

இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் ஷில்லாங் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் "ஆசியாவின் தூய்மை கிராமமாக" 2003 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாவ்லின்னாங் கிராமம் உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கும் உள்ளூரில் இருக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் இடையே ஒருவித சமநிலையை உருவாக்க மாவ்லின்னாங் (Mawlynnong) கிராமம் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் கிராமத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆசியாவின் தூய்மை நகரமான மாவ்லின்னாங் கிராமத்தின் உள்ளூர் சபையாக இருக்கும் 'தர்பார்' (Darbar) இந்த முடிவை எடுத்து 2026 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே உள்ளூர் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஆசியாவின் தூய்மை கிராமத்திற்கு சுற்றுலா வரமாக இருந்தாலும் ஒழுக்கம், தூய்மை மற்றும் வலுவான சமூகப் பிணைப்பை கொண்ட இந்த சிறிய கிராமத்திற்கு சுற்றுலா மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் மாவ்லின்னாங் கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மேகாலயாவின் அண்டை நகரங்களிலிருந்தும் ஷில்லாங்கிலிருந்தும் ஒரு நாள் பயணமாக வருகை புரிகின்றனர்.
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கிராம மக்களுக்கு சுற்றுலா வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் தங்கும் விடுதிகள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை மூலம் பலருக்கும் வாழ்வாதாரம் கிடைத்து பொருளாதார நிலை மேம்பட்டிருந்தாலும், மக்கள் தொடர்ந்து சுற்றுலா வருவதால் உள்ளூர் மக்களின் வாழ்க்கை பாதிப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே அவர்களின் வழிபாட்டிற்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமையில் பாரம்பரியமான தேவாலய வழிபாடுகள், குடும்ப நிகழ்ச்சிகள், ஓய்வுக்கென ஒதுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முக்கியமான நாளாக இருக்கிறது.
ஆகவே ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் இக்கிராம மக்கள் தங்களுடைய வழிபாடு, ஓய்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு கூட்டத்தை நிர்வாகம் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.
இந்த சிக்கலை தீர்த்து இங்குள்ள கிறிஸ்தவ கிராம மக்கள் தங்களுடைய வழிபாடு, ஓய்வு, குடும்ப நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் உள்ளூர் கிராம சபையான 'தர்பார் ',சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் இக்கிராம மக்கள் சுற்றுலா அழுத்தத்தில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுதலை அடைந்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
தங்கும் விடுதிகளில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளுக்கு தடை என்பதன் மூலம் கணிசமாக கூட்டம் குறைந்து சுற்றுச்சூழலை பராமரிக்க உதவுகிறது. இதனாலேயே இங்குள்ள கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக கடுமையான தூய்மை பழக்கங்களை பின்பற்றி கிராமத்தை பாதுகாத்து வருகின்றனர்.
வீதிகள் தோறும் குப்பைகளை சேகரிக்க மூங்கில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதோடு, முறையாக கழிவுகள் தரம் பிரிக்கப்படுகிறது. மேலும் நெகிழி பயன்பாடும் இல்லை என்பதால் கிராமமே பளபளப்பாக காட்சி தருகிறது. இங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கிராமத்தின் சுத்தத்தில் பங்கெடுப்பதால் 'மாவ்லின்னாங்' மிகவும் பிரபலமான மேகாலயாவின் கிராமப்புற சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.