

கதை 1: ஆணி தந்த அறிவு:
எதற்கெடுத்தாலும் கோபப்படும் சிறுவன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் ஒரு துறவி அவனை அழைத்து, ஒரு பை நிறைய ஆணிகளையும், ஒரு சுத்தியலையும் கொடுத்து, "உனக்கு கோபம் வரும் போதெல்லாம் ஒவ்வொரு ஆணியாக கொல்லைப் புறத்தில் உள்ள சுவரில் அடி..!" என்றார்.
முதல் நாள் சிறுவன் அடிக்கடி கோபம் கொண்டான். 10, 15 ஆணிகள் அடித்தான். பிறகு நாளடைவில் அவன் கோபம் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. ஆணிகளும் காலி ஆகிவிட்டன.
அவன் துறவியிடம் சென்று, "சுவாமி..! இனி அனாவசியமாக கோபம் கொள்ள மாட்டேன்.." என்றான்.
துறவி அவனிடம், "சரி.. சுவரில் நீ அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடு.." என்றார்.
சிறுவனும் பொறுமையாக ஒவ்வொரு ஆணியையும் பிடுங்கினான். துறவி பின்னால் வந்து நின்று, "பார்த்தாயா.. நீ ஆணி அடித்த இடம் ஓட்டையாகிவிட்டது.. இதுபோலத்தான் கோபத்தில் பேசும் கடுமையான வார்த்தைகளும் மற்றவர் மனதைக் காயப்படுத்தி விடும்.." என்றார்.
சிறுவன் முற்றிலும் மனம் திருந்தி, சாத்வீக குணம் உள்ளவனாக ஆனான்.
********
கதை 2: நிம்மதியாக வாழ வழி:
ஒரு மகானிடம் ஒரு சீடன், "சுவாமி..! வாழ்க்கையில் ஒரு மனிதன் முழு மன நிம்மதியுடன் வாழ, என்னென்ன நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்..?" என்று கேட்டான்.
அதற்கு மகான் கூறினார்:
"உனக்கு அடுத்தவர் என்னென்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அவற்றை நீ செய்யாமல் இருக்க வேண்டும்.. மற்றவர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாயோ, அதை நீ முதலில் செய்ய வேண்டும்... இதுவே மன நிம்மதியான, வாழ்க்கைக்கான தத்துவம்..!"
சீடன் மனம் தெளிந்தான்..