தரிசித்தோருக்கு தலைமைப் பதவி தரும் திருமலைக்கேணி முருகன்!

Thirumalaikeni Murugan temple
Thirumalaikeni Murugan temple
Published on
deepam strip

திருமலைக்கேணி ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் கரந்தமலை தொடரில், மலை உச்சியில் அழகிய வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் வற்றாத சுனையொன்று உள்ளது. பொதுவாக குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் சுவாமியை தரிசிக்க படியேறி செல்ல வேண்டும். ஆனால், இக்கோவில் படி இறங்கி சென்று தரிசனம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த கோவிலை 'கீழ் பழனி' என்றும் அழைக்கிறார்கள்.

இந்த கோவில் அமைந்த விதம் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒரு முருகன் கோவில் கட்ட விருப்பம் கொண்டார். ஒரு நாள் வேட்டைக்காக இந்த வனப்பகுதிக்கு வந்தபோது இங்கிருக்கும் சுனையில் நீர் பருகி சற்று கண் மூடி ஓய்வெடுத்தார். அப்போது அவர் கனவில் வந்த முருகன் அந்த சுனைக்கு அருகிலேயே தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறுகிறான். மன்னரும் அவ்வாறே ஒரு கோவிலை எழுப்பினார்.

வனத்திற்கு நடுவில் அமைந்த இந்த மலைக்கோவிலில் காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமடைந்தது. பூஜைகளும் நின்று போயின. பிரதான மூலவர் சிலை பின்னமடைந்ததால், வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும் பின்னமடைந்த சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே அதன் மேல் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறாக கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என்று இரண்டடுக்காக இந்த கோவில் அமைந்துள்ளது. 1979 இல் கிருபானந்த வாரியார் இந்தக் கோவிலை சீரமைக்கும் பணியை செய்தார்.

மேலடுக்கிலுள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை கட்டமைத்துள்ளனர். இதற்காக மேலேயுள்ள முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வேல் உருவில் முருகனா? இது என்ன அதிசய கதை?
Thirumalaikeni Murugan temple

இந்த மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக அருள்புரிகிறார். இவர் வலக்கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி தலையில் கிரீடத்துடன் காட்சியளிக்கிறார். இந்த பாலமுருகனுக்கு தினமும் இராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கே வள்ளி, தெய்வானை முருகனுடன் இல்லை. ஆனால் முருகன் சன்னதிக்கு இருபுறமும் இரு தீர்த்தங்கள் உள்ளன. இதை வள்ளி தெய்வானை தீர்த்தம் என்று சொல்கிறார்கள். அதிலும் வள்ளி தீர்த்தம் கிணறு வடிவத்தில் உள்ளது.

மலையின் நடுவே உள்ள கிணறு என்பதால் இந்த இடம் 'மலைக்கேணி' என்று பெயர் பெற்றது என்று சொல்கிறார்கள். இந்த தீர்த்தங்களின் வடிவில் தேவிகள் வள்ளியும் தெய்வானையும் இங்கே பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் ஏற்பட பக்தர்கள், இங்கேயுள்ள வள்ளி தெய்வானை தீர்த்தங்களின் நீரை பக்தியோடு பருகுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பதவி, புகழ் தரும் அதிகார கோல ஆண்டார்குப்பம் முருகன்!
Thirumalaikeni Murugan temple

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தை கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். இங்கே வந்து தினமும் இராஜ அலங்காரத்துடன் காட்சியருளும் இந்த பாலமுருகனை வழிபட்டால் பொறுப்பான தலைமை பதவிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com