

மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் என்பது 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். பழமையான இக்கோவில் முற்காலச் சோழ மன்னரான முதலாம் பராந்தக சோழனால் கற்றளியாக (கற்கோவில்) மாற்றி அமைக்கப்பட்டது.
மூலவர் கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்
அம்பிகை ஒப்பிலா முலைநாயகி, அதுல்ய குஜாம்பிகை
தல விருட்சம் படர்அரசு
தீர்த்தம் கோமுக்தி, பத்ம தீர்த்தம்
புராணப் பெயர் நந்திநகர், நவகோடி சித்தர்புரம்
தேவாரப் பாடல் பெற்ற தலம்
தல சிறப்புகள்:
ஜீவசமாதி:
பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை இயற்றிய திருமூல நாயனார் 3,000 ஆண்டுகள் வாழ்ந்து இத்தலத்திலேயே முக்தி பெற்றார். அவருடைய ஜீவ சமாதி இத்தலத்தில் அமைந்துள்ளது.
அம்பிகை பசு வடிவில் வந்து இறைவனை பூஜித்ததால் இப்பெயர் பெற்றது. இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பற்றி பாடியுள்ளனர். மூலவர் சுயம்பு மூர்த்தி.
மிகப்பெரிய நந்தி:
இத்தலத்தில் உள்ள நந்தி 14 அடி 9 அங்குலம் உயரமும், 44 அடி நீளமும் கொண்டு தமிழகத்தின் மிகப்பெரிய நந்திகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது தர்ம தேவதையே நந்தியாக அமைந்த வடிவம் என்று நம்பப்படுகிறது.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவ ஸ்தலங்களில் 99ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களுள் 36-வது தலமாகவும் திகழ்கிறது. இங்கு மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் அதாவது சகல தோஷங்களையும் நீக்குபவராக உள்ளதால் இங்கு நவகிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.
அணைத்தெழுந்த நாயகர்:
இத்தலத்தில் ஈசனும் உமையும் தம்பதி சமேதராக அணைத்தெழுந்த கோலத்துடன் காட்சி தருகின்றனர். இந்த கல்யாண சுந்தரர் கோலம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது போன்ற கல்யாணசுந்தரர் கோலத்தினை வேறு தலங்களில் காண்பது மிகவும் அரிது. இக்கோலத்தில் காட்சி தரும் அம்மையப்பனை வழிபட பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேரவும், இல்லற வாழ்வு சிறக்கவும் செய்யும் என்று கூறப்படுகிறது. இவரை வாசனைப் பூக்களால் அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபட தோஷங்கள் நீங்கி மணவாழ்க்கை சிறப்புற அமையும்.
ஞானசம்பந்தர் உலவாக்கிளி பெற்ற தலம்:
ஒரு சமயம் திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர் சீர்காழியில் வேள்வி ஒன்றை நடத்த, அந்த கேள்விக்கு தங்கம் தேவைப்பட்டது. இதற்காக திருஞானசம்பந்தர் திருவாவடுதுறை வந்து கோமுக்தீஸ்வரரை வணங்கி இறைவனை நினைத்து மனமுருகிப் பாடல்களைப் பாடினார். பாடல்களைப் பாடியவுடன் சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி ஆயிரம் பொற்காசுகள் நிரம்பிய பொற்கிழியை திருஞானசம்பந்தருக்கு வழங்கினார்.
திருஞானசம்பந்தர் தனது தந்தையின் வேள்விக்காகப் பொன் வேண்டிப் பதிகம் பாடி, சிவபெருமானிடம் அள்ள அள்ளக் குறையாத 'உலவாக்கிளி' (பொற்கிழி) பெற்ற புனித பூமி இது.
இந்திய சுதந்திர செங்கோல்:
1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நேருவிடம் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர செங்கோல் இக்கோவிலை நிர்வகிக்கும் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டதாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய அந்தத் தங்க செங்கோல் 100 சவரன் தங்கத்தில் உருவாக்கப்பட்டது. 5 அடி நீளம் கொண்ட அந்த தங்க செங்கோலின் உச்சியில் ரிஷப சிலை கம்பீரமாக காட்சி தருகிறது. கைப்பிடியில் தேசத்தின் செழிப்புக்கு அடையாளமாக லட்சுமிதேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
திருமாளிகைத் தேவர் சிறந்த சிவ பக்தர். இவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில் மீது இருந்த நந்திகள் அனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில் மீது நந்திகள் கிடையாது என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு:
ஒரு சமயம் கைலாயத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடிய போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சிவன் அம்பிகையை பசுவாகப் பிறக்கும்படி சபித்தார். பார்வதி தேவி சாப விமோசனம் வேண்ட திருவாவடுதுறை சென்று ஈசனை வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று அருளினார்.
அதன்படி பூலோகத்தில் பசுவாகப் பிறந்து தவம் செய்து ஈசனை அடைந்தார் அம்பிகை. பசு வடிவில் இத்தலத்து மணல் லிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால் இத்தலம் கோமுக்தீஸ்வரர் (கோ என்றால் பசு, பசுவிற்கு முக்தி அளித்ததால் இறைவன் கோமுக்தீஸ்வரர்) என்று பெயர் பெற்றது.
இக்கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எங்குள்ளது?
கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.