

ஒரு சின்ன கிராமத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவளிடம் இரண்டு பசு மாடுகள் இருந்தன. அவை நிறைய பால் கொடுத்தன. அப்பாலை விற்று கிடைத்த பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளை அப்பெண்மணி அன்புடன் வளர்த்து வந்தாள்.
தினமும் அச்சிறுமி பசுவின் பாலை பெரிய பானையில் எடுத்துச் சென்று அருகில் உள்ள நகரத்தில் விற்று வந்தாள். ஒருநாள் வழக்கம் போல் தலையில் பால் பானையுடன் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு ஆசை உதித்தது.
பாலை அதிக விலைக்கு விற்றால் நிறைய பணம் கிடைக்கும். அதைக் கொண்டு ஒரு நல்ல பெட்டைக்கோழி வாங்குவேன். அது தினமும் நிறைய முட்டைகள் இடும். அம்முட்டைகளை விற்று நிறையப் பணம் சம்பாதித்து பணக்காரி ஆவேன். நல்ல நல்ல ஆடைகள் வாங்கி அணிவேன். அதைக் கண்டு எல்லோரும் பேச வருவார்கள். அவர்களுக்கு பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைப்பேன் என்று நினைத்தாள்.
தலையில் உள்ள பால் குடத்தை மறந்து தலையை அலட்சியமாக ஆட்டினாள். பால்குடம் தரையில் விழுந்து நொறுங்கிப் போனது. பால் முழுவதும் சிந்தி வீணாகியது. இதை கண்ட சிறுமி தனது முட்டாள்தன எண்ணத்தால் ஏற்பட்ட கதியை நினைத்து வருந்தினாள். அழுது கொண்டே வீடு திரும்பினாள். நடந்த விபரத்தை கேட்ட அப்பெண்ணின் அம்மா, அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினாள்.
எப்போதும் தனது வேலையில் கவனமாக இருக்கச் சொன்னாள். சிறுமியும் அவசியமில்லாத ஆசை எண்ணங்களை விட்டு விட்டு வேலையில் கவனத்துடன் நடந்து கொண்டாள்.
குட்டீஸ்.. எந்த வேலை செய்தாலும் கவனமாக இருந்தால் நல்லதே நடக்கும். செய்வீர்களா..?