
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சென்றால், அங்கிருந்து செல்லப்பிராட்டி கிராமம் சென்று செல்வ லலிதாம்பிகையை தரிசித்து வரலாம். இவரை தரிசித்தால் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் தரிசித்த புண்ணியப் பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டி தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தியவர் ரிஷ்ய சிருங்க முனிவர். இவர் காசியப முனிவரின் மகனான விபாண்டவருக்குப் பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதை அம்பாளாகக் கருதி அவர் வழிபட்டு வந்தார். இந்தப் பலகை தமிழகம் வந்தது. அதற்கு லலிதா செல்வாம்பிகை என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கற்பலகையையே பிரதிஷ்டை செய்து, கீழே அம்பாள் விக்கிரகத்தையும் வைத்தனர். ஆதிசங்கரர் காஞ்சிக்கு சென்றபோது அவருக்கு இத்தல அம்பிகை காட்சி கொடுத்து வழி கூறியதாகக் கூறப்படுகிறது. ரிஷ்ய சிருங்கரின் விக்ரகமும் இங்கு உள்ளது.
ஒரு காலத்தில் கற்பலகைகளில் மந்திரங்களை எழுதி அதையே கடவுளாக வழிபட்டனர். எனவே, இத்தலம் காலத்தால் மிகவும் பழைமையானதாகக் கருதப்படுகிறது. இந்தக் கற்பலகை நாலு அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுர கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீஜாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திருசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேற்பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி கற்பலகைக்குக் கீழே ஒரு அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும் ஒருசில தலங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்கிரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்து இருப்பதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
எட்டு திருக்கரங்கள், நெற்றியில் பிறைச் சந்திரன், ஐந்து தலை நாகம், சூலம் ஆகியவற்றுடன் இடது காலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டு, தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாக அமர்ந்துள்ளார். வலது திருக்கரம் பக்தர்களைக் காக்கும்படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளன. பின் கரங்களில் சரஸ்வதிக்குரிய அட்சர மாலை மற்றும் கமண்டலம், மகாலட்சுமிக்குரிய சங்கு, சக்கரம், பார்வதிக்குரிய பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. இந்த செல்வ லலிதாம்பிகை அம்மனை வழிபட்டால் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலை சுற்றி எட்டு திசையிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன. சக்தி பீடங்களான இவை வடக்கே காஞ்சிபுரம் காமாட்சி, வடகிழக்கு மயிலாப்பூர் கோலவிழி அம்மன், கிழக்கில் கடும்பாடி அம்மன், தென்கிழக்கு திருவக்கரை வக்ரகாளி, தெற்கு சமயபுரம் மாரியம்மன், தென்மேற்கு செஞ்சி கமலக்கன்னி, மேற்கே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, வடமேற்கே படவேடு ரேணுகா பரமேஸ்வரி என்று அருள்பாலிக்க நடுநாயகமாக செல்வ லலிதாம்பிகை அம்மன் வீற்றிருக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் ஆகியவை சோழர் கால கட்டட அமைப்பைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
முப்பெரும் தேவியரும் அங்கே ஒருங்கிணைந்து இருப்பதால் எல்லா வேண்டுதல்களையும் அங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். நவராத்திரி தினங்களில் இங்கு சென்று இத்தேவியரை ஒருசேர வணங்கி எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ்வோம்!