

சொல்வதனால் குறையும் இரண்டு பொருட்கள் புண்ணியமும் பாவமும் ஆகும்.
ஒருபோதும் நாம் செய்யும் தான தர்மங்களை மற்றவரிடம் சொன்னால், அதுவரை நாம் செய்து வைத்திருக்கும் புண்ணியம் குறையும். அதேபோல் நாம் செய்த பாவங்களை மற்றவரிடம் சொன்னால் பாவம் குறையும். நாம் சேமிக்கும் செல்வம் எப்படி நம்முடைய பிற்காலத்தில் நமக்கு உதவுகிறதோ, அதேபோல்தான் நாம் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியமும் நமக்கு தக்க சமயத்தில் கை கொடுக்கும் என்பதை உணர்ந்துகொள்வோம்.
ஆகவே, நம் வாழ்க்கையில் நமக்கு குறைய வேண்டியது பாவம், கூட வேண்டியது புண்ணியம். எனவே நாம் செய்யும் புண்ணியத்தை அடுத்தவர் சொல்ல. காது குளிரக் கேட்போம். நாம் தெரியாமல் செய்த பாவத்தை மற்றவரிடம் சொல்லி, பரிகாரம் தேடுவோம். நமக்கு கூட வேண்டியது புண்ணியம் என்பதை நினைத்து, பாவம் தவிர்த்து, புண்ணியக் காரியத்தை செய்வோம்.
துன்பத்தில் இருக்கும் மற்ற உயிர்களிடத்தில் அன்போடு அரவணைத்து, கருணை மழை பொழிவோம். அவர்கள் துன்பத்தை துயர் படுத்துவதில் அணிலைப் போன்று சிறு சிறு உதவிகளை செய்து மனிதம் காப்போம்.
இதனால் இறைவனிடம் அன்பையும் கருணையும் பிரதிபலனாக நாம் பெறலாம்.
உள்ளத்தின் அழுக்குகள் மூன்று தவிர்ப்போம்.
மன அழுக்கு:
பொறாமை, கோபம், பேராசை இவைகள் மன அழுக்கு ஆகும். இவைகளை தவிர்க்க தியானம் செய்து போக்கலாம்.
வாய் அழுக்கு:
பொய் உமிழ்தல், அடுத்தவர்கள் மனம் புண்படுத்தும் வகையில் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தல் மற்றும் புறங்கூறல். இவற்றை வேரோடு சாய்க்க இறைவன் பாதங்களை பற்றி, இறை நாமாவளியைபாடி, அவன் காலில் விழுந்து சரணாகதி ஆனால் வாய் திருவாயாக மாறும்.
மெய் அழுக்கு:
மெய் என்பது நம்முடைய உடலை குறிக்கும். போதைப் பொருள் உபயோகித்தல், கொலை பாதகம் செய்தல் மற்றும் புலால் உண்ணுதல். இவைகள் அனைத்தும் மெய்யழுக்கு ஆகும். இவற்றை போக்க, நாம் இறைவனுக்கு உடலால் உழவாரப்பணி செய்து, மனமாற்றம் அடைந்து போக்கலாம்.
ஆகவே மனிதப்பிறவி என்பது உடல் சுத்தமான நீரைப்போன்று இருக்கவேண்டும். உள்ளம் தெளிந்த நீரோடைப் போன்று இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செல்லும் வாழ்க்கை பாதையும் தூய்மையாக இருக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்களும் விதையாக விழும்.