

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் என்றும், அம்பிகை உண்ணாமுலையம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்தலம் நினைத்தாலே முக்தி தரும் தலம் எனும் பெருமையைக் கொண்ட தலமாகவும் அறியப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகின்றனர். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப்பாதையில் அமைந்துள்ளன.
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலியுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர். குறிப்பாக மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்களும் சனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலையில் மலையை சிவனமாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி மாதந்தோறும் வரும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பொதுவாக மக்கள் வலம் வரும் கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் மாதந்தோறும் வரும் முழு நிலவு நாளில் (பௌர்ணமி) வலம் வருதல் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இதில் ஆண்டுதோறும் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சித்ரா பவுர்ணமி வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பத்கர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பக்தகர்கள் பாதுகாப்பான முறையில் கிரிவலம் செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.