

திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா தனித்தன்மை வாய்ந்தது. இதற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் உலகில் பரம்பொருள் ஒன்று என்பதை உணர்த்துகிறது. அதன் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.
தீபத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
* திருவண்ணாமலையை பார்த்து ‘நமசிவாய’ என்று சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
* திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்போது மலையின் உள்பகுதியில் ஒலி ஒன்றைக் கேட்டதாக ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் கூறியுள்ளனர்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகு அதை வணங்கி கிரிவலம் வந்தால் அந்த ஜோதியின் கதிர்கள் உடம்பில் பட்டு ஆன்ம பலம் அதிகரிக்கும்.
* தீபத் திருநாளில் 5 முறை கிரி வலம் வர பாபங்களிலிருந்து முழு விமோசனம் கிடைக்கும்.
* தீபம் ஏற்றப்படும்போது, ‘தீப மங்கல ஜோதி நமோ நம’ என்ற பாடலை பாட, குடும்பத்தில் மங்கலம் உண்டாகும்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிக்க சித்தர்கள் வருகை தருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகை தைலத்தை சேர்த்து விடுவதாக சொல்கிறார்கள். இதனால் இது தீய சக்திகளை அழிக்கும்.
* கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்க்கு 1000 அச்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கம் முன் நெய் விளக்கேற்ற வாழ்க்கை பிரகாசமாகும்.
* கார்த்திகை தீப காட்சியை பார்ப்பவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் சமயம் அங்கு இருந்து தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
* மலையுச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை 2000 லிட்டர் நெய் பிடிக்கும். திருவண்ணாமலை தீப ஒளி சுமார் 20 கி.மீ. தொலைவுக்குத் தெரியும். இது 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகை தீபங்கள் ஏற்றப்படும்.
* திருவண்ணாமலையில் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவன் சொரூபமானது.
* கார்த்திகை தீபத்தன்று அதிகாலை கோயிலில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னிதியில் வைத்து விடுவார்கள். அதை மாலையில் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று மகாதீபத்தை ஏற்றுவார்கள்.
* திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு அர்த்தம், ‘இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதில் உள்முகத்தால் ஆன்ம ஜோதியை காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்’ இதை அருளியவர் ரமண மகரிஷி.
* மகா தீப நாளில் மலை மேல் தீபத்தை தரிசிக்க முடியாதவர்கள் தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
* சிவபெருமான் கார்த்திகை தீப நாளில் அக்னியில் நடனமாடுவதாக ஐதீகம். அதனால் இந்த நடனத்தை ‘முக்தி நடனம்’ என்பர்.