
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, தேசம் முழுக்க விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிள்ளையார் இந்து கடவுளாக இந்தியாவில் இருந்தாலும், அவர் வெளிநாடுகளில் வேறு சில மதங்களிலும் கடவுளாக வழிபடப்படுகிறார். அதில் ஒன்றுதான், திபெத்திய புத்த மதத்தில் உள்ள பிள்ளையார் வழிபாடு.
இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான காலாசார பரிமாற்றங்கள் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளன. திபெத்தியர்கள் கல்வி அறிவு பெற பாரதத்திற்கு வந்தனர். இங்குள்ள நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா போன்ற பெரிய கல்விக் கூடங்களில் பயின்றனர். அப்போது இந்தியாவில் சனாதன தர்மம் மேலோங்கி இருந்தது. கிமு காலங்களில் இந்தியாவில் புத்த மதம் தோன்றி பரவத் தொடங்கி இருந்தது. இந்தியாவில் இருந்து கல்வியாளர்கள் சீனா சென்றும் கல்வியறிவை போதித்தனர்.
ஆரம்ப கால புத்த மதத்தினர்: சனாதன தர்மத்தில் இருந்து மாறினாலும் அவர்களால் தங்களது பூர்வ கடவுள்களை மறக்க முடியவில்லை. சீனாவில் புத்த மதத்தினை இந்தியர்கள் பரப்பும்போது தங்களது முன்னாள் கடவுள்கள் மீதான பற்றையும் வெளிப்படுத்திக் கொண்டனர். புத்த மதத்தின் ஒரு பிரிவான வஜ்ராயணத்தில் பல சனாதன தர்மக் கடவுள்களை வழிபாட்டில் ஏற்றுக் கொண்டனர்.
பிள்ளையார் தனது திருவிளையாடலை பாரதத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நேபாள், திபெத், இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மங்கோலியா, ஜப்பான், கம்போடியா ஆகிய நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார். அனைத்து புத்த மத நாடுகளிலும் பிள்ளையார் ஒரு பெரும் தெய்வமாக வழிபாட்டில் இருக்கிறார். பல புத்த மத நாடுகளில் விநாயகருக்கு பெரிய பெரிய சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு எல்லாம் முதன்மையாக இருப்பது திபெத்திய புத்த மதத்தில் விநாயகர் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். திபெத்தில் இருந்துதான் தென் கிழக்கு நாடுகளில் புத்த மதம் பரவியது.
விநாயகர் திபெத்தில் நுழைந்தது ஒரு சுவாரசியமான வரலாறு. தொடக்கத்தில் பிள்ளையார் ஒரு பிரச்னை தரும் நபராகத்தான் தாந்த்ரீக புத்த மதத்தில் பார்க்கப்பட்டார். கி.பி. 8ம் நூற்றாண்டில் குரு பத்மசாம்பவா காலத்தில் விநாயகரை தடைகளின் கடவுளாகக் கருதினார்கள். அந்தக் காலத்தில் புத்த மதம் பரப்புகையில் ஏராளமான தடைகள் தொடர்ந்து ஏற்பட்டபோது, விநாயகர்தான் தடைகளுக்கு காரணம் என்று குரு பத்மசாம்பவா நினைத்தார். இவரை வழிபட்டால் தடைகளை தகர்க்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் பத்மசாம்பவர் தாந்த்ரீக தியானம் செய்து விநாயகரை சமாதானப்படுத்தி புத்த மதத்தின் செழிப்பு கடவுளாக மாற்றினார் என்று திபெத்திய கதைகள் கூறுகின்றன.
கணபதி புத்த மதக் கடவுளான மகாகாலாவுடன் வசிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சக்தியையும் செல்வச் செழிப்பையும் வழங்குகிறார். திபெத்திய ஓவியங்களில் அதிகமாக பிள்ளையார் நடனமாடும் வடிவத்தில் காட்சி அளிக்கிறார். நடனமாடும் விநாயகர் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறார். பின் நாளில் விநாயகர் முன்னேற்றம் பெற்று திபெத்திய கலை மற்றும் இலக்கியங்களில் பல வடிவங்களில் காணப்படுகிறார்.
மகா விகானேஷ்வர்: இவர்தான் முதலில் பல தடைகளை உருவாக்கியவர் என்று புத்த மதத்தினர் நம்பினார்கள். பின்னாளில் அவரது சக்திகள் தடைகளில் இருந்து காப்பதாக, கதை வடிவங்கள் மாறின. அவர் கடுமையான தாந்த்ரீக சடங்குகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்.
மகாகால கணபதி: புத்த மதத்தில் சக்தி மற்றும் செல்வத்தின் கடவுளாகவும் பிள்ளையார் இருக்கிறார். அவர் கையில் தேன், ரத்தினம் மற்றும் பாத்திரத்தை வைத்திருக்கிறார். இந்த வடிவம் செழிப்பு மற்றும் பாதுகாப்பதைக் குறிக்கிறது.
விநாயகர் ஒரு முதன்மையான முழு முதல் கடவுளாக உலகம் முழுவதும் வழிபடப் படுகிறார். உலகளவில் அவர் தடைகளை தகர்க்கும் தெய்வமாகவும், சக்தியை வழங்கி, செல்வத்தையும் அளிக்கும் செழிப்பு மிக்க கடவுளாகவும் வழிபாட்டில் இருக்கிறார். அவர் மதங்களையும் கடந்து இந்தியாவையும் திபெத்தையும் இணைத்துள்ளார்.