

ஷீரடி சாயிபாபா நம்மையெல்லாம் உய்விக்க வந்த மஹானாக. இப்புவியில் அவதரித்தார். பாபாவின் ‘உதி’ (விபூதி) பிரசாதம் உடல் பிணிகளையும் உள்ளப் பிணிகளையும் போக்கவல்ல மாமருந்து. பாபாவின் உதியை நெற்றியில் இட்டுக்கொள்வதாலும், நீரில் கரைத்து அருந்துவதாலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. பாபா வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் பிணிகளைப்போக்கும் அருமருந்தாக உதி பிரசாதம் உள்ளது.
ஷீரடியில் உள்ள துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக்கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது வழக்கம். தன் பக்தர்களுகாக. இந்த அக்னி குண்டத்திலிருந்து 'உதி' என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த 'உதி' மிகவும் சக்தி வாய்ந்தது.
டாக்டரையே வியக்க வைத்த உதி பிரசாதம்
மாலேகாவனில் (நாசிக் ஜில்லா) ஒரு டாக்டர் இருந்தார். அவரின் சகோதரியின் மகன் குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய்க்கட்டியால் (Tubercular bone abscess) துன்பப்பட்டான். டாக்டர் தாமும், அவரின் சகோதரர்களும் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எல்லாவிதமான சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சையும் கூட முயன்று பார்த்தனர். குணம் என்பதே இல்லை.
அச்சிறுவனின் துன்பத்துக்கும் ஒரு முடிவில்லை. நண்பர்களும், உறவினர்களும் அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் தெய்வீக உதவியைக் கோரும்படியும், குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம் தமது வெறும் கடைக்கண் பார்வையினால் மட்டுமே குணமாக்கிவிடும் சாயிபாபாவிடம் முயற்சிக்கும்படியும் அறிவுறுத்தினர்.
எனவே பெற்றோர்கள் ஷீரடிக்கு வந்து. பாபாவிடம் தங்கள் பையனைக் காக்கும்படி மன்றாடிப் பிரார்த்தித்தனர். கருணையுள்ள பாபா அவர்களுக்கு ஆறுதலளித்து, "இம்மசூதியை அடைக்கலம் புகுவோர் இந்தப் பிறப்பிலும், காலத்தின் முடிவு வரையிலும் எதைக் குறித்தும் கஷ்டமே படமாட்டார்கள். இப்போது கவலையற்றிருங்கள். உதியை நோய் கட்டியின்மீது தடவுங்கள். ஒரு வாரத்திற்குள் அவன் குணமடைவான்." என்றார். பாபா கூறியபடி உதியைத் தடவிய பின்னர் அவன் குணமடையத் தொடங்கினான்.
சில நாட்களுக்குப் பின்னர் பூரண ஆரோக்கியமானான். பின்னர் பாபா உதியினாலும், அருட்பார்வையினாலும் குணப்படுத்தியதற்கு பாபாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பெற்றோர் ஷீர்டியை விட்டுப் புறப்பட்டனர். இதையறிந்த அந்த பையனின் மாமாவாகிய டாக்டர் பாபாவை சந்திக்க வந்து பின்னாளில் பாபாவின் பக்தரானார்.
இதேபோல் சமீபத்தில் கலியுக தெய்வமான பாபாவின் உதியினால் என் சிநேகிதிக்கு அற்புத மெய்சிலிர்க்க வைத்த அனுபவம் நிகழ்ந்தது. அவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு நோயிலிருந்து மீண்டு வந்தார். அவர் ஷீரடி சாயிபாபாவின் தீவிர பக்தை.
இரண்டு மாதங்களுக்கு முன் அவர் வயிற்றுப் பகுதியில் பிரச்னைகள் ஆரம்பித்தது. வயிறு பெரிதாக வீங்கத் தொடங்கியது. சாப்பிட முடியவில்லை. உடனே மருத்துவரை அணுகியபோது சந்தேகப்பட்ட மருத்துவர் PET SCANக்கு பரிந்துரைத்தார். என் தோழி சாயி பாபாவின் உதி பிரசாதத்தை நீரில் கரைத்துக் குடித்தார். பாபாவிடம் மனமுருகி வேண்டிய பின்னர் பரிசோதனைகளுக்குத் தயாரானார். பெட் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவர் திருப்தி அடையாதவராக புற்றுநோய்க்கான பயாப்ஸி (Biopsy) பரிசோதனையையும் செய்ய வைத்தார்.
தோழிக்கு அவள் வணங்கும் பாபாவின் மீது முழு நம்பிக்கை இருந்தது. பையாப்ஸி ரிப்போர்ட்டும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் “பயப்படும்படி ஒன்றுமில்லை. ஒருவகை நோய்த்தொற்றுதான். மருந்துகளால் சரி செய்துவிடலாம்” என்றபோது மன உளைச்சலில் இருந்த அவர் அடைந்த மன நிம்மதிக்கு அளவேயில்லை.
பாபாவின் ‘உதி’ மகிமைமிக்கது. மகோன்னதமானது பகவான் சாயிபாபா தன்னிடம் சரணடைந்த பக்தர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்
ஆவோஜி! ஆவோஜி ரமதே ராம் ஆவோஜி!
உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!
ஷீரடி சாயிபாபா இராமனைப் பார்த்து மகிழ்ச்சியோடு பாடி உதி மூட்டைகளைச் சேர்த்து பிரசாதமாக அன்பர்களுக்கு வாரி வழங்கினார் அந்த விபூதியில் பாபா வாசம் செய்கிறார். அவர் நமக்கு நல்வழி காட்டி அருளுவார்.
ஜெய் ஸ்ரீசாயிராம்!