

வரும் மார்ச் 23, 2026 ம் நாள் (திங்கட்கிழமை) மிகவும் பிரசித்தி பெற்ற 'மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்தாழி உத்ஸவம்.
இந்தக் கோயிலில் ஶ்ரீ மணவாள மாமுநிகளுடைய நியமனப்படி அனைத்து விழாக்களும் ஶ்ரீ பாஞ்சராத்ரா ஆகம வல்லுனர்கள் ஆன தீக்ஷ்தர்கள் எனப்படுவோரால் நடத்தப்பட்டு வருகின்றன.
18 திருவிழாவில், பலவித வாகனங்கள் உடன் 18 நாட்கள் மட்டுமன்றி அதற்கு மேல் 12 நாட்கள் விடையாற்றி உத்சவமும் நடைபெறும் ஒரே திவ்ய ஷேத்திரம் இந்த மன்னார்குடி மட்டும் தான்.
18 நாட்கள் உத்சவத்தில் 32 திருகோலங்களில் ராஜகோபாலன் சேவை சாதிப்பார்.
இதில் மிக முக்கியத் திருவிழா வெண்ணெய்தாழி விழா.
காலை 7 மணிக்கு 17ம் திருநாள் காலையில் ஶ்ரீராஜகோபாலன் பெருமாள் நவநீத கிருஷ்ணன் ஆக 20 லிட்டர்க்கு மேல் பிடிக்கும் வெள்ளி வெண்ணெய் குடத்தை இடது கையினால் தாங்கி, ஒரு கால் முன்னும் இன்னொரு கால் பின் புறமும் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த அபூர்வ மான காட்சி, 'சொர்க்கமே ஆனாலும் நம் ஊர் கோபாலன் வெண்ணெய் தாழி போல ஆகுமா?' என்று பாடத்தோன்றும்.
மற்ற திவ்யதேசங்களில் நீங்கள் இந்த வெண்ணெய் தாழி உத்சவத்தைச் சேவித்து இருக்கலாம். ஆனால் மன்னார்குடி வெண்ணனைதாழி உற்சவம் மட்டுமே சிறப்பு.
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன்
என் அமுதினைக் கண்ட
கண்கள்.... மற்றொன்றினைக் காணாவே!
திருப்பாணாழ்வார் பாசுரம் படி கோபாலன் அழகை சேவிக்கிறோம்.
கோபாலன் மேனியில் வெண்ணெய் அடிப்பது பெருமை மிகு விஷயம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை கோபாலனுக்கு வெண்ணெய் சமர்பிப்பது ஐதீகம். யாதவக் குல மக்களுக்காகக் கோபாலன் வெண்ணெய் உண்ணும் விழா இந்த வெண்ணெய் தாழி திருவிழா.
ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூவரசு இலையில் வெண்ணெய் விற்பவர்களிடம் வெண்ணெய் வாங்கி, அந்தக் கூட்டத்தில் கோபாலன் மீது அடிப்பது என்பது ஒவ்வொரு பந்துளையும் sixer அடிப்பது போல் உணர்வு.
கோபாலன் மேனி முழுவதும் வெண்ணெய்! கோபாலன் மேனி மட்டுமா வெண்ணெய்?! கோபாலனுடன் கூடவே சேர்ந்து வரும் அர்ச்சகருக்கும் வெண்ணெய் குளியல் தான். அவர் உடம்பு, மூக்கு, கண், காது, கை, நெற்றி முழுவதும் வெண்ணெய் மழை தான்.
பூவரசு இலையில் வந்த வெண்ணைப் பிரசாதத்தைக் கொத்து கொத்தாக எடுத்து அவர் திரும்பப் பக்தர்களுக்குக் கொடுக்கும் போது எங்கிருந்தோ வந்த அம்பு மாதிரி பக்தர்களின் வெண்ணெய் அவர் மேல் வந்து விழும்.
இரண்டு மணிக்கு வெண்ணெய்தாழி, மண்டபம் போய்ச் சேரும். கடைத்தெரு வழியாகச் செல்லும் பெருமாள் முகத்தில் திரளான மக்கள் வெண்ணையை அவர் முகத்தில் அடிப்பார்கள்.
கடைத்தெரு முழுவதும் கையைப் பிடிக்காத குறையாகப் "பானகம் சாப்பிடுங்கள், நீர் மோர் சாப்பிடுங்கள்" என்று சொல்லும் பாங்கே தனி. இதைத் தவிர்த்து உணவு பொட்டலங்கள் வேறு.
மதியம் 3 மணிக்கு வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம். ஶ்ரீ ராஜகோபாலன் ஒற்றை வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கையில் துலாக்கோல் ஒன்று ஏந்தியிருப்பார்.
பின் 6 மணிக்கு அந்தக் கோலம் கலைக்கப்பட்டு வெட்டும் குதிரையில் செட்டி தெருவில் மூன்று முறை வையாலி வான வேடிக்கைகள் கண்கொள்ளா காட்சி.
பின் எட்டு மணிக்கு அங்கிருந்து திருப்பாற்கடல் மண்டபம் போய்ச் சேருவார். கள்ளர்களுடைய மண்டகப்படி வான வேடிக்கைகள் கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நடக்கும்.
என்னை விட வயதானவர்கள் இந்தியா முழுவதும் இருக்கும் மன்னை வாழ் மக்கள் சேவிக்க வந்து இருக்கும் போது அந்த அளவு கோபாலன் மீது அவர்களுக்குத் தீவிர காதல் என்று தானே சொல்ல வேண்டும் .
கோபாலன் தண்டையுடன் வளைந்த கால். அவன் புன்னகை மறக்க முடிய வில்லை. ஏன் ஏன்?