

விஜயகுமார் என் நண்பர். தீவிரமான ஐயப்ப பக்தர். கார்த்திகை பிறந்துவிட்டால் கோயிலில் மாலை போட்டுக்கொள்வார். பிறகு 48 நாட்கள் (ஒரு மண்டலம்) கடுமையான விரதம். காலை ஒரு டம்ளர் ராகி கூழ். மதியம் சாப்பாடு. இரவு மீண்டும் ஒரே ஒரு தம்ளர் ராகி கூழ்தான். காலை, மாலை இரண்டு வேளையும் சாஸ்தா கோயில்தான். காலில் செருப்பு போடமாட்டார்.
எனக்கு என்ன அதிசயம் என்றால் விஜயகுமார் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆனால், விரதம் ஆரம்பத்தில் இருந்து சபரிமலை சென்று மீண்டும் சொந்த ஊர் வரும்வரை சிகரெட்டைத் தொடமாட்டார். பின்னர் மீண்டும் செயின் ஸ்மோக்கர். இது எப்படி சாத்தியம்… ? ஐயப்பன் மீது உள்ள பக்தியால்தான் அவரால் 48 நாட்கள் ஸ்மோக் செய்யாமல் இருக்கமுடிகிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்தத் தடவை 40 நாட்கள் ஆகிவிட்டன. அவர் நடக்கும்போது ஒரு கண்ணாடி துகள் அவரது காலில் குத்தியது. நல்ல வலி. ஒரு வாரத்தில் அது சீழ் பிடித்து பெரிய கொப்பளமாக மாறியது. டாக்டரிடம் நான் கூட்டிக்கொண்டு போனேன். டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கொப்பளத்தை எடுத்துவிட்டார். பிறகு காலில் கட்டு போட்டார். அடுத்த வாரம் வரச் சொன்னார்.
நான் கேட்டேன். “டாக்டர் நாளை மறுநாள் இவர் சபரிமலை செல்கிறார்!”
“இல்லை. இந்தப் புண்ணுடன் போகக்கூடாது… அதுவும் செருப்பு இல்லாமல் போகமுடியாது… உங்கள் பயணத்தை ஒரு 10 நாட்கள் தள்ளிப்போடுங்கள்!”
“சாமி சரணம்… முடியாது டாக்டர்… மன்னிக்கவும்…!”
“நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்...”
“சாமி சரணம்…!” என்று விடை பெற்றோம்.
“ஏன் விஜி… ஒரு வாரம் தள்ளிப்போடலாமே…?”
“இல்லை சாமி…!”
விஜயகுமார் பிடிவாதமாக இருந்தார். திட்டமிட்டபடி சபரிமலைக்குக் கிளம்பினார். கால் வலித்தது. நடக்கவே சிரமமாக இருந்தது. பத்தன்திட்டாவில் இருந்து மலை செல்ல காயம்பட்ட கால் வலித்தது. காலை தூக்கிப் பார்த்தார். ரத்தம் கசிந்து இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் மலை ஏறினார்.
‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…! சாமியே சரணம் ஐயப்பா…!’
என்று கோஷம் போட்டபடியே மேலே ஏறினார். கஷ்ட்டபட்டு 18 படிகள் ஏறினார். சன்னதி அடைந்தார். அழுதுகொண்டே சாமி தரிசனம் செய்தார்.
‘சாமியே சரணம் ஐயப்பா…!’ என்று தன்னால் முடிந்தவரை கோஷம் போட்டார். ஒரு முறை, இரண்டு முறை அல்ல, பலமுறை தரிசனம் செய்தார். சன்னதி பக்கம் உட்கார்ந்து தியானம் செய்தார். ஒரு அரைமணி நேரம் கழித்து ஐயப்பனை கடைசியாக தரிசனம் செய்து கீழே இறங்க ஆரம்பித்தார்.
என்ன ஆச்சரியம்…? இப்போது விஜயகுமாருக்கு கால்வலி இல்லை. ‘சாமி சரணம் ஐயப்பா’ என்று கோஷம் போட்டபடியே கீழே இறங்கினார். கால்வலி சுத்தமாக இல்லை. எல்லாம் அவன் செயல். வீடு திரும்பினார். எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார். நண்பன் வீட்டிற்குச் சென்று பிரசாதம் அரவணை பாயாசம் ஒரு கப் கொடுத்தார். டாக்டரிடம் போனார். அவர் கட்டைப் பிரித்து புண் ஆறிவிட்டதாக சொன்னார். இப்போதுதான் மீண்டும் செருப்பு போட்டார்.
வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு சாமி ரூமில் தனது மாலையைக் கழட்டி ஐயப்பன் போட்டோ மீது போட்டார். டிபன் சாப்பிட்டவுடன் காபி குடித்துவிட்டு பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.
ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தார்.
49 நாட்கள் தன்னால் எப்படி சிகரெட் பிடிக்காமல் இருந்தேன் என்று அவருக்குப் புரியவில்லை. காலில் உள்ள காயம் ஆறியது எப்படி என்றும் புரியவில்லை.
சாமி சரணம்… ஐயப்பா சரணம்...!