

புதுமையான செயலையும் ஏதாவது பிரச்சனையையும் அரசர் விரும்பி அதில் ஈடுபடுவது வழக்கம்.
அரச சபையில் ஒரு நாள் இயற்கை தன்மையை பயிற்சியால் மாற்ற இயலுமா? என்று விவாதிக்கப்பட்டது.
"இயலும்" என்று கூறினர் சிலர்.
"நாயின் வாலை எவ்வாறு நீட்ட முடியாதோ அவ்வாறே இயல்பான தன்மையை மாற்றவே இயலாது" என்று கூறினர் வேறு சிலர்.
"இயல்பான தன்மையானது செயற்கை தன்மையை காட்டிலும் வலிமையுடையது. நம்முடைய வழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் இயற்கையான தன்மையை மாற்றமே இயலாது" என்று கூறினர் மற்றும் சிலர்
"ஒரு நாயின் வாலை நீட்ட முடியுமானால் மனிதனின் இயல்பான தன்மையை பல புதிய பழக்கங்கள் மூலம் மாற்ற முடியும் இல்லையேல் முடியாது" என்றார் அரசர்.
"முறைப்படி பயிற்சி அளித்தால் நாயின் வாலையும் நீட்ட முடியும்" என்றான் அவர்களில் ஒருவன்.
அவ்வாறு ஆறு மாதங்களில் செய்து காட்ட முடியும் என பத்து பேர்கள் முன் வந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் ரக நாய்க்குட்டி ஒன்றும் அதை பயிற்சி அளிப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஆளுக்கு பத்து பொன்னும் அரசர் அளித்தார்.
அந்த பத்து பேர்களில் தெனாலிராமனும் ஒருவன்.
நாய் வாலை நீட்டுவதற்கு ஒன்பது பேரும் எப்படி எல்லாமோ முயன்று பார்த்தனர்.
வாலின் நுனியில் கல்லை கட்டி தொங்கவிட்டான் ஒருவன்.
பித்தளை குழாய் செய்து வாலில் பொருத்தி வைத்தான் ஒருவன்.
நாய் வாலை ஒவ்வொரு நாளும் உருவி விடச் செய்தான் ஒருவன்.
வாத நோய்க்கான மருந்தை நாய்க்கு கொடுத்தான் ஒருவன்.
தினசரி பிரார்த்தனை மூலம் சாசாதிக்க முயன்றான் ஒருவன்.
மந்திரத்தால் அதை நீட்டிக்க முற்பட்டான் ஒருவன்.
கடுமையான உடல்பயிற்சி செய்தான் ஒருவன்.
வாலை நீட்டி வைத்துக் கொள்ளுமாறு நாயிடம் சொற்பொழிவு நிகழ்த்தினான் ஒருவன்.
வாலை நீட்டி வைத்துக் கொள்ளுமாறு தினமும் இச்சகம் பேசினான் ஒருவன்.
இவ்வாறு ஒன்பது பேரும் முயன்று பார்த்தனர்.
ஆனால் தெனாலிராமன் நாயை பட்டினி போட்டிருந்தான். ஆறு மாதங்கள் ஆயின.
நாய்களைக் கொண்டு வந்து காட்டுமாறு அரசர் உத்தரவிட்டார்.
ஒன்பது நாய்களின் வால்களிலும் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை.
"ராமா..! உன்னுடைய நாய் எங்கே?" என்று கேட்டார் அரசர். தெனாலிராமன் வளர்த்த நாய் உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்தது. ஆனால், பலம் இழந்த வால் மட்டும் நீண்டிருந்தது போல் தெரிந்தது.
"அரசர் பிரானே! நாயின் வாலை நீட்டி விட்டேன்" என்றான் தெனாலிராமன்.
அரசர் அதைப் பார்த்ததும், "முட்டாளே இந்த வாயில்லா ஜீவனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டாயே..! தன் வாலை அசைக்க கூட அதற்கு சக்தி இல்லையே" என்று வருத்தத்தோடு கூறினார்.
"அரசர் பிரானே..! இயற்கைக்கு முரண்பாடாக நாயின் வாலை நீட்ட செய்வது பட்டினி மூலமும் சாவினாலுமே சாதிக்க முடியும்" என்று தெனாலிராமன் விளக்கி கூறினான். அரசர் உண்மையை உணர்ந்தார்.
என்ன குழந்தைகளா..! இந்த கதை உங்களுக்குப் பிடித்திருந்ததா?
இந்தக் கதையை நீங்கள் வாசிப்பதன் மூலம், மனிதனின் இயல்பான குணங்களை மாற்ற முயலும்போது ஏற்படும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளும் தெளிவையும், சிக்கலான சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக சிந்தித்து தீர்வு காணும் திறனையும் பெறலாம்.
மேலும், இயற்கையின் விதிகளை மாற்ற முற்படுவதன் ஆபத்துக்களைப் புரிந்து கொண்டு, யதார்த்தமான சிந்தனையுடன் வாழ்க்கையை அணுகும் முதிர்ச்சியை இக்கதை உங்களுக்கு வழங்குகிறது.
அதோடு, எதையும் செயற்கையாக திணிப்பதை விட இயல்பாக புரிந்து கொள்ளும் பக்குவத்தையும், சவால்களை எளிமையாகக் கையாளும் மன உறுதியையும் இக்கதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது.