

முக்பா (Mukhba) அல்லது முக்வா என்பது உத்தரகாண்டின் ஹர்சில் (Harsil) பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு அமைதியான கிராமம். குளிர் காலத்தில் (தீபாவளி முதல் அட்சய திருதியை வரை) இப்பகுதியில் பெய்யும் கடும் பனிப்பொழிவின் காரணமாக கங்கோத்ரி கோயில் மூடப்பட்டிருக்கும் பொழுது, கங்காதேவியின் சிலை வைக்கப்படும் "குளிர்கால இருக்கை" Winter Abode) யாகும். கங்கோத்ரியிலிருந்து 20 கிலோமீட்டர் கீழே உள்ள இந்த முக்பா கிராமத்தில் குளிர்காலத்தில் கங்கையை வழிபடலாம்.
ஹர்சில் பள்ளத்தாக்கு:
ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் பைன் காடுகளைக் கொண்ட அதன் அமைதியான கிராமம் மற்றும் அதன் உள்ளே ஓடும் பாகீரதி நதி ஆகியவற்றின் காரணமாக ஹர்சில் இந்தியாவின் மிக அழகான இமயமலைப் பகுதியில் ஒன்றாக விளங்குகிறது. இது இயற்கை ஆர்வலர்களுக்கும் மலையேறுபவர்களுக்கும் மிகவும் ஏற்ற இடமாகும்.
கங்கா தேவிக்கான கோவில்:
சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு இங்குள்ள ஆன்மீகம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முக்பாவில் கங்கை தேவிக்கு இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. இவை தேவதாரு மரம் மற்றும் பித்தளையால் கட்டப்பட்ட பழமையான கோவில் கட்டுமானங்கள் மற்றும் கான்கிரீட், பளிக்கு கற்களால் கட்டப்பட்ட ஒரு புதிய கோவில் என இரண்டு உள்ளது.
உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,620 மீட்டர் உயரத்தில் ஹர்சில் பள்ளத்தாக்கில் கோவில் அமைந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக கங்கோத்ரி கோவில் மூடப்படும் பொழுது கங்கா தேவி இங்கு கொண்டுவரப்பட்டு வழிபடப் படுகிறாள். அழகிய இமயமலை காட்சிகள் மற்றும் மரத்தாலான பாரம்பரிய வீடுகள் கொண்ட இந்த கங்காதேவியின் புனித யாத்திரை மிகவும் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று.
தீபாவளி நாளில் கங்கோத்ரி கோவில் மூடப்பட்ட பிறகு, கங்காதேவியின் பல்லக்கு பூசாரிகளால் வெகு விமர்சையாக முக்வா கிராமத்தில் உள்ள கங்கர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மே மாதத்தில் அட்சய திருதியை அன்று கங்காதேவி மீண்டும் கங்கோத்ரிக்கு திரும்பும் வரை பக்தர்கள் இங்கேயே தேவியை தரிசிக்கிறார்கள்.
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
தராலி கிராமம்:
ஹர்சிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் புகழ்பெற்ற ஆப்பிள் தோட்டங்கள் நிறைந்த இடமாகும்.
சட்டால்:
அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அழகான இடத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஏழு நீர்நிலைகள் உள்ளன. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் விரும்பும் இடமாக உள்ள இந்த ஏழு ஏரிகள் உள்ள பகுதிக்கு வருகிறார்கள்.
பைரவ் காட்டி:
ஹர்சிலில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஜாத் கங்கா மற்றும் பாகீரதி நதி சங்கமிக்கும் இடத்தில் பைரவநாதரின் புனிதத் தலம் கரடுமுரடான நிலப்பரப்பு கொண்ட மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
ரிஷிகேஷில் இருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு பஸ் அல்லது டாக்ஸி மூலம் ஹர்சில் வழியாகச் செல்லலாம்.
தங்குமிடம் மற்றும் செல்ல ஏற்ற நேரம்:
நவம்பர் முதல் ஏப்ரல் வரை குளிர்கால பயணத்திற்கு ஏற்றது. முக்பாவில் உள்ளூர் வீடுகள் (Homestays) மற்றும் ஹர்சிலில் ஹோட்டல்கள் உள்ளன.
முக்பாவில் ஓரிரு தேநீர் கடைகளைத் தவிர பெரிதாக உணவகங்கள் எதுவும் இல்லை. ஹர்சில் மற்றும் தராலியில் சாலையோரங்களில் ஏராளமான உணவகங்களும், தாபாக்களும் உள்ளன. எனவே ஹர்சில் மற்றும் தராலியில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம். இங்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோட்டல்கள் கிடைக்கின்றன. அவை சுத்தமாகவும், நன்கு பராமரிக்கப்பட்டும் வருகின்றன.