

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ளது இந்த வானமாமலை பெருமாள் கோவில். திருநெல்வேலியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் நாங்குநேரி அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் இந்த இடம் 48-வது திவ்ய ஸ்தலமாகும். திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்.
எட்டு முக்கிய சுயம்பு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. தினசரி மூலவருக்கு சாற்றப்படும் எண்ணெய் தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த எண்ணெய் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
திராவிட கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மூலவர் வானமாமலை பெருமாள் இவரை தோத்தாத்ரிநாதர் என்றும் அழைக்கிறார்கள்.
தாயார் வரகுண மங்கை நாச்சியார். தீர்த்தம் தாமரை புஷ்கரணி.
பெருமாளுக்கு தினசரி நடைபெறும் எண்ணெய் அபிஷேகம் இங்குள்ள கிணற்றில் சேமிக்கப்படுகிறது. அதை நாழிக்கிணறு எனக் கூறுகிறார்கள்
சித்திரை பிரமோற்சவம், வைகாசி உற்சவம், தை அமாவாசை தைலக்காப்பு உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது
ஆதிசேஷன் தவமிருந்து பெருமாளை வழிபட்ட ஸ்தலமாகும். அதனால், நாகனை சேரி என அழைக்கப்பட்டது. பின்னர் மருவி நாங்குநேரி என மாறியது. மேலும் இந்த ஊரில் நான்கு ஏரிகள் உள்ளதால் நான்கு ஏரி ஊர் என அழைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பின்னர் மருவி நாங்குநேரி ஆனது என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஆகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள் எனப்படுகிறார். இங்குள்ள தலவிருட்சம் மாமரம் ஆகும்.
பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம், நரசிம்ம புராணம் போன்றவை இந்த ஸ்தலத்தில் பேசப்படுகிறது.
உரோம முனிவர் தவம் செய்த இடமாகும். ஸ்ரீ வர மங்கை இந்த இடத்தில் தவமிருந்து பெருமாளை மனம் செய்து கொண்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. மரங்கள் நிறைந்த வனமும் மலையும் உள்ள பகுதியாக விளங்கியதால் இங்கு உள்ள பெருமாளுக்கு 'வானமாமலை' என பெயர் வந்தது.
இந்த கோவிலில் உள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னன் காரி என்பவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, அந்த காரி மன்னன் திருக்குறுங்குடி நம்பி ராயரை வழிபடச் சென்றார். நம்பி ராயர்மன்னன் கனவில் தோன்றி, "நீ நாங்குநேரியில் சுயம்புவாக இருக்கும் பெருமாளை அடையாளம் கண்டு அவருக்கு கோவில் கட்டி வழிபாடு செய்..! உனக்கு குழந்தை பிறக்கும்" என்று கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி மன்னன் காரி நாங்குநேரி வந்து அங்கு சுயம்புவாக உள்ள பெருமாளை தேடி கண்டுபிடித்து பெருமாளுக்கு கோவில் கட்டி வழிபட்டார். அந்த மன்னனுக்கு பிறந்த குழந்தைதான் நம்மாழ்வார் பெருமாள்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக காட்சியளிக்கிறார் பெருமாள். இவர்களுக்கு ஊர்வசி திலோத்தமை சாமரம் வீசுகிறார்கள். கருவறையில் பிருகு முனிவர் மார்க்கண்டேயன் சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கியபடி காட்சியளிக்கின்றனர்.
இங்கு 13 விக்கிரகங்கள் சுயம்புவாக உள்ளன. பெருமாள் வைகுண்டத்தில் எப்படி காட்சியளிக்கிறாரோ அதேபோன்று இங்கும் காட்சி தருகிறார். இங்குள்ள கோவில் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அனுமனை இராமன் அணைத்தபடி உள்ள சிற்பம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
இவை தவிர பீமன், புருஷோத்தமன் ஆகியோர்களின் சிலைகளும் உள்ளன. தினசரி எண்ணெய் காப்பு நடைபெறும். அதிலும், சனிக்கிழமை நடைபெறும் எண்ணெய் காப்பு விசேஷமாக இருக்கும் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சனிக்கிழமை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சர்க்கரைப் பொங்கல் புளியோதரை செய்து கொண்டு வந்து சுவாமிக்கு படைப்பார்கள்.
தை மாதம் எண்ணெய் காப்பு, பங்குனி உற்சவம் திருக்கல்யாணம் போன்றவை வெகு விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு நடைபெறும். அதாவது, மூன்று கொப்பரை எண்ணெய் சேகரிக்கப்பட்டு பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.
பெருமாளுக்கு தினசரி தைல அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த எண்ணையை சேகரித்து கோவில் கிணற்றில் ஊற்றி விடுவார்கள். இந்த எண்ணெய்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த எண்ணையானது பலவிதமான சரும நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.
பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் எண்ணெய் வாங்கி பெருமாளுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்தக் கோவிலில் 11 சுயம்பு மூர்த்திகள் உள்ளார்கள். வானமா மலை ஜீயர் சுவாமிகளின் தலைமையிடம் இங்குதான் உள்ளது
இந்த கோவிலில் உள்ள தாயார் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் இருந்தது. ஜீயர்சுவாமிகள் தான் இந்த உற்சவர் சிலை நாங்குநேரி வானமாமலை பெருமாளுக்கு உரியவர் என்று கூறிய காரணத்தால் இந்த சிலை திருப்பதியில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.
தினசரி காலை 7:00 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.