பக்தியும் பரிகாசமும்: திருக்கழுகு குன்றம் கழுகு பிரசாத ரகசியம்!

thirukalukundram-temple
thirukalukundram-temple
Updated on

நாம் சில ஊர்களை லேசில் மறக்க முடியாது. அப்படி நான் மறக்க முடியாத ஒரு ஊர்தான் திருக்கழுகு குன்றம். முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது திருக்கழுகு குன்றத்திற்கு செல்வேன். வேதகிரீஸ்வரர் தர்ஷனுக்கு மட்டுமல்லாது அங்கு என்னை மிகவும் கவர்ந்தது குன்றின் உச்சிக்கு தினமும் வருகை தந்து வந்த இரண்டு கழுகுகள்தான்.

இப்போதெல்லாம் அவர்கள் வருவதில்லை கலி முற்றி வருவதால் கழுகுகள் வருவதை நிறுத்திவிட்டன என்று அங்கு கழுகுகளுக்கு உணவளித்து வந்த குருக்கள் கூறினார். இந்த இரண்டு கழுகுகள் சாதாரண கழுகுகள் இல்லை. புஷா மற்றும் விஷாத என்ற இரண்டு ரிஷிகள்தான் கழுகு ரூபத்தில் வந்து சிவபிரசாதம் உண்டு காசி நோக்கி செல்வதாக புராணம். ராமேஸ்வரத்தில் காலையில் குளித்து திருக்கழுகு குன்றத்தில் பிரசாதம் உண்டு காசிக்கு பறப்பதாக குருமார்கள் சொல்வார்கள்.

அந்த காலத்தில் சரியாக உச்சி வேளைக்கு கோவில் குருக்கள் ஒரு சொம்பு தீர்த்தம் மற்றும் கிண்ணத்தில் சக்கரை பொங்கலோடு குறிப்பிட்ட பாறையிலே வந்து அமர்வார். அமர்ந்த பத்து பதினைந்து நிமிடத்திற் கெல்லாம் வானில் இரண்டு பொட்டுக்கள் தெரியும். அவர்களை தரிசிக்க காத்திருக்கும் எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்வார்கள். அவை பெரிதாகி பெரிதாகி கழுக்காகி குருக்கள் அருகில் ஜோராக தண்ணீர் தெளித்து தயாராக இருக்கும் இலைகள் முன் லேண்டாவார்கள்.

இதையும் படியுங்கள்:
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்: நம் கணக்கை எழுதும் சித்திரகுப்தனை எப்படி மகிழ்விப்பது?
thirukalukundram-temple

சிறுவர்களாக இருந்த நாங்கள் கைகள் கூப்பி ரிஷிகளை வணங்குவோம். ஒருமுறை நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னருகில் நின்ற ஒரு பெரியவர் ரிஷிமார்களே காசி விஸ்வநாதரிடம் அடியேன் நமஸ்காரத்தை சொல்லுங்கள் என்று முணுமுணுத்தார் . நான் கடைசியாக கழுகு ரிஷிகளை பார்த்தது எண்பதுகளில். தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே கழுகுகள் வருகை நின்றுவிட்டது. நான் கடைசியாக இந்த திவ்ய பறவைகளை காண சென்றபோதே கழுகுகள் மிகவும் தாமதமாக வந்தன. அப்போது கூடியிருந்த பலர் பக்தர்களாக இல்லை. சுற்றுலா பயணிகள்போல நடந்து கொண்டனர். பலர் கேலியும் கிண்டலும் செய்த வண்ணம் இருந்தனர்.

ஒருத்தன் சொன்னான், ரிஷியாவது கிஷியாவது. இந்த இரண்டு கழுகுகளும் கோவிலே வளர்க்கும் பறவைகள். இதை கேட்ட குருக்கள் 'தம்பி அபச்சார படவேண்டாம். இந்த கழுகுகள் பல நூறாண்டுகளாக வருபவர்கள் .' அதற்கு அந்த அதிகப்பிரசங்கிகள் இளக்காரமாக உரக்க சிரித்தார்கள். பிறகு நான் கேள்விபட்டேன் கழுகுகள் வருவது படிப்படியாக குறைந்து நின்றும் போய் விட்டது. அப்படி நின்ற போதும் குருக்கள் அந்த பாறையில் அமர்ந்து சக்கரை பொங்கல் பிரசாதத்துடன் காத்திருந்து விட்டுத்தான் போகிறாராம். தம் மத கோட்பாடுகளையும் புராணங்களையும் வெளிப்படையாக கேலி செய்வதில் இந்துக்களுக்கு இணை இந்துக்களே. ஆங்கில படங்களில் மனிதன் வௌவாலாகவும் சிங்கமாகவும் ஏன் நாயாக கூட மாறுவதாக காண்பித்தாள் நம்புகிறார்கள். ரிஷிகள் கழுகு ரூபத்தில் வந்து போகிறார்கள் என்றால் கை கொட்டி சிரிக்கிறார்கள்.

இங்கு பிரகாரத்தில் ஒரு சதுர சாளரம் இருக்கிறது. அதிலிருந்து கீழே வேதபுரீஸ்வரர் கோபுரங்களையும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சங்கு தோன்றும் புஷ்கரணியையும் கழுகு கண்கள் கொண்டு (With Eagle's Eye) kaanalaam. அழகாக தோற்றமளிக்கும். கோவில் குளம் தவிர திருக்கழுகு குன்றம் ஊரே பச்சை பசேலென்று வயலும் வரப்புமாக தோற்றமளித்து மெய் சிலிர்க்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
மே மாத ஆன்மீக காலண்டர்: விரத நாட்கள், முகூர்த்த தேதிகள் மற்றும் கோவில் உற்சவங்கள்!
thirukalukundram-temple

இந்த ஊரை சுற்றியுள்ள நான்கு மலைகள் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம் சுயம்பு வாக்கும். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை லிங்கத்தின் அருகில் மின்னல் தாக்குவதாகவும் அந்த மின்னல் சிவபெருமான் வந்து போவதை குறிப்பதாகவும் குருக்கள் சொல்கிறார். சென்னையை சுற்றியே நம்மை ஸ்தம்பிக்க வைக்கும் புராதன ஸ்தலங்கள் உள்ளன. அவற்றுக்கு நாம் எளிதாக வார இறுதிகளில் சென்று வரலாம்.

logo
Kalki Online
kalkionline.com