ராமானுஜர் தந்த வாக்கைக் காத்த ரங்கராஜன்!

Srirangam Perumal
Srirangam Perumalhttps://templesofindia.co

பெருமாள் மீதான ராமானுஜரின் அசாத்திய பக்தியை நாம் அறிவோம். இவரை குருவாக ஏற்று அவர் வழி நடக்கும் பக்தர்கள் ஏராளம். குரு வாக்கு பொய்க்காது என்பது நியதி.

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் ஆசார்யர் ஸ்ரீமத் ராமானுஜர்  திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது பெருமாளுக்கு நைவேத்யம் தயாரிக்கும் மடைப்பள்ளியிலிருந்து ஏதோ சண்டை போன்று பலர் உரக்கப் பேசும் சத்தம் கேட்டது.

ராமானுஜர் மெதுவாக சத்தம் வந்த இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும் சத்தத்தை நிறுத்தி வணங்கினர். மடைப்பள்ளி பொறுப்பில் இருந்தவரிடம், "என்ன விஷயம்?" என்று வினவினார் ராமானுஜர். அவரோ, நயந்து இன்னொருவரைச் சுட்டிக்காட்டிச் சொன்னார். "ஐயனே, இந்த இளைஞர் நமது கோயிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவர் செய்த கைங்கர்யத்திற்காக இவருக்கு ஒரு பட்டை பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது இன்னுமொரு பட்டை பிரசாதம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படியெல்லாம் கொடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை" என்றார்.

ராமானுஜர் திரும்பி அமைதியாக அவரைப் பார்த்தார். அந்த இளைஞன் மண்டியிட்டு வணங்கி விட்டு சொன்னார், "ஸ்வாமி, அவர் சொல்றது உண்மைதான். நான் பிரம்மச்சாரியாய் இருந்த வரையில் என் பசிக்கு ஒரு பட்டை பிரசாதம் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு.  கோயில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போக முடியறதில்ல. ஒரு பட்டை பிரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் இன்னும் ஒரு  பட்டை பிரசாதம் கிடைச்சா நல்லா இருக்கும். கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. அதனாலதான் கேட்டேன். ஆனா, இவர் தர முடியாதுன்னு சொல்றார்" என்றான்.

“கோயிலின் பொது விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது என்பதால் இந்த இளைஞன் ஒருவருக்காக அதை மீறுவது சரியில்லை. ஆனாலும், இந்த இளைஞன் சொல்லும் காரணமும் சரியாக உள்ளது” என்று கூறிய ராமானுஜர் சற்று யோசித்தார்.

"சரி, உனக்கு பெருமாள் மீது நம்பிக்கை இருக்கா?"

"இல்லை ஸ்வாமி" டக்கென்று அவன் பதில் சொன்னதும் அங்கிருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது, ராமானுஜரையும் சேர்த்து.

"என்னப்பா, தினமும் கோயில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள் மீது நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?"

"ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லைதான். ஆனா, பெருமாள் ரூபமா எங்களோட இருக்கிற உங்களைத்தான் நம்பறேன். நீங்கதான் என் பெருமாள்" என்றான் அந்த இளைஞன்.

ராமானுஜர் அசந்து போனார். "அப்பாடா, சரி. என்னை நம்பறயோ? உனக்கு யார் மேலயாவது நம்பிக்கை இருந்தா சரிதான். கோயில்ல பாசுரம், பூஜை சப்தம், பாடல்கள், வேதம், உபன்யாசங்கள் இதெல்லாம்தான் கேக்கணும். சண்டை சச்சரவு சத்தமெல்லாம் கோயில்ல கேக்கக்கூடாது. நீ சண்டை போடாம கிளம்பிப் போ. என்னை நம்பறதானே? நான் பாத்துக்கறேன்" என்றார் ராமானுஜர்.

"சரி ஸ்வாமி" மீண்டும் விழுந்து வணங்கி விட்டுப் போய் விட்டான் அந்த இளைஞன். அதன் பிறகு ராமானுஜர் பல்வேறு ஆன்மிகப் பணிகளில் மூழ்கி விட்டதால்  அவனிடம் சொன்னது மறந்து விட்டது.

இது நடந்து ஒரு வருஷம் சென்று விட்டது.

ஒரு நாள் அம்மா மண்டபத்தில் ஸ்நானம் செய்து விட்டு வந்து கொண்டிருந்த ராமானுஜரின் எதிரில் அந்த இளைஞன் வந்தான். உடையவரைக் கண்டதும், மகிழ்ச்சியோடு விழுந்து வணங்கினான்.

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்!
Srirangam Perumal

அவனைப் பார்த்ததும் சட்டென்று முன்பு 'தான் பார்த்துக்கொள்கிறேன்' என்று சொன்னது நினைவுக்கு வந்து, ‘அடடா, மறந்து விட்டோமே’ என்று வருந்தினார் ராமானுஜர். அதைத் தொடர்ந்து அவனிடம், "என்னப்பா, காலக்ஷேபங்கள் எல்லாம் எப்படிப் போகிறது?" என்றார்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாமி. தினமும் நீங்க அனுப்பற பையன் வந்து எங்களுக்குத் தேவைக்கு மேல பிரசாதத்தை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துட்டுப் போறான். தேவரீரோட கருணையே கருணை" என்றான் அந்த இளைஞன்.

தூக்கி வாரிப்போட்டது ராமானுஜருக்கு. "என்ன, தினமும் ஒருத்தர் வராரா? நான் யாரையும் அனுப்பலையேப்பா" என்றார்.

"நீங்க அனுப்பினதா சொல்லி ஒருத்தர் தினமும் பிரசாதம்  கொண்டு வராரே ஸ்வாமி. அவர் பேர் ரங்கராஜன் என்று சொன்னர். பிரசாதம் கொடுத்துட்டு நின்னு கோயில்  தூக்கையெல்லாம் திருப்பி வாங்கிண்டு போயிடுவார்" இளைஞன் நன்றிப் பரவசத்துடன் பேசிக்கொண்டே போக, உடையவருக்குக் காலுக்குக் கீழ் பூமி நழுவியது. அப்படியே கீழே அமர்ந்தார்.

"சொன்ன எனக்கே மறந்து விட்டது. ரங்கநாதா, உனக்கேன் இத்தனை கருணை?" என்று நெகிழ்ந்து போய் பகவானை துதித்தார்.

இதிலிருந்து குரு ஒருவருக்குக் கொடுக்கும் வாக்கை வரிந்து கட்டிக்கொண்டு இறைவன் நிறைவேற்றுவான். குருவின் வாக்கு வன்மை அத்துணை சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com