

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் என்ற ஊர். இங்கு இறைவனின் திருநாமம் அட்சயபுரீஸ்வரர் (Akshayapureeswarar Temple). இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டமும் உள்ளது.
கால் ஊனம் நீங்கப் பெற்ற சனி பகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் அருள்கிறார். அவரே இந்த ஆலயத்தின் மூலவராக அருள் பாலிக்கிறார். அத்துடன் சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணம் ஆகும் அருளையும் வழங்கினார். பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும், அவரது புத்திரர் சனி பகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
கால் ஊனமான சனி பகவான்
சனி பகவானுக்கும், தம்பி எமதர்மனுக்கும் எப்போதும் பகைமை உள்ளதால், எமதர்மன் சனிபகவானின் காலில் அடிக்க சனியின் கால் ஊனமானது. கால் ஊனத்துடன் அது சரி செய்ய நிவாரணம் தேடி மனித உருவில் பிச்சை ஏந்தி அந்த தானியங்களைச் சமைத்து ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தார்.
ஊர் ஊராக சுற்றி வந்த சனி பகவான் விளா மரங்கள் நிறைந்த கிராமத்திற்கு சென்றார். அங்கு ஓரிடத்தில் விளாமர வேர் தடுக்கி நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார்.
சனிபகவான் பள்ளத்தில் விழுந்த போது சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியுடன் கூடிய அந்த புனித நாள் அட்சய திருதியை நாள். அவர் விழுந்த இடத்தில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த ஞானத் தீர்த்தம் சுரந்து சனி பகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் சரியானது சனி பகவான் விளாமரம் தடுக்கி விழுந்ததால் இந்த தீர்த்தம் குளமானது. அதுவே விளம்குளம் என்று அழைக்கப்பட்டது. தற்போது விளங்குளம் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.
சனிதோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள அட்சய புரீஸ்வரர் அபிவிருத்திகை நாயகிக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து பிரகாரத்தில் காகத்தை கூப்பிட்ட உணவு படைக்கின்றனர். காக்கை அந்த உணவை புசித்தால் அவர்களது சனி தோஷம் அறவே விலகியதாக நம்பப்படுகிறது.
இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சேமேதரராக தனது மனைவியர் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் எழுந்தருளி இருக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே, சனி பகவான் அந்த காகத்தினை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
சனி பகவான் சிவபெருமானை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றதால் இங்கே அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இவரை 'ஆதி பிருஹத் சனீஸ்வரர்' என போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால் 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால் சனியின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். அவரின் அருளை பெறலாம் என்கிறது ஸ்தல புராணம்.
ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். சனி பகவானை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயம் தோஷ நிவர்த்தி நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஆலயம் ஆகும். இங்கு உடல் ஊனமுற்றவர்கள் குறைபாடு உள்ளவர்களின் கால் வலி நீங்க, திருமண தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஆலயம் ஆகும்.
அட்சய திருதியை
அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம்.
அட்சய திரிதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் காப்பிட்டு வழிபடுதலும், சனி பகவானுக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பும் செய்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
அன்றைய நாளில் இறைவனையும், இறைவியையும் வணங்கினால் செல்வம் பெருகும். வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை திருவிழா மிகசிறப்பாக நடைபெறும். அட்சய திருதியை நாளில் இக்கோவிலுக்கு சென்று வணங்கி இறைவனின் அருளைப் பெறலாம்.