிப்ரவரி 3 அன்று பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 12 அன்று மாகி பூர்ணிமா, பிப்ரவரி 26 அன்று: மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 44 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்தும், சில வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 40 கோடி பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் உடல் நலத்தை உறுதி செய்வதற்காக, 407 மருத்துவர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் அன்று வீட்டு முகப்பை அலங்கரிக்கும் கூரைப்பூ  கொத்து பற்றி தெரியுமா?
Maha kumbhamela 2025

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனிப்புடன் 24 மணி நேர மருத்துவ சேவை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மத்திய மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு 10 கழிவறைகளுக்கும் ஒரு துப்புரவாளர் மற்றும் 10 துப்புரவு பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை மேற்பார்வையாளர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com