

ஒருவர் வாழ்க்கையில் எப்படி இருந்தால், அவர் வெற்றிபெற முடியும் என்பதை கருட புராணம் கூறுகிறது. சனாதன தர்மத்தில் இந்த புராணம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகவும், வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நல்லுரையாகவும் இருக்கிறது. கருட புராணத்தை, ஒருவரின் பூவுலக வாழ்க்கைக்கு பின்னால் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி எச்சரிக்கும் புத்தகமாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்த புராணம் பூமியில் ஒருவர் வாழ்வதற்கு கடைபிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும், செய்யக் கூடாத தவறுகள் பற்றியும் விளக்குகிறது.
மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு, வாழ்வியல் குறித்த நெறிமுறைகளையும், தர்மத்தையும் உபதேசித்த நன்னெறிகளின் தொகுப்பு தான் கருடபுராணம். இதில் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பல வாழ்வியல் பாடங்கள் உள்ளன. தோல்விகளை தவிர்த்து, வாழ்வில் முன்னேற வெற்றி பெறவேண்டியது அவசியமாகிறது. அவற்றை அறிந்துகொள்வது மற்றும் பின்பற்றுவதன் மூலம் நாம் வெற்றிகரமான மனிதர்களாக பயணிக்க முடியும். கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்த 3 விதிகளை கடைபிடிக்க தொடங்கினால், வெற்றி தேடிவந்து நிரந்தரமாக உங்களிடம் குடிபுகும்.
எதிரிகளை வெல்ல விவேகம் அவசியம்:
கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரையின்படி எதிரிகளை ஒருபோதும் நாம் சாதாரணமாக எடை போடக்கூடாது. "எதிரி என்பவன் உங்களை அழிக்க நினைக்கும் பகையாளியை குறிப்பது மட்டுமல்ல, உங்களுக்கு எதிலும் போட்டியாக இருப்பவரையும் குறிக்கும்" சொல்லாகும். எதிரிகளுக்கும் அபரிதமான அறிவு உண்டு, அவர்களுக்கும் நம்மைப் போன்ற பலமும் உண்டு, என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
உங்களின் எதிரியை தோற்கடிக்க அறிவு மட்டும் பத்தாது, அதற்கு ஏற்ப அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எதிரியின் பலத்தினை சரியாக எடைபோடுவது மிகவும் அவசியம். எதிரி நம்மைவிட பலசாலி என்று பயப்படவோ, நம்மைவிட பலம் குறைந்தவன் என்று ஏளனமாக நினைப்பதும் கூடாது. எதிரியை தோற்கடிக்கும் முன்னர் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அறிவு மற்றும் பொறுமை ஆகிய இரண்டையும் எதிரிக்கு முன் பயன்படுத்த வேண்டும். எதிரிகளை எப்போதும் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். நீங்கள் எதிரியை வென்றாலும், அதன் பின்னர் அலட்சியமாக இருக்கக் கூடாது.
விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும்:
எந்த ஒரு செயலிலும் வெற்றியை தேடி தருவது, விடாமுயற்சிதான் முதன்மையாக இருக்கிறது. அதைப்போல் ஒரு செயலில் நீங்கள் தேர்ந்தவராக மாற தொடர் பயிற்சியும் அவசியமாகும். நீங்கள் எந்த அளவுக்கு உங்களது அறிவை விஸ்தாரமாக வளர்த்துக் கொள்கிறீர்களோ? அந்த அளவிற்கு உங்களது வெற்றியும் மிகப்பெரியதாக இருக்கும்.
நீங்கள் கார் ஓட்டுவதில் வல்லவராக இருந்தால், அதில் தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போதுதான் மிகச்சிறந்த ஓட்டுனராக நீங்கள் மாறுவீர்கள். எவ்வளவு அறிவு இருந்தாலும் பயிற்சிதான் ஒருவரை திறம்பட வெற்றியை நோக்கி உறுதியாக நடத்தி செல்லும். ஒரு விஷயத்தை நாம் சரியாக பயிற்சி செய்யாவிட்டால், அதில் நமது அனுபவ அறிவு குறைய தொடங்கும். அதனால் பயிற்சியை அதிகப்படுத்தினால் வெற்றியை தொடர்ந்து அனுபவிக்கலாம்.
தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்:
ஒருவர் தர்மத்தை பின்பற்றாமல் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், அவரை மக்கள் ஏளனம்தான் செய்வார்கள். தர்மத்தின்படி நடப்பவர்களின் வெற்றியையே மக்கள் கொண்டாடுவார்கள். நீதி, நேர்மை, ஆன்மீகத்தை கடைப்பிடிக்கும் பண்புகள் ஒருவரை தொடர்ந்து உயர்த்தும். புராணங்கள், வேதங்கள் அவை காட்டும் உயர்ந்த வழிமுறைகள் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
மேற்கூறிய இதை எல்லாம் ஒருவன் உதாசீனம் செய்தால், வாழ்க்கையின் தன்மையை உணரமுடியாமல் அவன் வீழ்ச்சியடைவான். அதர்மத்தின் மூலம் ஒருவரை ஏமாற்றிவிட்டு எளிதில் வெற்றியை பெறமுடியும். ஆனால், அந்த வெற்றி என்றும் நிலைக்காது. தர்மத்தை ஒருவன் முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலம் நிறைவான வெற்றியை அடையலாம்.