

திருமயிலாடுதுறையில் உள்ள அபயாம்பிக உடனுறை மயூரநாதர் கோவிலில் வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்று நம்பப் படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளில் நீராடி பாபங்களை போக்கிக்கொள்பவர்கள் ஏராளம். அப்படி நீராடுபவர்களை புனிதப் படுத்திவிட்டு இவைகள் அவர்களின் பாபங்களை ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாலங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் காவிரியில் நீராடி தங்கள் பாபங்களை போக்கிக்கொள்வதோடு தங்களை புனிதப்படுத்தியும் கொள்கின்றன. இவைகளோடு சப்த கன்னியரும் மயிலாடுதுறை காவிரியில் நீராடுவதாக கூறப்படுகிறது.
ஐப்பசி முழுவதும் நீராட முடியாதவர்கள் கூட ஐப்பசி மாத கடைசி நாள் இந்த காவிரியில் நீராடி அபயாம்பிகா சமேத மயூரநாதன் மற்றும் அருகில் உள்ள கருங்குயில் நாதன் பேட்டை ஆனந்தவல்லி சமேத சக்தி முனீஸ்வரர் ஆகியோரை வழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம். சம்பந்தர் இரண்டு பதிகங்களிலும் நாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதனைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதல் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் மயிலம்மன் சன்னதி உள்ளது இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் மயிலாடுதுறை ஆனது.
ஐப்பசி திருவிழா ஐந்தாம் நாளில் சிவா பார்வதி இருவரும் ஆடிய மயூரதாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூர தாண்டவக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். தினமும் மாலையில் அவருக்குத்தான் பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் மூலவர் மயூரநாதன் கிழக்கு நோக்கிச சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும்.
இத்தல அம்மனின் பெயர் அபயாம்பிகை என்பதாகும். முன்னூறு வருடங்களுக்கு முன்பு நல்லத்துக்குடி என்ற தலத்தில் சிவபக்தி நிரம்பிய க்ருஷ்ணசாமி என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் பசியில் தவித்தான். மயிலாம்பிகையை துதித்தான். அப்போது சாதாரண பெண் வடிவில் அம்பாள் வந்து தங்கக் கிண்ணத்தில் இவனுக்கு அன்னம் ஊட்டினாள். அப்போதிலிருந்து ஞானம், கல்வி மற்றும் கவி புனையும் ஆற்றலையும் சிறுவன் பெற்றான். அதிலிருந்து அதிகாலையில் நல்லத்துக்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்து மயூரநாதருக்குத் தொண்டாற்றி, அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு நல்லத்துக்குடிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டார்.
ஒருநாள் அப்படி திரும்பும்போது இரவில் கால் இடறி விழ அபயாம்பிகாம்மா எனக்கு ஒளி காட்டக்கூடாதா என வேண்டினார். என்ன ஆச்சர்யம் அம்பாள் கையில் திருவிளக்கு ஏந்தி வழிகாட்டி மறைந்தார். அன்றுமுதல் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்கு செல்லும்போது கை விளக்கு ஒன்று தோன்றி அவர் வீடு செல்லும் வரை ஒளிகாட்டுமாம். அந்தரத்தில் மிதந்தபடி வழிகாட்ட கிருஷ்ணசாமி யை ஊருக்கு அழைத்துச்செல்லும் விளக்கைப் பார்த்து மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.
ஒருநாள் அபயாம்பிகா சன்னதிமுன் கிருஷ்ண சுவாமி வழிபட்டுத் கொண்டிருந்தபோது யாவரும் கேட்கும் வண்ணம் அசரீரி கருவறையில் இருந்து ஒலித்தது. "அன்பனே என்னைப் புகழ்ந்து செந்தமிழில் சதகம் எனும் 100பாடல்கள் பாடு. அந்த சதகத்தை யார் துதிக்கிறார்களோ அவர்களுக்கு அருள் புரிவேன்" என்றது. அதற்கு கிருஷ்ணசாமி எனக்கு அந்த அளவிற்கு புலமை கிடையாதே என்றுகூற அதற்கு கவி பாடும் திறனை அம்பாள் உடனே அவருக்கு அருளினார்.
திருக்கடையூர் அபிராமி மீது அந்தாதி பாடி சுப்ரமண்யன் அபிராமி பட்டர் ஆனார். அதேபோல் அபயாம்பிகை மீது 100பாடல்களை கிருஷ்ணசாமி பாடி அபயாம்பிகை பட்டர் ஆனார். இந்த சதகத்தை பாராயணம் செய்தால் அனைத்து வளமும் பெறலாம்.
திருவிழா
இத்தலத்தில் வருடந்தோறும் ஐப்பசி பௌர்ணமியில் மயூரநாதருக்கு அன்னாபிஷேகமும்,கார்த்திகை அனைத்து திங்கட் கிழமைகளில்1008சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறுகிறது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.