

கோடைகாலத்தில் அரசர் வசிப்பதற்காக புதிய அரண்மனை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் சித்தரக்கூடம் கொண்டு அமைக்கப்பட்டது. வட இந்தியாவிலிருந்து வந்த ஓவியர் ஒருவன் பலவண்ணங்களில் மங்கையர் மற்றும் மகாபாரதம் ராமாயணத்தில் சில காட்சி நிகழ்ச்சிகளை தீட்டி இருந்தான்.
அரசர் அமைச்சர்களுடன் சென்று அந்த ஓவியங்களை பார்வையிட்டார். தெனாலிராமனும் உடன் சென்றிருந்தான். ஒவ்வொன்றாக அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போது, "நான் தத்ரூபமாக வரைந்து உள்ளேன். இதைப் போன்ற ஓவியங்களை தென்னாட்டில் எவராலும் தீட்ட முடியாது" என்று அகம்பாவத்தோடு கூறினான் வடநாட்டு ஓவியன்.
உடனே தெனாலிராமன், த"த்ரூபமான ஓவியங்கள் என்று நீரே புகழ்ந்து கொள்கிறீர். சில ஓவியங்கள் முன்புறம் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றின் பின்புறம் எங்கே?" என்று கேட்டதற்கு ஓவியன் உமக்கு கலையறிவு போதாது. "ஓவியங்களின் பின்புற தோற்றங்களையும் உறுப்புகளையும் கற்பனை கண்ணால் கண்டு களிக்க வேண்டும்" என்று பதில் அளித்தான்.
அரசரும் புன்னகையோடு ஓவியன் கூற்றை ஆமோதிப்பவர் போல, "ராமா உனக்கு நகைச்சுவையாகவும் குறும்பாவும் பேச தெரியுமே தவிர ஓவிய ரசனை கிடையாது. கலைகளை ரசிக்க தனியான மனோபாவம் கற்பனை வளமும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
தெனாலிராமன் அரசர் கூறியதை ஆமோதிப்பவன் போல் மெளனமாக இருந்துவிட்டான். சில மாதங்களுக்கு பிறகு அரசரிடம் வந்து தான் சித்திரக் கலையை கற்றுக் கொண்டிருப்பதாகவும் வட நாட்டுச் சித்திரங்களையும் மிஞ்சும் படி தன்னால் ஓவியங்களை தீட்டமுடியும் என்றும் தெரிவித்தார் தெனாலிராமன் மேலும் அரசருடைய அனுமதி பெற்று முன்பு வடநாட்டு ஓவியன் தீட்டியிருந்த ஓவியங்களை அழித்துவிட்டு புது சித்திரங்களை வரையலானான் தெனாலிராமன். அவை மிகவும் விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருந்தன. ஒரு கால், ஒரு கை, ஒரு தோள், ஒரு இடை, ஒரு பாதி முகம் இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனி உறுப்புகளாக பிரித்து வைத்திருந்தான்.
அவற்றை பார்வையிடுமாறு அரசரை அழைத்தான் தெனாலிராமன். அமைச்சர்கள் கலைஞர்கள் பழைய ஓவியர் ஆகியோர் சூழ அரசர் வந்து சித்திரங்களை பார்த்தார். எல்லாம் அரைகுறையாக இருந்தன. "இராமா.. சித்திரங்கள் யாவும் இன்னும் பூர்த்தியாகவில்லையா? மற்ற உறுப்புகள் எங்கே?" என்று கேட்டார்.
அரசன் பெருமானே அவை மறைந்திருப்பதாக பாவனை கலையறிவு உள்ளோர் அவற்றை கற்பனை கண்ணால் காண வேண்டும் என்று குறும்பாக கூறினான்.
அரசர் உணர்ந்து கொண்டார்; கோபமும் சிரிப்பும் கலந்து வந்தது அதை வெளியே காட்டாமல் சித்திரக்கூடத்தை பாழடித்ததற்காக தெனாலிராமனை கடிந்து கொண்டார்.
அவன் தலையை வெட்டுமாறு உத்தரவிட்டார். அரசரின் உத்தரவுப்படி தெனாலிராமனின் தலையை வெட்டுவதற்காக காவலாளிகள் இருவர் அவனை அழைத்துச் சென்றனர். அந்த காவலர்கள் இருவரும் முன்பு தெனாலிராமனின் தந்திரம் காரணமாக சவுக்கடி பட்டவர்கள். ஆகையால் இப்பொழுது அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததால் தன் தலையை வெட்டாமல் விடமாட்டார்கள் என்று எண்ணினான்.
காவலர்களுடன் அரசரிடம் சென்று, "மன்னர் பிரானே நான் சாகப் போகும் தருணத்தில் இறுதியாக ஒரு வேண்டுகோள் நான் இத்தனை ஆண்டுகளாக சூரிய பகவானை தியானித்து வழிபட்டதே இல்லை. இறக்கும்போது கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டு பிரார்த்தனை செய்தபடியே உயிர் நீத்தால் மன அமைதி பெறுவேன்" என்று வேண்டிக்கொண்டான் தெனாலிராமன்.
அரசரும் அப்படியே அனுமதி அளித்தார். காவலர் இருவரும் வாளுடன் தெனாலிராமனை கூட்டிக் கொண்டு ஆற்றுக்குச் சென்றனர். தெனாலிராமன் கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டு, "காவலாளிகளே எனக்கு இருபுறமும் நீங்கள் பாதுகாப்பாக வாளை ஏந்திய படி நின்று கொள்ளுங்கள்.
என் பிரார்த்தனை முடிந்ததும் வெட்டுங்கள்" என்று கூறி விட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டான். பிரார்த்தனை எப்பொழுது முடியும்; வெட்டுங்கள் என்று எப்பொழுது சொல்வான் என்று நீண்ட வாளுடன் இருவரும் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்பவன் போல் கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்த தெனாலிராமன், "வெட்டுங்கள்" என்று சொல்லிவிட்டு சட்டென்று தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். உடனே ஒரே சமயத்தில் கத்திகளை வீசிய காவலர்கள் தங்கள் தலைகளை வெட்டிக்கொண்டு வீழ்ந்தனர். மறுநாள் அரசரின் கோபம் தணிந்திருந்த சமயம் அறிந்து தெனாலிராமன் அரசரிடம் சென்று, "மன்னர் பெருமானே பாழாக்கப்பட்ட ஒரு சித்திரகூடச் சுவரை காட்டிலும் ஒரு மனிதனின் உயிர் மதிப்பு வாய்ந்தது என்பதால் நான் தலை தப்பி வந்தேன்" என்றான்.
வியப்படைந்த அரசர் எவ்வாறு தப்பி வந்தாய் என்று கேட்டார் நீங்கள் அனுப்பி வைத்த காவலர்கள் மூடர்களாகவும் லஞ்சம் வாங்கும் முரடர்களாகவும் இருந்தபடியால் தங்கள் தலைகளையே வெட்டிக் கொண்டு அவர்கள் மடிந்தார்கள் என்று நடந்ததை விவரித்தான் தெனாலிராமன் அரசர் மகிழ்ச்சியடைந்த அவனை மன்னித்து விட்டார்.