குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக்கில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிஷ்களங் மகாதேவ் சிவன் கோவில். இது கடலுக்குள் அமைந்துள்ளது.
கோவில் அரபிக் கடலுக்குள் உள்ளது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் நம்மால் கொடியையும் ஒரு துணையும் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அன்று நாங்கள் சென்ற சமயம் அலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஐந்து சிவலிங்கங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
நாங்கள் விடியற்காலை 6 மணிக்கு நடக்க ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் விலகி நாங்கள் மெதுவாக நடந்து சென்று எட்டு மணி வாக்கில் தரிசனம் கிடைத்தது. சூரிய உதயத்தையும் கண்டு களித்தோம்.
நிஷ்களங்கேஷ்வரர் என்றால் களங்க மற்றவர், குற்றமற்றவர் என்று பொருள்.
பாரதப்போரில் பாண்டவர்கள் கௌரவர்களை கொன்று பாரதப்போரை வென்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரையின்படி பாவத்தை தீர்க்க ஐவரும் சிவலிங்கத்தை நட்டு வழிபட்டார்கள். இவர்களின் பாவங்கள் அனைத்தையும் இங்குள்ள ஈசன் போக்கி அருளியதாக வரலாறு கூறுகிறது.
போரில் வென்ற பாண்டவர்கள் சிவனை வழிபட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. தருமர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் பூஜித்த ஐந்து லிங்கங்களும் மிக அழகாக காட்சி தருகின்றன.
இந்த ஆலயத்தின் கல் கொடி மரம் 30 அடி உயரம் உள்ளது. இதுவரை வீசிய புயல்களாலும், 2001ல் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தாலும் இந்தக் கொடிமரம் எந்த சேதமும் இல்லாமல் அசையாமல் நிற்கிறது.
காலை 8 மணி முதல் தண்ணீர் விலகி கடவுளைச் சென்று தரிசனம் செய்ய முடியும். நாங்கள் கொண்டு சென்ற பால், வில்வ இலைகள், மற்றும் பூக்களால் பூஜித்து வழிபட்டோம்.
கடல் நீர் உள்வாங்கியவுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பாதையில் ஒரே சகதியும் மண்ணுமாக இருக்கும் நிலையில் கால் பதித்து நிதானமாக செல்ல வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல் நீர் விலகி சிவனை தரிசிக்கும் பேறு கிடைக்கிறது.
தொகுப்பு; கே.எஸ். கிருஷ்ணவேணி