ஜப்பானில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகவும் புகழ் பெற்ற மங்காவான (comics) ‘டிரேகன் பால்' (Dragon Ball) என்னும் காமிக்ஸை எழுதியவர் அகிரா டோரியாமா.
பிரபல வீடியோ கேமான டிரேகன் குவெஸ்ட்க்கும் இவர் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிரா டோரியாமா ஜப்பானில் உள்ள நகோயா என்னும் இடத்தில் 1955 ல் பிறந்தார். அவர் 1980களில் காமிக் உலகில் டாக்டர் ஸ்லம்ப் என்னும் காமிக் கதையின் மூலமே நுழைந்தார். சின்ன பெண் ரோபோ ‘அரேல்’ மற்றும் அவளை உருவாக்கிய விஞ்ஞானி ஆகியோரை வைத்தே இந்த கதைகளம் நகர்கிறது.
டாக்டர் ஸ்லம்ப் ஜப்பானில் மட்டுமே 35 மில்லியன் காப்பிகள் விற்பனையானது. அதன் பிறகு டிரேகன் பால் உலகளவில் 260 மில்லியன் காப்பிகள் விற்பனையாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.
இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற டிரேகன் பால் மங்கா 1984ல் முதல் அனிம் சீரிஸாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோக்கு என்னும் சிறுவன் தன்னுடைய தற்காப்பு கலையுடன் டிரேகனின் முட்டைகளால் கிடைக்கும் மந்திர சக்தியையும் சேர்த்து உலகை கெட்டவர்களிடமிருந்து காப்பாற்ற போராடும் கதையே டிரேகன் பாலாகும்.
ஜப்பானில் மிகவும் பழமையான மற்றும் மதிப்பு மிக்க விருதான, சோகா குக்கான் மங்கா விருதை (Shoga Kukan Manga award) 1981 வென்றார்.
2013ல் அகிரா டோரியாமா ஒரு நேர்காணலில் டிரேகன் பால் மங்காவை, தான் வரையும்போது, ஜப்பானில் உள்ள இளைஞர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இருந்தது என்றும் உலகளவில் எல்லோராலும் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இத்தனை தூரம் பிரபலமாகும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அகிரா டோரியாமா தன்னுடைய 68 ஆவது வயதில் சமீபத்தில் காலமானார். அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டு காரணமாக மார்ச்1, 2024ல் இயற்கை எய்தினார். இன்னும் முடிக்கப்படாத ஏராளமான மங்கா யோசனைகளை மிச்சம் வைத்து விட்டே சென்றுள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் அகிரா டோரியாமாவின் விசிறிகள் அவருடைய இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய மங்காவின் மூலம் கவர்ந்த அகிரா டோரியாமாவின் இறப்பு மங்கா உலகத்தையே வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
அவருடைய பிரிவு மங்கா உலகத்தையும், உலகம் முழுதும் உள்ள விசிறிகளையும் கவலைக்குள்ளாகினாலும், அவரால் ஊக்குவிக்கப்பட்ட பல இளைஞர்கள் அவரின் காலடி தடத்தை பின் தொடர்ந்து செல்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவே உள்ளது. அகிரா டோரியாமா மங்காவின் மூலமாக என்றென்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்பதை மறுக்க முடியாது.