

“அப்பா… கார்ட்டூன் பார்க்கும்போது மட்டும் ஏன் நேரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறது?” என்று கேட்டாள் நிலா.
“அதுதான் கார்ட்டூன் (cartoon) உலகத்தின் மாயம்!” என்று சிரித்தார் அப்பா. ஆனால், கார்ட்டூன் என்றால் சும்மா சிரிப்பதற்கான நிகழ்ச்சி என்று நினைத்துவிடாதே. அதற்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாறும், நிறைய உழைப்பும் இருக்கிறது!”
காகிதத்தில் தொடங்கிய மாயம்!
“அப்பா, கார்ட்டூன் எப்படி உருவானது?”
“நாம் இன்று தொலைக்காட்சியிலும் செல்பேசியிலும் பார்க்கும் அனிமேஷன் கார்ட்டூன்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. ஆரம்ப காலத்தில் ஓவியர்கள் ஒரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் தனித்தனி படங்களாக வரைந்தார்கள். அந்தப் படங்களை வேகமாக ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டியபோது, கதாபாத்திரம் நகர்வது போல நம் கண்களுக்குத் தெரிந்தது.”
“அப்படியா? நம்முடைய நோட்டுப் புத்தகத்தின் ஓரத்தில் ஒரு மனிதனை வரைந்து, பக்கங்களை வேகமாகப் புரட்டினால் அவன் ஓடுவது போலத் தெரியும் அல்லவா?”
“அதே யோசனைதான்!” என்றார் அப்பா.
ஒரு கார்ட்டூனுக்குப் பின்னால் இத்தனை வேலை!
“டாம் ஓடுவதும், ஜெர்ரி தப்பிப்பதும் மிகவும் சுலபமாகத் தெரிகிறதே அப்பா!”
“பார்ப்பதற்கு சுலபம். ஆனால் உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல! முதலில் கதை எழுத வேண்டும். பிறகு கதாபாத்திரங்களை வடிவமைக்க வேண்டும். அதன் பின்னர் அவை எப்படி நடக்க வேண்டும், ஓட வேண்டும், குதிக்க வேண்டும், சிரிக்க வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட வேண்டும்.”
“அப்படியென்றால் ஒரு குட்டி கார்ட்டூன் (cartoon) காட்சிக்குப் பின்னாலும் நிறைய பேர் உழைக்கிறார்களா?”
“ஆமாம். ஓவியர்கள், அனிமேட்டர்கள், குரல் கொடுப்பவர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பலரின் உழைப்பு அதில் இருக்கிறது!”
உலகைக் கவர்ந்த குட்டி எலியும் வாத்தும்!
“அப்பா, உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் (cartoon) கதாபாத்திரம் எது?”
“சின்ன வயதில் மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற கதாபாத்திரங்களை ரசித்திருக்கிறேன். பெரிய காதுகளுடன் இருக்கும் மிக்கி மவுஸ் உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று.”
“எனக்கு டோரேமான் பிடிக்கும்!”
“அது ஏன் என்று எனக்குத் தெரியும். அவனிடம் இருக்கும் அற்புதமான கருவிகள் உனக்குப் பிடிக்கும்!”
“ஆமாம்! குறிப்பாக எங்கும் செல்ல உதவும் கதவு!”
“அது நிஜமாக இருந்தால், வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பாயா?” என்று அப்பா குறும்பாகக் கேட்டார்.
“அப்பா!” என்று சிரித்தாள் நிலா.
கார்ட்டூன் வெறும் நகைச்சுவையான சிரிப்பு மட்டும் அல்ல:
“கார்ட்டூன் பார்த்தால் நேரம் வீணாகிவிடுமா?” என்று நிலா கேட்டாள்.
“எதைப் பார்க்கிறோம், எவ்வளவு நேரம் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல கார்ட்டூன்கள் நமக்கு நட்பு, அன்பு, துணிச்சல், பகிர்ந்து கொள்வது, பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுத் தரலாம்.”
“அப்படியென்றால் கார்ட்டூன் ஒரு குட்டி ஆசிரியர் மாதிரியா?”
“சரியாகச் சொன்னாய்!”
ஏன் குழந்தைகளுக்கு கார்ட்டூன் பிடிக்கிறது தெரியுமா?
“வண்ணமயமான காட்சிகள், வேடிக்கையான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான கதைகள், நகைச்சுவையான உரையாடல்கள்—இவை எல்லாம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன. அதைவிட முக்கியமாக, கார்ட்டூன் நம்முடைய கற்பனைக்கு சிறகுகள் கொடுக்கிறது.”
“அதனால்தான் நானும் கார்ட்டூன் பார்த்த பிறகு என்னுடைய கதைகளை உருவாக்குகிறேனா?”
“ஆமாம்! ஒருநாள் நீயே ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கலாம்!”
அப்பாவின் கடைசி ரகசியம்!
“அப்பா, நீங்கள் பெரியவராகிவிட்டதால் இப்போது கார்ட்டூன் பார்ப்பதில்லையா?”
அப்பா சிரித்தார்.
“பெரியவனாகிவிட்டாலும், நமக்குள் இருக்கும் குட்டிக் குழந்தை ஒருபோதும் பெரிதாகாது. அதனால்தான் நல்ல கார்ட்டூனைப் பார்த்தால் பெரியவர்களும் குழந்தைகளைப் போலச் சிரிக்கிறார்கள்!”
“அப்படியென்றால் இன்று இரவு நாம் இருவரும் சேர்ந்து கார்ட்டூன் பார்க்கலாமா?”
“சரி. ஆனால் ஒரு நிபந்தனை!”
“என்ன?”
“முதலில் வீட்டுப்பாடம்!”
“அய்யய்யோ!” என்று சொல்லிக்கொண்டே நிலா ஓடினாள். அப்பாவும் சிரித்தபடி அவளைத் துரத்தினார்.
கார்ட்டூன் என்பது வெறும் திரையில் ஓடும் படங்கள் அல்ல. அது கற்பனை, கலை, தொழில்நுட்பம், நகைச்சுவை, கதை ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு மாய உலகம்! அந்த உலகத்திற்குள் குழந்தைகளோடு பெரியவர்களும் ஒரு சிறிய பயணம் சென்றால், முகத்தில் புன்னகை வருவது நிச்சயம்!