

எளிமையான மலையேற்றத்தைக் கொண்ட எல்ல சுற்றுலா தலம்
இலங்கையின் மலையக அழகை முழுமையாகக் கண்டு ரசிக்க விரும்பும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தவறவிடக்கூடாத ஒரு அற்புதமான இடம் எல்ல (Ella). இயற்கை எழிலும், சிலிர்க்க வைக்கும் சாகசங்களும் நிறைந்த இந்த இடத்தின் இரண்டு முக்கிய அடையாளங்களாகத் திகழ்பவை தான் மினி சிவனொளி பாதமலை மற்றும் ‘ஃப்ளையிங் இராவணா’
பசுமை கொஞ்சும் மலையேற்றப் பயணம்: புனிதமான ஸ்ரீ பாத (சிவனொளி பாதமலை) போன்ற கூம்பு வடிவ தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இது ‘மினி சிவனொளி பாதமலை’ என்று அழைக்கப்படுகிறது. இதன் உச்சியை அடைவதற்கான பயணம் மிகவும் எளிதானது மற்றும் ரம்மியமானது. வழியெங்கும் பரந்து விரிந்த பசுமையான தேயிலைத் தோட்டங்கள், வீசும் குளிர்ந்த காற்று, பறவைகளின் ஒலிகள் என இயற்கையின் மடியில் நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
சுமார் 30 முதல் 45 நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு மலையின் உச்சியை அடையலாம். அங்கு நின்று பார்க்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் பள்ளத்தாக்குகளும், ‘எல்ல பாறை’யின் (Ella Rock) பிரமாண்ட தோற்றமும் பயணத்தின் களைப்பை நொடியில் போக்கிவிடும்.
குறிப்பாக, இங்கு இருந்து பார்க்கக்கூடிய சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள் மனதை மயக்குபவை.
சிலிர்க்க வைக்கும் ‘ஃப்ளையிங் இராவணா’ சாகசங்கள்;
மலையேற்றத்தின் அமைதியை ரசித்து முடித்ததும், அடுத்து காத்திருப்பது விறுவிறுப்பான சாகசப் பயணம். மினி சிவனொளி பாதமலையின் அடிவாரப் பகுதியிலேயே அமைந்திருக்கும் ‘ஃப்ளையிங் இராவணா’ சாகசக் பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த விருந்தாக அமைகிறது.
இங்குள்ள முக்கிய ஈர்ப்பு Mega Zipline ஆகும். தெற்காசியாவின் மிக நீளமான ஜிப்லைன்களில் ஒன்றான இதில், மணிக்கு சுமார் 80 கி.மீ வேகத்தில் பசுமைப் பள்ளத்தாக்குகளுக்கு மேலே கயிற்றில் பறந்து செல்லும் அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இது தவிர, ATV பைக் சாகசப் பயணம், கயிற்றில் மலையிறங்குதல் (Abseiling), வில்வித்தை மற்றும் பிரமாண்ட ஊஞ்சல் (Swing) போன்ற பல சாகச விளையாட்டுகளும் இங்கு உண்டு.
மினி சிவனொளி பாதமலையைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் பல பிரபலமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.
1.ஒன்பது வளைவு பாலம் (Nine Arches Bridge):
பிரித்தானியர் காலத்தில் கல், செங்கல் மற்றும் சிமெண்ட் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட பிரமாண்டமான ரயில் பாலம். அடர்ந்த காட்டுக்கும் தேயிலைத் தோட்டங் களுக்கும் நடுவே உள்ள இந்தப் பாலத்தின் மீது நீராவி அல்லது நீல நிற ரயில் கடந்து செல்லும்போது படம் எடுப்பது உலக அளவில் பிரசித்தி பெற்றது.
2.இராவணன் நீர்வீழ்ச்சி & இராவணன் குகை:
இராவணன் நீர்வீழ்ச்சி: வீதியின் அருகிலேயே அமைந்துள்ள மிக அழகான மற்றும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சி. இராவணன் குகை: இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குகை. இராவணன், சீதையை மறைத்து வைத்திருந்த இடங்களில் இதுவும் ஒன்று என நம்பப்படுகிறது.
3.எல்ல பாறை (Ella Rock):
மினி சிவனொளி பாதமலையை விடக் சற்றே கடினமான, நீண்ட மலையேற்றம் (Trekking) செய்ய விரும்புபவர்களுக்கான இடம். காடுகள் மற்றும் ரயில் பாதையைக் கடந்து இதன் உச்சியை அடைந்தால், ஒட்டுமொத்த எல்ல பகுதியின் வான்வழிப் பார்வையைக் காணலாம்.
4.தியலும நீர்வீழ்ச்சி (Diyaluma Falls):
இலங்கையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி. இதன் மேல் பகுதிக்குச் சென்றால், இயற்கையாக அமைந்த பாறைத் தடாகங்களில் நீராடலாம்.
5.தேயிலை தொழிற்சாலைகள்:
‘ஹல்பெவத்த’ (Halpewatte) போன்ற பழமையான தேயிலைத் தொழிற்சாலைகளுக்குச் சென்று, புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ (Ceylon Tea) எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்த்து, சுவைக்கலாம்.
இயற்கை எழிலும் நவீன சாகசமும் கைகோர்க்கும் மினி சிவனொளி பாதமலையும், அதை சுற்றி உள்ள பகுதிகளும் ‘ஃப்ளையிங் இராவணா’வும் இலங்கையின் சுற்றுலா மகுடத்தில் வீற்றிருக்கும் மிளிரும் மணிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இயற்கையின் அமைதியையும் நவீன சாகசங்களின் சிலிர்ப்பையும் ஒரே பயணத்தில் முழுமையாக அனுபவித்து மனநிறைவைப் பெறலாம்.