

கந்தசாமிக்கு வயது 10. அவன் ஒரு டீ கடையில் வேலை செய்துவந்தான். 14 வயதுக்குகீழே உள்ளவர்களை வேலையில் அமர்ந்துவது சட்டப்படி குற்றம் என டீ கடை முதலாளிக்கும், கந்தசாமிக்கும் தெரியாது.
கந்தசாமிக்கு வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. தானும் மற்ற சிறுவர்கள்போல் பள்ளி செல்ல ஆசை. அவன் கடையில் இருந்து அரை கிலோமீட்டரில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இருந்தது.
கடைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பள்ளி சென்றான்.
ஆம். நவம்பர் 14. குழந்தைகள் தினம். ஒரு ஆசிரியர் பாரதி பற்றி பேசினார்.
‘ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு...’
கந்தசாமி காதுகளில் காலை எழுந்தவுடன் படிப்பு என்ற வாக்கியம் கீறல் விழுந்த ரிகாரட் போல மீண்டும் மீண்டும் கேட்டது. அவனுக்குப் பாரதியை பிடித்துப்போனது.
கந்தசாமி பாரதியுடன் மானசீகமாக பேச ஆரம்பித்தான்.
பாரதி “பள்ளியில் சேரு..!“ என்று கூறினார்.
“சரி… !“ என்று கந்தசாமி சொன்னான்.
கந்தசாமிக்கு படிக்கவேண்டும் என்று தீவிரச் சிந்தனை வந்தது.
அடுத்த சில நாடுகளில் அம்மா பக்கத்தில் கட்டப்படும் 5 நட்சத்திர ஹோட்டலில் சித்தாள் வேலைக்குச் சென்று, கந்தசாமியை பள்ளியில் 3வது வகுப்பில் சேர்ந்தார்.
அட… அடடா… !
கந்தசாமி சுறுசுறுப்பாக இரவு பகல் பாராமல் படித்தான். நன்கு எழுதவும் கற்றுக்கொண்டான். காலை சிற்றுண்டி மற்றும் மதிய சாப்பாடு பள்ளியில்தான்.
படிப்பில் சூரனாக இருந்தான்.
6 வது வகுப்பு படிக்கும்போது எல்லா பாடங்களிலும் 100 அல்லது 99 அல்லது 98 மதிப்பெண் பெற்றான். அவன் திறமையைக் கண்ட பள்ளி நிர்வாகம் கந்தசாமிக்கு டபுள் ப்ரோமஷன் தந்தது.
ஆம். 6ல் இருந்து 8ம் வகுப்பு.
தான் சேமித்து வைத்து இருந்த பணத்தைப் போட்டு ஒரு சைக்கிள் வாங்கினான். அதிகாலை சுற்றுவட்டாரத்தில் பால் மற்றும் தினசரியைப் போட்டான். அவனது சம்பாத்தியம் குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தது.
நாட்கள் பறந்தன. நேரம் ஓடியது; வருடங்கள் நகர்ந்தன. கந்தசாமி +2 வில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தான். அம்மா ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அரசு, 'இனி படிப்பதற்கு ஆன செலவை அரசே ஏற்கும்' என்று அறிவித்தது.
கந்தசாமிக்கு வேதியியல் பிடிக்கும். எனவே, வேதியியலில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் இறங்கினான். தனது முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான்.
டாக்டரேட் பட்டம் வாங்கியும் தனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினான்.
என்ன ஆச்சரியம்? வேதியியலில் ஒரு புது எலிமெண்டைக் கண்டுபிடித்தான்.
அதற்கு ஜீரோன் என பெயரிடப்பட்டது. சுருக்கமாக Z -7 என்று பெயர்.
அந்த ஆண்டு நோபல் பரிசு வேதியியலில் கந்தசாமிக்கு கிடைத்தது.
நாடே பாராட்டியது. உலகம் வியந்தது.
இப்போது சென்னை ஐ.ஐ.டியில் வேதியியல் எச்.ஒ.டி (H.O.D) கந்தசாமிதான்.
பாரதியின் பாடலில்
‘காலை எழுந்தவுடன் படிப்பு....’
என்ற ஒரு வரி என்னவெல்லாம் செய்கிறது..?
பாரதி வாழ்க...!
கந்தசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
என்ன குழந்தைகளா..! சாதாரணமான ஒரு சிறுவனும் சாதனையாளராக மாற முடியும் என்பதை இந்த கதையிலிருந்து தெரிந்துகொண்டீர்களா..? மேலும், உங்கள் கையில் இருக்கும் புத்தகங்கள் உங்களை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.