

ஹாய் குட்டீஸ்...!
இறைவன் நம்மை எப்போதும் காப்பார் என்ற அசைக்க முடியாத எண்ணம் தான் தெய்வ நம்பிக்கை.. அந்த நம்பிக்கை தான் நமக்கு தைரியத்தையும் நல்ல எண்ணங்களையும் அதன் மூலம் நல்ல செயல்களையும் செய்ய வைக்கிறது..
இன்று உங்களுக்கு அருமையான கதை ஒன்று சொல்லப் போகிறேன். இந்த கதை ஒரு சிறுவனின் அசைக்க முடியாத நம்பிக்கை பற்றியது. கடவுளின் சர்வ வல்லமையும் தூய பக்தியின் மகிமையையும் பற்றி விளக்கும் ஒரு சிறுகதை.
சரி.. அந்த சிறுவன் பெயர் என்ன தெரியுமா? அவன் தான் பிரகலாதன். அவன் திருமால், அதாவது, விஷ்ணு பகவானின் மீது வைத்திருந்த நம்பிக்கையை பற்றி பார்ப்போமா?
பிரகலாதன் ஒரு அரசகுமாரன். அவன் எப்போதும் 'நாராயணா நாராயணா' என்று திருமாலை நினைத்துக் கொண்டே இருப்பான். அதனால் எல்லோருக்கும் அவன் மீது அன்பு அதிகம்.
ஆனால், அவன் தந்தை இரண்யகசிபு இருக்கிறாரே? மிகவும் அகங்காரம் கொண்ட அரக்க அரசன். "இந்த உலகத்தில் என்னை விட பெரியவன் யாருமில்லை. எல்லோரும் என்னையே வணங்க வேண்டும்,"என்று சொல்வான்.
ஒரு நாள் இரண்யகசிபு "மகனே பிரகலாதா! எப்போதும் நாராயணா நாராயணா என்று சொல்கிறாயே? நீ என்னைத் தான் வணங்க வேண்டும்," என்று மகனிடம் கூறினான்.
அதற்கு பிரகலாதனோ சிரித்தபடியே "தந்தையே... நான் திருமாலைத் தான் வணங்குவேன்," என்று கூறவே,
"உன் திருமால் எங்கு இருக்கிறார்?" என்று இரண்யகசிபு கேட்க,
"அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்," என்று பதில் அளித்தான் பிரகலாதன்.
இதைக் கேட்ட இரண்யகசிபுவிற்கு மிகுந்த கோபம் வந்தது. பிரகலாதனை பல விதங்களிலும் துன்புறுத்த ஆரம்பித்தான். யானையால் மிதிக்க செய்தான். உயரமான மலையிலிருந்து தள்ளச் செய்தான். நெருப்பிலும் அமர வைத்தான்.
ஆனால் ஒவ்வொரு முறையும் திருமால் தான் பிரகலாதனை காப்பாற்றினார். அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இறுதியாக இரண்யகசிபு "உன் இறைவன் இதோ இந்த தூணில் இருக்கிறானா?" என்று கேட்டான்.
"ஆம்.. ஆம் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்," என்று தைரியமாக சொன்னான் பிரகலாதன்.
கோபத்தில் இரண்யகசிபு தூணை ஓங்கி அடித்தான். உடனே அந்த தூணில் இருந்து பாதி மனித உருவம் பாதி சிங்க உருவம் கொண்ட நரசிம்மர் தோன்றி, இரண்யகசிபுவின் அகங்காரத்தை அழித்து பிரகலாதனை காப்பாற்றினார்.
குழந்தைகளா? இந்த கதையில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் தெரியுமா?
நல்ல மனமும் உண்மையான தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எந்த கஷ்டத்தையும் எளிதில் எதிர்கொள்ளலாம். அதே போல குழந்தைகளான நீங்களும் பெரியவர்களை மதித்து அன்பு காட்டி தெய்வ நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
குட்டீஸ்களே! இறைவனை நம்புவது மட்டும் புண்ணியம் அல்ல. நல்லவர்களாக வாழ முயற்சி செய்வதும் தெய்வ நம்பிக்கை தான். அன்பாக நடந்து கொள்வது, பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதிப்பது பிறருக்கு உதவுவது இவை அனைத்தும் இறைவனுக்கு மிகவும் பிடித்த குணங்கள். பிரகலாதன் போல நீங்களும் எந்த சூழ்நிலையிலும் நல்ல எண்ணங்களை விடக்கூடாது மனதில் தன்னம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இருந்தால் நல்ல செயல்களை செய்யும் எண்ணம் தானே வரும். நல்ல குழந்தைகளாக வளர்ந்து நம் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம். நல்லதை நினைப்போம். நல்லதை செய்வோம். நன்மைகள் நம்மைத் தேடி தானாகவே வரும்.