

மனிதர்கள் வாழ்வில் எச்செயலைச் செய்தாலும் தாமே அச்செயலில் சிறந்து விளங்கி இருக்க வேண்டும் என்ற கர்வம் உண்டு. அச்செயல் தானமாக இருந்தாலும் சரி, தர்மமாக இருந்தாலும் சரி, சமையல், பக்தி, ஆளுமை, கருணை, தொழில், வீட்டு நிர்வாகம் என அனைத்திலும் தாமே சிறந்தவர் என்ற கர்வம் மனிதனுக்கு உண்டு.
அதேபோல்தான் சித்ரகுப்தனுக்கும் ஒரு கர்வம் உண்டு. சித்திரகுப்தன் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை பூஜித்து வந்தான். இவ்வாறு பிரார்த்தனை செய்து வந்ததன் மூலமாக சித்ரகுப்தனுக்கு மழையளவு செல்வம் கிட்டியது. இவ்வாறு மகாலட்சுமியை தினசரி பிரார்த்தனை செய்து அவன் மிகுந்த செல்வந்தனாக இருந்தான்.
அச்செல்வங்களை அவன் கோவில்களுக்கு தானமாக வழங்கினான். இச்செயலினால் தானே தானத்தில் சிறந்து விளங்கியதாக அவனுக்கு ஒரு கர்வம் ஏற்பட்டது.
அடுத்தவருடைய பாவ புண்ணியங்களை எழுதும் ஒருவனுக்கு இவ்வளவு கர்வமா என்று பெருமாள் எண்ணினார்.
அவர் சித்திரகுப்தனின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். சித்திரகுப்தனிடம் எம்பெருமான் சென்று, "அண்ணாமலையில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் இருப்பார். அவர் தன்னிடம் இருக்கும் செல்வங்களை தானமாக பிறருக்கு வழங்குவார்.
இத்தர்ம காரியத்தை அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றி வந்தார். அவரிடம் ஒருநாள் ஒரு கால் உடைந்த மனிதன் வந்து தர்மம் கேட்டான். அவர் தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை தானமாக அளித்தார். மேலும் அவர் அந்த மனிதனின் வறுமை நிலையை பார்த்து மிகவும் மனம் வருந்தி இரண்டு ரூபாய் கடன் வாங்கி தானமாக அவனுக்கு அளித்தார். நீ அந்த அண்ணாமலையில் இருக்கும் அந்த வயது முதிர்ந்த பெரியவரின் பாவக்கணக்கை எனக்கு எழுதித் தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
சித்திரகுப்தனும் அந்த முதியவரின் பாவ புண்ணியங்களை கணக்கில் கொண்டு அவரின் பாவக் கணக்கை எழுத தொடங்கினார். ஆனால், அவன் கணக்கு எழுதும்போது அவனுடைய எழுத்துக்கள் மறைந்தன.
இதனைக் கண்ட சித்திரகுப்தன் சற்றே வீழ்ந்து மீண்டும் பாவக்கணக்கை எழுதத் தொடங்கினான். அப்பொழுதும் அவன் எழுதிய எழுத்துக்கள் மறைந்து கொண்டே இருந்தன.
இதனால் வியப்படைந்த சித்திரகுப்தன் பெருமாளிடம் சென்று கூறினான். "நாராயணா நான் எழுதும் அந்த முதியவரின் பாவக்கணக்கு மறைந்து கொண்டே இருக்கிறது" என்று கூறினான்.
அப்பொழுது எம்பெருமான் சித்திரகுப்தனிடம், "நீ உன்னிடம் இருக்கும் செல்வங்களே பிறருக்கு தானமாக வழங்கினாய். ஆனால், செல்வங்கள் ஒன்றும் இல்லாத கடும் வறுமையில் வாடினாலும் அந்த வயது முதிர்ந்த பெரியவர் தன்னிடம் இருக்கும் பொருளை தானமாக அளித்தும் அவருடைய மனம் நிறைவடையாத காரணத்தினால் கடன் வாங்கியும் தானம் செய்தார். அப்படிப்பட்ட புண்ணியமானின் கணக்கை எழுதுவதற்கு உனக்கு தகுதி கிடையாது" என்று கூறினார்.
எம்பெருமானின் இப்பேச்சை கேட்ட சித்திரகுப்தன் தானே தானத்தில் சிறந்தவன் என்ற அவனுடைய கர்வம் அடங்கியது. எச்செயலை ஆற்றினாலும் அச்செயலை நாம் முழு மனதுடன் ஆற்ற வேண்டுமே தவிர, கர்வம் ஆணவம் கொள்ளக்கூடாது. மனிதருடைய மனத்தில் ஏற்படும் கர்வம் அவனுடைய அழிவிற்கு காரணமாய் விளங்கும்.