
தெய்வீகத் தாயாகப் போற்றப்படும் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் பிறப்பு மற்றும் திருமணம் எப்படி நிகந்தது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நாராயணபுரத்தில் ஆகாசராஜன் என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். அவன் தரணி தேவி என்ற பெண்ணை மணந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குப் புத்திரப்பேறு இல்லாததால், அவன் புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றைச் செய்யக் கருதி நிலத்தை உழுதபோது அதில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அழகு மிகுந்த பெண் குழந்தை ஒன்று தோன்றியதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தனது மனைவி தரணி தேவியிடம் கொடுத்தான். தாமரையில் (பத்மம்) தோன்றியதால் அந்தக் குழந்தைக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
பத்மாவதி வளர்ந்து திருமணப் பருவம் அடைந்து தனது தோழியர்களுடன் நந்தவனத்தில் மலர் கொய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த நாரத முனியிடம் தனது கையைக் காட்டி ஜாதகப் பலனைக் கூறும்படி கேட்க, நாரதர் ‘உன்னை அந்த நாராயண மூர்த்தியே மணம் செய்து கொள்வார்’ என்று கூறிச் சென்றார்.
அப்பொழுது பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீநிவாசப் பெருமாளாக வெண்குதிரை மீது அமர்ந்து வேட்டையாடுவதற்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் கண் முன் யானை ஒன்று புலப்படவே, அதைத் துரத்திக் கொண்டு வந்தவர், பத்மாவதியை பார்த்து தம்மை மணந்து கொள்ளும்படி கேட்டார்.
அதைக் கேட்டதும் பத்மாவதி சினந்து தனது தோழிகளிடம் கற்களால் அவரை அடிக்கும்படி கூற, அவரும் அடி தாங்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று புற்றில் சேர்ந்து பத்மாவதியின் வடிவழகை எண்ணி உருகி அதே சிந்தனையில் இருந்தார்.
பகவானின் மனத்துயரை அறிந்த வகுளமாளிகை என்பவள், ‘நான் சென்று எவ்விதமாயினும் பத்மாவதியை இணங்கச் செய்து உனக்கு மணம் முடித்து வைப்பேன்’ என்று நாராயணபுரத்திற்குச் சென்றாள். குறி சொல்லும் குறத்தி வேடம் பூண்டு நாராயணபுரம் சென்று, ‘குறி சொல்கிறேன்’ என்று வீதிகளில் வந்தபொழுது, பத்மாவதி நந்தவனத்தில் பகவானை கண்ட நாள் முதல் அவர் சிந்தனையாகவே தொடர்ந்து உண்ணாமல் இருப்பதால், அதனைக் கண்ணுற்ற ஆகாசராஜனும், தரணி தேவியும் பெருங்கவலையுடன் குறி சொல்லும் குறத்தியை அழைத்து தமது பெண் குறித்து குறி கேட்டனர்.
அப்பொழுது தரணி தேவியிடம் குறி சொன்ன அந்தப் பெண், “நீ ஒரு பெண் குழந்தையைப் பற்றி குறி கேட்டாய். நந்தவனத்தில் அவள் பூ கொய்து கொண்டிருந்தபோது ஒரு ஆடவனைக் கண்டாள். அந்த ஆடவன் சாட்சாத் நாராயண மூர்த்தியேயன்றி வேறு யாருமில்லை. உனது பெண் அவரை மணக்க ஆசை கொண்டிருக்கிறாள். அவரும் இந்தப் பெண்ணை மணந்துகொள்ள விருப்பம் உடையவராக இருக்கிறார். இந்தத் திருமணம் முடிந்தால் உங்களுக்கு அளவற்ற சுகங்கள் உண்டாகும். இந்தச் செய்தி சம்பந்தமாக இன்னும் சிறிது நேரத்திற்குள் இங்கு ஒரு பெண் வருவாள்” என்று கூறி, மீண்டும் திருமலை திரும்பினாள்.
அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருமணம் பேசி முடித்து, தங்கள் குல குருவாகிய சுகயோகினியிடம் திருமணப் பத்திரிக்கை எழுதி அவர் மூலமாகவே திருவேங்கடப் பெருமானுக்கு அனுப்பினார் தரணிராஜன். திருமணப் பத்திரிக்கையைப் பெற்றுக் கொண்ட பகவான் திருவேங்கட பெருமாள் பெருமகிழ்ச்சி கொண்டார்.
வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை தசமி திதி கூடிய நாளில் பத்மாவதியை திருவேங்கட பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்தனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்து வாழ்த்தினர். இத்திருமண வைபவம் திருமலை திருப்பதியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதன் பிறகு மகாலக்ஷ்மி தாயார் வந்து வாதாட, பெருமாள் அவரிடம் பத்மாவதியின் முற்பிறவி செய்திகளைச் சொல்ல, உண்மையைத் தெரிந்து கொண்டதும் மகாலக்ஷ்மி, திருமாலின் அருகில் நின்றாள். பத்மாவதியும் அவர் அருகில் நின்றாள். இருவரும் திருமாலின் இருபுறங்களில் நின்று கொண்டனர். ஸ்ரீதேவி திருமாலின் வலது மார்பிலும், பூதேவியாகிய பத்மாவதி திருமாலின் இடது மார்பிலும் இடம்பெற்றனர். திருமால் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருவேங்கடத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்ஸவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.