

ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு மிகவும் விசேஷமான ஒரு பட்டப்பெயர் சொல்லின் செல்வர் என்பது. பொதுவாக, சாதாரண மக்களுக்கு எதையும் சுருக்கமாக சொல்லத் தெரியாது. நீட்டி முழக்கி வளவளவென்று பேசுவதே வழக்கம். ஒரு முக்கியமான காரியத்திற்காக காணாமல் போன ஒருவரை தேடிக்கொண்டு ஒருவர் சென்றிருக்கிறார் என்றால் வீட்டில் உள்ளவர்கள் அவர் திரும்பி வரும் வரை எவ்வளவு ஆவலோடும் கவலையோடும் காத்திருப்பார்கள்? வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வந்தவர், அதை அழகாக சுருக்கமாக நேர்மறை வார்த்தைகளில் காத்திருப்பவர்களுக்கு சொல்லவும் தெரிய வேண்டும்.
பதினான்கு வருஷ வனவாசத்திற்கு வந்த ஸ்ரீ ராமர் சீதையை பறி கொடுத்து விட்டு பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அலைந்து திரிந்து கிஷ்கிந்தைக்கு வந்த அவருக்கு சுக்ரீவன் உதவுதாக வாக்களிக்கிறான்.
வானரர்கள் எல்லோரும் கூடி ஆலோசித்து ஸ்ரீ ஆஞ்சனேயர் பாராக்கிரமசாலி, இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று தீர்மானித்து அவரை சீதையை தேட அனுப்புகிறார்கள். கடலைத் தாண்டி, கடலுக்குள் இருக்கும் பகைவர்களை ஜெயித்து, லங்காபுரிக்கு சென்று அந்த நாடு முழுவதும் தேடி, கடைசியில் அசோகவனத்தில் சீதையை கண்டு ஸ்ரீராமன் தன்னிடம் தந்த கணையாழியை சீதா பிராட்டியிடம் கொடுக்கிறார்.
அவர் கிஷ்கிந்தைக்கு திரும்பியதும் சீதையை கண்ட செய்தியை ஸ்ரீ ராமருக்கு எப்படிச் சொன்னார் தெரியுமா? சீதையை என்று ஆரம்பித்தால் கூட, சீதைக்கு என்ன ஆனதோ என்று ஸ்ரீ ராமர் பயந்து போவார் என்று மிகவும் யோசித்து, ‘கண்டேன் சீதையை!’ என்றார். எப்பேர்ப்பட்ட நேர்மறை வார்த்தைகள்! எதிராளியின் பயம், மனக்கவலை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நொடிப் பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் வார்த்தைகள்! இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி ஸ்ரீ ராமரின் மனதை அமைதிப்படுத்தியதால்தான் அவர், ‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்பட்டார்.
மார்கழி மாத அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய தினத்தில் அவதரித்த ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ரீ ராமபிரானின் அணுக்கத் தொண்டர். இவரை ‘ஸ்ரீ ராமபக்த அனுமன்’ என்று துதித்து வழிபட்டால் அகமகிழ்ந்து போவாராம். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு தனிச் சன்னதி உண்டு. இதைத் தவிர ஸ்ரீ ஆஞ்சனேயருக்கென்றே தனிக் கோயில்களும் உண்டு. எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஸ்ரீ ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். அவர் அந்த இடங்களில் நித்ய வாசம் செய்வதால் அவர், ‘சிரஞ்சீவி‘ என்றழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள். அத்துடன் வெண்ணெய் காப்பு, சிந்தூரக் காப்பு இட்டு அலங்கரிப்பார்கள். இந்த வருடம் ஸ்ரீ அனுமத் ஜயந்தி நாளை டிசம்பர் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாமும் ஸ்ரீ ஆஞ்சனேயரை அன்று வழிபாடு செய்து வணங்கி வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.