மகாளய அமாவாசையன்று முன்னோர்களை திருப்திபடுத்த இந்த 5 விஷயங்கள் மிகவும் முக்கியம்!
ஒரு வருடத்தில் வரும் முக்கியமான மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாகும். மற்ற அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட தவறி இருந்தாலும், மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தால், அது நம்முடைய பல தலைமுறை முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்தி அடைய வைக்கும். மகாளய அமாவாசையன்று மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் செய்யப்படும் தர்ப்பணம், வழிபாடு, தானம் என அனைத்தும் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்திபடுத்துவதற்காகவும், அவர்களின் ஆசியை பெறுவதற்காகவும் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட மகாளய பட்சத்தின் நிறைவான நாளாக வரும் மகாளய அமாவாசையன்று சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
நாளைய தினம் (21,09,2025) மகாளய அமாவாசை. அதிகாலை 1.03 மணிக்கு துவங்கி 22ம் தேதி அதிகாலை 1:42 மணி வரை அமாவாசை திதி உள்ளது. மகாளய அமாவாசை அன்று மறக்காமல் செய்ய வேண்டிய ஐந்து மிக முக்கியமான விஷயங்கள் என்னவென்பதை இனி பார்ப்போம்.
1. எள்ளும் தண்ணீரும் இறைத்தல்: மகாளய அமாவாசையன்று ஒரு அந்தணரை வைத்து முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்ய முடியவில்லை என்றாலும், வீட்டில் எளிய முறையில் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இது நம்முடைய கடந்த கால கர்மாக்களின் சுமைகளில் இருந்து விடுவிப்பதுடன் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியைத் தரும். நம்முடைய மூன்று தலைமுறை முன்னார்களின் பெயர்களைச் சொல்லி அவர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு காசி மற்றும் கயா தலங்களை மனதில் நினைத்துக் கொண்டு எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும்.
2. பிண்ட தானம்: தர்ப்பணம் கொடுப்பதில் மிகவும் முக்கியமானது பிண்டதானம். மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் அல்லது மாவுடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். இந்த பிண்ட தானம் நமக்கு இருக்கும் துன்பங்கள், வளர்ச்சியில் இருக்கும் தடைகள் ஆகியவற்றை நீக்கிவிடும். முறையாக மந்திரங்கள் சொல்லி பிண்ட தானம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
3. தானங்கள்: மகாளய அமாவாசையில் உணவுப் பொருட்கள் அல்லது அத்தியாவசியப் பொருட்களை ஏழைகள், வயதானவர்கள் ஆகியோருக்கு தானமாக அளிப்பது தவறாமல் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். ஆடைகள், பணம் போன்றவை தானமாக அளிப்பதும் சிறப்பு. இது முன்னோர்களின் ஆசிகளை நம்முடைய குடும்பத்திற்கு முழுவதுமாக பெற்றுத் தரும். முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என நினைத்து இந்த தானத்தை செய்யும்போது அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். காகங்களுக்கு உணவு மற்றும் பசுக்களுக்கு கீரை, பழம் போன்றவற்றை அளிப்பது மிகவும் சிறப்பான புண்ணியப் பலன்களைத் தரும்.
4. தீபம் ஏற்றுவது: மகாளய அமாவாசையன்று முன்னோர்களின் படத்திற்கு பூ அல்லது மாலை அணிவித்து அவர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இது முன்னோர்களின் மீதான மரியாதையை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். மண் அகலில் ஏற்றப்படும் தீபமானது, நம்பிக்கை, ஆன்மாக்களுடன் உள்ள தொடர்பை குறிப்பதாகும். முன்னோர்களின் படத்திற்கு முன் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து மனதார அவர்களை நினைத்து நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பதுடன், அவர்களின் ஆசிகளை அருளும்படி கேட்க வேண்டும்.
5. மந்திர ஜபம்: மகாளய அமாவாசையன்று பித்ருக்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அது தெரியாதவர்கள், 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ' என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம் அல்லது கருட புராணம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற புனித நூல்களைப் படித்து இறைவனின் அருளைப் பெற முயற்சி செய்யலாம். நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியையும், நமக்கு துன்பங்களிலிருந்து விடுதலையும் தந்து காக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள வேண்டும்.
மகாளய அமாவாசையன்று நம்முடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனையும், முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வழிபாடுகளும் அவர்களுடைய ஆன்மாக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பை இதனால் வலுப்படுத்தும். இதனால் அவர்களின் மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல ஆசியும் கிடைக்கும். மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெறுவோம்.