

விநாயகர் சதுர்த்தி என்பது தடைகளை நீக்கும் முதற்கடவுளான விநாயகப் பெருமானின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்துப் பண்டிகையாகும்.
விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
‘விநாயகர்’ என்றாலே ‘மேலான தலைவர்’ என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர் விநாயகப் பெருமான். யானை முகமும் பெரிய காதுகளும் ஞானத்தையும் விவேகத்தையும் குறிக்கின்றன. கல்வி, செல்வம் மற்றும் அறிவுச் செழிப்புக்காக விநாயகர் வணங்கப்படுகிறார்.
இந்து சமயத்தில் முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த திருநாள், விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் 'விக்னஹர்த்தா' அதாவது தடைகளை அகற்றுபவர் என அழைக்கப்படுகிறார். எனவே நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும் தடைகளும் விலகி நல்வாழ்வு பெற அவரை இந்நாளில் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளையே ‘விநாயகர் சதுர்த்தி’ திருவிழாவாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 14-ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 14-ம்தேதி, காலை 07.06 மணி
சதுர்த்தி திதி முடியும் நேரம்: செப்டம்பர் 15-ம்தேதி, காலை 07.44 மணி
சிறப்பு பூஜை நேரம் (மத்தியான காலம்): செப்டம்பர் 14-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை (இது விநாயகர் பூஜை செய்ய உகந்த மத்திம நேரமாகும்) விநாயகரை வழிபட மிகவும் உகந்தநேரமாகும்.
விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்து புதிய ஆடைகளை அணியவேண்டும்.
பூஜை மேடையில் அல்லது தட்டில் சுத்தமான துணி விரித்து, களிமண் விநாயகர் சிலையை வைக்கவும். நல்ல நேரத்தில் வழிபாட்டைத் தொடங்கவேண்டும்.
விநாயகருக்குச் சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கலாம். விநாயகர் சிலைக்குப் பூக்களால் அலங்காரம் செய்யவும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது அவரின் திருமேனியில் சாற்ற வேண்டும். 21 அருகம்புல் வைப்பது மிகவும் சிறப்பு.
விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, மோதகம், அப்பம் மற்றும் சுண்டல் ஆகியவற்றுடன் பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
தீபம் ஏற்றி, தூபம் காட்டி மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் விநாயகர் மந்திரங்கள், விநாயகர் அகவல், விநாயகர் கவசம் படித்து வழிபடுவது சிறந்தது. கடைசியாக எளிய மந்திரங்களைச் சொல்லி தீபாராதனை (ஆரத்தி) காட்ட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபடுபவர்களுக்கு வினைகள் தீர்ந்து இனிமையான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இந்நாளில் விநாயக பெருமானின் புகழ்பெற்ற சிறப்புமிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டால் விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்கும்போதும், வழிபாட்டின்போதும் செய்யக்கூடாத முக்கியமான சில நடைமுறைகள்:
* விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னெவல்லாம் செய்யக் கூடாது என்பதை நன்கு கவனித்தில் கொள்ளவேண்டும்.
* விநாயகர் சிலையை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், உங்கள் வீட்டைச் சுத்தம் செய்து குளித்துவிடுங்கள்.
* விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் அல்லது ரசாயன வர்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது; களிமண் சிலைகளே வழிபாட்டிற்கு உகந்தவை. உலோகத்தால் ஆனதாக இருக்கக்கூடாது.
* அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையையே பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்.
* விநாயகர் சிலையை வீட்டிற்குக் கொண்டு வரும்போது சுத்தமான துணியால் மூடவேண்டும். ஆசனம் செய்த பிறகே, அதிலுள்ள துணியை அகற்றவேண்டும்.
* விநாயகர் சிலைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து விநாயகரை வீட்டிற்கு வரவேற்க வேண்டும்.
* விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
* விநாயகர் சிலையில் விநாயகருடன் அவரது வாகனமான மூஷிகமும், அவருக்கு மிகவும் விருப்பமான மோதமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் பாசிடிவ் எனர்ஜி நிறைந்திருக்கும்.
* கணபதி ஸ்தாபனம் செய்யும்போது, சரியான சடங்குகளை பின்பற்ற வேண்டும்.
* விநாயகருக்கு கண்டிப்பாக தலையில் கிரீடம், குடை வைக்க வேண்டும். தலையில் கிரீடமோ, குடையோ இல்லாமல் விநாயகர் விக்ரஹமானது முழுமை பெறாது. இவ்வாறு கிரீடம் வைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் வந்து சேரும்.
* விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லைச் சாற்றாமல் பூஜை செய்யக்கூடாது. மேலும் துளசியை விநாயகர் வழிபாட்டில் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
* விநாயகர் சிலையை வீட்டில் வைத்துப் பூஜை செய்யும் நாட்களில் வீட்டைப் பூட்டிவிட்டு அனைவருமாக வெளியே செல்லக்கூடாது; யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டும்.
* விநாயகர் சதுர்த்தி மற்றும் பூஜை நடக்கும் நாட்களில் அசைவம், பூண்டு மற்றும் வெங்காயம் கலந்த தாமச உணவுகளைச் சமைக்கவோ, உண்ணவோ கூடாது.
* இந்த நேரத்தில் மது மற்றும் புகையிலை உட்கொள்வதை தவிர்க்கவும்.
* முதலில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, நைவேத்தியம் படைக்காமல், முறையாக ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்காமல் விநாயகர் சிலைகளைக் நீரில் கரைக்கக் கூடாது.
* வீட்டில் விநாயகர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு உங்கள் குடும்ப வழக்கப்படி 1.5, 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பாகக் கரைக்க வேண்டும்.