
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (!4.07.2025) காலை நடைபெற உள்ளது. அக்கோயில் குறித்தான சில விசேஷங்களை இந்தப் பதிவில் காண்போம்.
திருப்பரங்கிரி, சுவாமிநாதபுரம், சத்தியகிரி, சமந்தவனம் இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் வேறு பெயர்கள்தான். ஆதிசங்கரர் கூறிய ஷன் மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், கானாபத்யம், சவுரம் எனும் ஐந்து மதங்களின் தெய்வங்களை ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும் அமைப்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைத் தவிர வேறு எங்குமில்லை.
மற்ற கோயில்களைப் போல திருச்சுற்று பிராகாரங்கள் திருப்பரங்குன்றத்தில் கிடையாது. கோயிலுக்குள் சென்றால் மேலே மேலே என்று ஏறிச் சென்று கொண்டிருக்க வேண்டியதுதான். சிவபெருமானே இங்கு மலை வடிவமாக அருள்வதாலும் இது குடைவறை கோயில் என்பதாலும் இங்கு பிராகாரம் இல்லை. ஒரு காலத்தில் திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் இங்கு மூலவர் சிவன்தான். இவரை சத்திகிரீஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் கோயில் விழாக்களின்போது சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், வீதியுலா செல்வது முருகப்பெருமான்தான். இவர் சிவ அம்சமானவர் என்பதால் இவரை, ‘சோம சுப்பிரமணியம்’ என்றும் அழைக்கிறார்கள். இக்கோயில் மகா மண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர் அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இது இங்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.
பொதுவாக. கோயில்களில் உள்ள நவகிரகங்களில் சனீஸ்வரன் இடம் பெற்றிருப்பார். ஆனால், திருப்பரங்குன்றத்தில் நவகிரகங்களில் சனீஸ்வரர் மட்டுமே உள்ளார். அறுபடை வீடுகளில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும் கோயில் திருப்பரங்குன்றம் மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பெரும்பாலும் முருகப்பெருமான் நின்ற கோலத்திலேயே அருள்பாலிப்பார். ஆனால், இங்கு அவர் அமர்ந்த கோலத்தில் அதுவும் தெய்வயானையை மணம் முடித்த திருமணக் கோலத்தில் அருள்கிறார். இங்கு அருளும் சிவபெருமான் சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய்ப் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் ஆகிய ஐந்து தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டிய ஒரே குடைவரையில் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு அருகிலேயே நாரதர், இந்திரன், பிரம்மன், நின்ற கோலத்தில் வீணை இன்றி சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் அருள்கின்றனர்.
கோயில்களில் சிவனுக்கு எதிரில் நந்திதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சத்தியகிரீஸ்வருக்கு எதிரே, நந்தி இருக்க வேண்டிய இடத்தில் பவளக்கனிவாய் பெருமாள் மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது அபூர்வமான அமைப்பாகும்.
பொதுவாக, சிவன் கோயிலில் நந்தி பகவான் கருவறை எதிரில் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னிதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.
சூரபத்மனை அழிக்க வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேஸ்வரன், வீரராட்சசன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரசூரன் என்ற ஒன்பது வீரர்கள் உதவினர். இவர்களுக்குக் கோயிலின் முன் மண்டபத்தில் தனி சன்னிதி உள்ளது.
திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் எப்போதும் சேவல் கொடி வீசிப் பறந்து கொண்டே இருக்கும். கொடி பட்டொளி வீசி உயரத்தில் பறப்பது கோயில் நோக்கி வருவோர்களை, ‘வருக வருக‘ என வரவேற்பது போன்று காணப்படும்.
அறுபடை வீடுகளிலில் ஐந்து படை வீடுகளில் சூரசம்ஹாரப் பெருவிழா நடைபெறும். அதிலும் ஒரு படை வீட்டில் ஓர் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், மூன்று முறை, சூரசம்ஹார வைபவம் நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, தை மாதத் தெப்பத் திருவிழா, பங்குனி மாதப் பெருவிழா என மூன்று உத்ஸவ காலங்களிலும் இங்கு சூரசம்ஹாரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும், இத்தல முருகப்பெருமானுக்கு ஆடு, மயில், யானை, சேவல் என நான்கு வாகனங்கள் அமைந்திருப்பதும் சிறப்பு.