

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சுயம்புவாக புற்று வடிவில் தோன்றிய முத்துமாரியம்மனின் அருளால் அனைத்து நோய்களும், பார்வைக் குறைபாடுகளும் தீரும் சக்தி மிக்க அம்மன் தலமாக விளங்குகிறது. சோழர் கால காவல் தெய்வமாகவும், மராட்டிய மன்னர்களின் பக்தி மையமாகவும் விளங்கும் இத்தலம், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், பயம் நீங்கவும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் புண்ணிய ஸ்தலமாகும்.
சுயம்புவாக புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மன் பக்தர்களின் அனைத்துப் பிணிகளையும் தீர்க்கும் அற்புத சக்தியாக திகழ்கிறாள்.
மூலவர் முத்துமாரியம்மன். தல விருட்சம் வேம்பு, புன்னை மரம்.
தீர்த்தம் வெல்லக்குளம். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும். முத்து மாரியம்மன் சன்னதிக்கு அருகில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.
புற்று மண் வடிவம்:
இங்கு மூலவராக வீற்றிருக்கும் முத்துமாரியம்மன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சிலை அல்ல. இது 6 அடி உயரமுள்ள வெண்புற்று மண்ணால் தானாக உருவான சுயம்பு வடிவமாகும். மூலவர் சிலை முற்றிலும் புற்றுமண்ணால் ஆனதால் மூலவரான அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம் போன்ற தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.
உற்சவ அம்மனுக்கு மட்டுமே இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படும் தைலாபிஷேகம் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் நடைபெறும். இந்த நாட்களில் மூலவரை நேரடியாகப் பார்க்க முடியாது. ஒரு திரையில் அம்மன் படம் வரையப்பட்டு அதற்குத்தான் பூஜைகள் நடைபெறும்.
முத்துமாரியம்மன்:
கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் வியர்வை முத்துக்கள் தோன்றும். இதனால் இவருக்கு முத்துமாரியம்மன் என்ற பெயரும் உண்டு. மூலவரான புன்னைநல்லூர் மாரியம்மனின் புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ளவும், உட்கொள்ளவும் செய்தால் தீராத நோய்கள் தீர்வதுடன், தேவையற்ற பயங்களும் போய்விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வண்ண மலர்கள் கொண்டு அலங்காரங்கள் செய்யப்படும்.
தல வரலாறு:
சோழ மன்னர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் காக்க எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்களை அமைத்த பொழுது, கிழக்கே அமைக்கப்பட்ட தேவி இவள் என்று கூறப்படுகிறது. 1680 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசித்துவிட்டு உறங்கும் பொழுது, அம்மன் அவருடைய கனவில் தோன்றி, தான் புன்னைவனக் காட்டில் புற்று வடிவில் இருப்பதாகக் கூற, மன்னர் அங்கு சென்று புற்றைக் கண்டறிந்து சிறிய கூரை வேய்ந்து வழிபடத் தொடங்கினார்.
பின்னர் வந்த துளஜேந்திர ராஜா தன் மகளுக்கு ஏற்பட்ட வைசூரி (அம்மை) நோயால் பார்வை இழந்தபோது, இங்கு வந்து வேண்டி பார்வையை திரும்பப் பெற்றார். அதன் நன்றிக்கடனாக அம்மனுக்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டினார்.
சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் எனும் புகழ்பெற்ற சித்தரான அவர் அந்தப் புற்றை ஒரு அழகான அம்மன் வடிவமாக மாற்றி, அதன் முன் சக்திவாய்ந்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார்.
நேர்த்திக்கடன்:
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறவும், கண்பார்வை போன்ற உடல் உபாதைகள் தீரவும் பக்தர்கள் இங்கு வந்து மாவிளக்கு ஏற்றுதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி அக்னி சட்டி எடுப்பதும், கோவில் தீர்த்தமான வெல்லக் குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுவதும் என பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழாக்கள் மற்றும் உற்சவம்:
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். ஆடி கடை ஞாயிற்றுக் கிழமை முத்துப்பல்லக்குப் பெருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்து பல்லுக்கு உற்சவமும், ஆவணி மாதம் கடைசி ஞாயிறு தேரோட்டமும் நடைபெறும். புரட்டாசி மாதம் தெப்போற்சவமும், நவராத்திரி சமயங்களில் நவராத்திரி உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
எங்குள்ளது?
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் அமைந்துள்ளது.