

பாண்டியர், சேதுபதி மன்னர்கள் காலத்திலிருந்து வளர்ச்சி பெற்ற நயினார் கோயில், தென் தமிழகத்தின் முக்கிய நாக வழிபாட்டு சிவத்தலமாக கருதப்படுகிறது. நாகநாத சுவாமி, சௌந்தர நாயகி அம்பாளை தரிசிக்க முன் விநாயகரையும் நாகப்புற்றையும் வணங்குவது மரபு. பிரதோஷம், மகாசிவராத்திரி, சோமவாரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற, குடும்ப ஒற்றுமை, மன அமைதி, வளமான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள நயினார் கோயில், பல நூற்றாண்டுகள் பழமையான சிவத்தலமாகும்.. மூலவராக நாகநாத சுவாமி அருள் பாலிக்க, அம்பாளாக சௌந்தர நாயகி பக்தர்களுக்கு அருள் வரங்கள் வழங்குகிறார்.
"நாகநாதர்" என்ற திருநாமமே இத்தலத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. நாகங்கள் வழிபட்ட சிவலிங்கமாக இந்த தலம் போற்றப்படுகிறது என்ற தலபுராண நம்பிக்கை நிலவுகிறது. அதனால் நாக தோஷம், ராகு, கேது தோஷம் தொடர்பான பரிகார வழிபாடுகளுக்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
இக்கோயிலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள நாகப்புற்று ஆகும். பக்தர்கள் அந்த நாகப்புற்றுக்கு அருகில் நாக வழிபாடு செய்து பால் மஞ்சள், மலர்கள் சமர்ப்பித்து குடும்ப நலம், குழந்தைப்பேறு, திருமணத் தடைகள் நீங்குதல் போன்ற வேண்டுதல்களைச் செலுத்துகின்றனர்.
அங்கே தொட்டில் வாங்கி குழந்தைபேறு வேண்டி பல பக்தர்கள் தொட்டில் கட்டுவதைப் பார்க்கலாம். குழந்தை பிறந்ததும் ஆணாக இருந்தால் நாகநாதன் என்ற பெயரும் பெண்ணாக இருந்தால் சௌந்தர நாயகி என்ற பெயரும் வைப்பதாக குறிப்பாக இக்கோவிலைக் குலதெய்வமாக வழிபடுபவர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது.
சௌந்தர நாயகி அம்மன் சன்னதியிலும் பெண்கள் அதிக பக்தியுடன் வழிபடுகின்றனர். குடும்ப ஒற்றுமை,மன அமைதி, வளமான வாழ்க்கை கிடைக்க அம்பாளை வழிபடுகிறார்கள். பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, கார்த்திகை, சோமவாரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்கின்றனர்.
தல புராணம்.
நயினார் கோயில் நாகநாத சுவாமி கோயில் தல புராணத்தின்படி நாகங்கள் சிவபெருமானை வழிபட்டு அருள் பாலித்த தலமாக இது போற்றப்படுகிறது. நாக அரசன் இத்தலத்தில் தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இறைவன் ", நாகநாதர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.
தேவாரத் தொடர்பு
இந்த தலம் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று அல்ல. இருப்பினும் தென் தமிழகத்தில் நாக வழிபாட்டுடன் தொடர்புடைய முக்கியமான சிவத்தலமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
கோயிலின் வரலாற்றுப் பின்னணி
நயினார் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவத்தலமாகும். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இத்தலம் வளர்ச்சி பெற்றதாகவும் பின்னர் சேதுபதி மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் உள்ளூர் மரபுகள் கூறுகின்றன. கோயிலின் கட்டிடக் கலை, கற்சிற்பங்கள், மண்டப அமைப்புக்கள் அதன் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
நயினார் கோயிலில் இறைவனைத் தரிசிக்கும் பக்தர்கள் முதலில் விநாயகரை வழிபட்டு பிறகு கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள நாகப்புற்றை வணங்கி பின்னர் நாகநாத சுவாமியையும் சௌந்தர நாயகி அம்பாளையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது. பால், மஞ்சள், மலர்கள் மற்றும் நாகருக்கு உரிய சிறப்பு அர்ச்சனைகள் செய்து குடும்ப நலன், உடல் நலம், திருமண யோகம், குழந்தை பேறு ஆகியவற்றை வேண்டுகின்றனர்.
கோயிலின் அமைதியான சூழல் பக்தர்களுக்கு மன நிம்மதியை அளிக்கிறது. தினமும் நடைபெறும் காலசந்தி, உச்சி காலம், சாயரட்சை பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனின் அருள்பெற பல பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பழமையான கட்டிடக் கலை, இறைநம்பிக்கையுடன் கலந்த தல புராணம் மற்றும் நாக வழிபாட்டின் சிறப்பு ஆகியவை இணைந்து இந்த தலத்தை தென் தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக உயர்த்தி நிறுத்துகின்றன.
பரமக்குடி அருகே உள்ள நயினார் கோயில் சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி திருக்கோயில் சில பக்தர்களுக்கு மட்டும் அல்ல நாக வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. நாகநாத சுவாமி மற்றும் சௌந்தர நாயகி அம்பாளை வழிபட்டால் வாழ்க்கையில் அமைதி, நம்பிக்கை ஆரோக்கியம் சுபிட்சம் மற்றும் இறையருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.