

இராமாயண காவியத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் , தங்களது பின்னணியில் ஏதோ ஒரு கருத்தை மக்களுக்கு பாடமாக சொல்ல வருகிறது. அதனால், இராமாயணம் படிக்கும் போது அதை ஆழ்ந்து படித்து அதன் கருத்துக்களை உணர வேண்டும் . இந்த காவியத்தில் வரும் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்கள் தான் வானர அரசன் வாலியும் அவனது தம்பி சுக்ரீவனும் (Vali and Sugreeva). இந்த இருவரையும் பற்றி நாம் முன்பே அறிந்து இருப்போம். ஆனாலும் அவர்களின் பிறப்பு ரகசியம் பலருக்கும் தெரிவதில்லை. அது பற்றிய தகவல்களை இங்கு பார்ப்போம்.
வாலியும் சுக்ரீவனும் இராமாயணக் கதையின் கருத்தை உணர்த்தும் வகையிலும், அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதையும், தங்களின் வரலாற்றின் மூலம் முன் கூட்டியே யூகங்களை ஏற்படுத்தி விடுகின்றனர். இவர்கள் ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை; அவர்களின் தோற்றம் பற்றிய கதை ஆச்சர்யம் மிகுந்தது.
வாலி, சுக்ரீவன் பிறப்பு ரகசியம்:
இராமாயணம் மற்றும் சில உப புராணங்களில் வரும் கதைகளின் படி, வாலியும் சுக்ரீவனும் சாதாரணமாக பிறக்கவில்லை. பிரம்ம தேவர் சில காரணங்களினால் ஒரு ஏரியை சபித்து இருப்பார். அந்த ஏரியில் நீராடும் ஆண்கள் யாரும் பெண் தோற்றத்திற்கு சிறிது காலம் மாறிவிடுவார்கள் என்பது தான் அந்த சாபம் . இது தெரியாத வானர அரசன் ரிஷ்ராஜ் அந்த ஏரியில் நீராடிவிட்டு கரையேற, அழகிய பெண் உருவிற்கு மாறி விடுகிறார் .
அந்த நேரத்தில் அந்த பகுதியில் உலா வந்த இந்திரனும் சூரியனும் ரிஷிராஜின் பெண் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டனர். இந்திரனின் பார்வை அவள் தலைமுடியில் விழுந்தது, அதிலிருந்து வாலி பிறந்தான். சூரியனின் பார்வை அவள் கழுத்தில் விழுந்தது, சுக்ரீவன் அதிலிருந்து பிறந்தான். இந்த காரணத்தினால் தான் வாலியை இந்திரன் மகன் என்றும் , சுக்ரீவனை சூரியனின் மகன் என்றும் அழைக்கின்றனர். இருவரும் பிறந்த உடன் ரிஷ்ராஜ் தன் இயல்பான வானரத் தோற்றத்தை அடைந்தான். அதன் பின்னர் தன் இரு குழந்தைகளையும் எடுத்துச் சென்று வளர்த்து வந்தான்.
வாலியின் சிறப்பு:
வானர சகோதரர்கள் இருவரும் மிகுந்த அன்போடு காட்டில் வளர்ந்து வந்தனர். கிஷ்கிந்தா ராஜ்ஜியத்தின் அரசனாக வாலி இருந்தான். வாலிக்கு ஒரு வரத்தினையும் ஒரு தெய்வீக ஆரத்தையும் இந்திரன் வழங்கி இருந்தான். வாலி பெற்ற வரத்தின்படி , அவன் முன்னால் இருக்கும் ஒருவரின் பலத்தில் பாதி அவனுக்கு வந்து சேர்ந்து விடும். இதனால், வாலியை எவராலும் வீழ்த்த முடியாமல் போனது. இலங்கை அதிபதி இராவணன் கூட வாலியின் வாலில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமான கதையும் உண்டு.
சுக்ரீவனின் சிறப்பு:
சூரியனின் மகன் சுக்ரீவன் நல்ல பலசாலியாக இருந்தார். இருந்தாலும் வாலியின் வரம் சுக்ரீவனை வெல்ல முடியாமல் செய்தது. சுக்ரீவன் ஞானம் மற்றும் நீதியின் அடையாளமாகக் கருதப்படுகிறார். சூரியன் தன் மகனுக்கு அனுமான் வடிவில் ஒரு நண்பரை வழங்கினார். ஹனுமான் மிகவும் பலசாலியாகவும் , சுக்ரீவனை காக்கும் நண்பராகவும் இருந்தார்.
ஒரு தவறான புரிதலின் படி வாலிக்கும் சுக்ரீவனுக்கும் பகை ஏற்பட இருவரும் சண்டையிட்டு பிரிய நேர்ந்தது. சுக்ரீவனின் மனைவியை அபகரித்து விட்டு , அவனைக் கொல்ல வாலி அலைந்தான். ஹனுமான் துணையுடன் சுக்ரீவன் ரிஷ்யமுக பருவதத்தில் வசித்து வந்தான். ஒரு சாபத்தின் காரணமாக வாலி இந்த மலைக்கு வரமாட்டான். சுக்ரீவனும் ஹனுமானும் ராமரின் வருகையை எதிர்பார்த்து ரிஷ்யமுக பருவதத்தில் காத்துக் கொண்டிருந்தனர்....
அதற்குப் பின்னான இராமாயண கதைதான் நமக்கு தெரியுமே!