

அக்பர் ஒரு நாள் தன் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.
அப்போது ஐந்து அரசவைப் பிரதானிகளும் அவரோடு, நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அரசர் முன்னே நடக்கும் சமயத்தில் அவர்கள் ஐவரும் சற்றுப்பின் தங்கியவர்களாக தங்களுக்குள் பேசிவிட்டு, அரசர் திரும்பி பார்க்கும் போது அவர்களது பேச்சு நின்றுவிடும்.
இதைக் கவனித்த அரசர் அவர்களிடம், "ஏதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லலாமே" என்றார்.
இதை எதிர்பார்த்தது போல் அவர்கள் ஐவரும் ஒருவரை ஒருவர் ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் சற்று முன்னால் வந்து, "அரசே ! நீங்கள் எங்களை தவறாக நினைக்க கூடாது. பீர்பால் பணியில் சேர்வதற்கு முன்னாடியே, நாங்கள் உங்களிடம் நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்களும் எங்களுக்கு பின்னால் வந்தவரான பீர்பாலுக்கு மட்டும் அதிக சலுகை காட்டுகிறீர்கள் அதுதான் எங்களின் ஆதங்கம்" என்றார்.
"அப்படியா உங்கள் நாணயத்தின் மீதும் திறமையின் மீதும் என்றுமே எனக்கு சந்தேகம் வந்தது இல்லை. ஆனால் பீர்பால் உங்கள் அனைவரையும் விட திறமைசாலி!" என்றார் அரசர்.
உடனே, "அரசே! எங்களுக்கும் உரிய வாய்ப்பு அளித்தால் அவரை விடவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிப்போம்" என்றார்கள் ஐவரும்.
"சரிதான்.. உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். உங்களில் யார் ஒருவர் அதற்குரிய பதிலை சொன்னாலும் அவருக்கு பீர்பாலின் பதவியை தந்து விடுவேன் சம்மதமா?" என்றார் அரசர்.
"சம்மதம் அரசே! கேளுங்கள்"
அரசர் கையை கீழே நீட்டி காட்டி, "இதோ இங்கே முளைத்து கிடைக்கும் புல்லின் விதைகளை எங்கே பார்க்க முடியும்?" என்று கேட்டார்.
அரசரின் கேள்விக்கான விடை எவருக்கும் தெரியவில்லை. குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்களுக்குள் பேசி பார்த்தனர் விடை கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் அரசரை தேடிக்கொண்டு பீர்பால் அங்கே வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த அரசர், "பீர்பால்! நீங்கள் சரியான சமயத்தில் வந்து விட்டீர்கள். இந்த பிரதானிகளிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு சரியான பதிலைச் சொல்பவருக்கு உங்களுடைய அமைச்சர் பதவியை தந்து விடப் போகிறேன். அந்தப் பதிலைத்தான் அவர்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
"அப்படியானால் நல்லது. அரேசே, என்னிடமும் அந்தக் கேள்வியை கேளுங்கள். பதில் தெரிகிறதா? என்று பார்க்கிறேன்" என்றார் பீர்பால்.
"ஒன்றுமில்லை இதோ இங்கே முளைத்து கிடக்கும் புல்லின் விதைகளை எங்கே கண்டுபிடிக்கலாம்? என்று தான் கேட்டேன்" என்றார் அரசர்.
"அது ஒன்றும் கஷ்டமான கேள்வி இல்லையே" என்று சொல்லிக் கொண்டே, பீர்பால் அருகில் இருந்த குளத்தில் இருந்து நீரை கொண்டு வந்து அங்கிருந்த கட்டாந்தரையில் சற்று தெளித்தார்.
"அரசே விதை எங்கிருக்கிறது என்பது தெரிய சில நாட்கள் ஆகும்" என்றார் பீர்பால்!
அரசவைப் பிரதிநிதிகள் ஒன்றும் புரியாமல் மன்னரைப் பார்ப்பதை கண்ட பீர்பால், மண்ணில் புதைந்த புல்லின் விதை கண்ணில் தென்படாது. ஆனால் துளி நீர் பட்டால் கூடப் போதும். வெடித்துக் கிளம்பி துளிர்த்துத் தலைகாட்டி விடும். விதை இருக்கும் இடம் வெளியே தெரிந்து விடும்" என்றார்.
உடனே அரசர், ஆமதித்து தலையசைக்க, மற்ற ஐவரும் வாயடைத்து போயினர்.
பீர்பாலின் திறமையையும், நுண்ணறிவையும் பாராட்டினர்.
குட்டீஸ்! தெரிந்ததா? திறமையையும், நுண்ணறிவையும் தெரிந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.