
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் (RCME), காங்ரூஎன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ‘மெச்சப்படாத நாயகர்கள்’ (Unsung Heroes) விருதுகளை வழங்கி கௌரவித்தது. இந்த ஆண்டு காலித் அஹமது, (உறவுகள் அறக்கட்டளை) கே.நரசிம்மலு, (காலால் ஓவியம் வரையும் கலைஞர்), பழனிகுமார், (புகைப்படக் கலைஞர்) ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விழாவில், முன்னாள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்.சேகர் ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தால் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘மெச்சப்படாத நாயகர்கள்’ விருது, ‘சுயநலத்திற்கு அப்பாற்பட்ட சேவை’ என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். வாழ்க்கையின் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, தங்கள் சொந்த முயற்சியால் சமூகத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் சாதனையாளர்களை ஆதரிக்கவும், ஊக்கப்படுத்தவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. அவர்களது வாழ்க்கைக் கதைகள் மனித உற்சாகத்திற்கும் மனத்துணிவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இதுவரை 15 நாயகர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த விருது பெற்றவர்கள் பட்டியலில் ‘ஆட்டோ’ அண்ணாதுரை, திருவொற்றியூர் ‘நைட் ஸ்கூல் ஆஃப் சேஞ்ச்’ ஹரிஹரிகரன், பிரபல போக்குவரத்து காவலர் எம்.குமார், சோல் ஃப்ரீ சாம்பியன் ப்ரீத்தி சீனிவாசன், தேசிய பாராலிம்பிக் நீச்சல் சாம்பியன் மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு ஊக்குவிப்பாளர் மாதவி லதா, பாரத மாதா அனாதை இல்ல நிறுவனர் டாக்டர் உதயமலர், பாராசைக்ளிங் மற்றும் பாராபேட்மிண்டன் தேசிய வீராங்கனை ஷம்மி பாட்டியா, சர்வதேச பாரா நீச்சல் சாம்பியன் கே.எஸ்.விஸ்வாஸ், ஆனந்தம் இளைஞர் அமைப்பின் நிறுவனர் செல்வகுமர், ஆட்டோ அக்கா ராஜி அசோக், முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர் திலகவதி என பலரும் அடங்குவர்.
இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் பற்றிய குறிப்புகள்:
காலித் அஹமது, உறவுகள் அறக்கட்டளை: உறவுகள் அறக்கட்டளையின் நிறுவனர் காலித் அஹமது, சென்னையில் அசாதாரண மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர். வீடற்ற ஒருவர் தெருவில் தனியாக இறந்து கிடப்பதைக் கண்ட மன வேதனையில் சில நெருங்கிய நண்பர்களுடன் அவர் இந்த ‘உறவுகள் அறக்கட்டளை’யை நிறுவி, இதுவரை மரணத்தில் கண்ணியத்தை உறுதி செய்து 7,500க்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார். குறிப்பாக, கோவிட் தொற்றுக் காலத்தில் அவரது அறக்கட்டளை 1,500க்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளது.
கே.நரசிம்மலு, காலால் ஓவியம் தீட்டும் கலைஞர்: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசாதாரண ஓவியக் கலைஞர் நரசிம்மலு, பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் கலை உலகில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார். 1975ல் பிறந்த அவருக்கு தம் கைகளைப் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். நரசிம்மலுவின் பயணம், துன்பங்களை சமாளிப்பதிலும் தடைகளை உடைப்பதிலும் உறுதிப்பாடு, கலை ஆர்வம் மற்றும் சமூகத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு நல் உதாரணமாகும்.
பழனிகுமார், புகைப்படக் கலைஞர் மற்றும் விஷுவல் ஆர்டிஸ்ட்: சமூக ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டும் இவரது அச்சமற்ற மற்றும் சமூக நோக்கப் பணிக்காக ‘அன்சங் ஹீரோஸ்’ விருதைப் பெறுகிறார். மதுரையில் மனிதக் கழிவு துப்புரவுத் தொழிலாளர் தொடர்பான ஒரு துயர சம்பவத்தைத் தொடர்ந்து அவரது பயணம் 2015ல் தொடங்கியது. இது அவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒதுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை கவனிக்கத் தூண்டியது. ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும், கவனம் ஈர்க்கும் புகைப்படக் கட்டுரைகள் மூலம், அவர் பெரும்பாலும் கவனிக்கப்படாத வாழ்க்கைகளை ஆவணப்படுத்தியுள்ளார். மேலும், இவரது வழிகாட்டுதலின்படி பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நபர்கள் பட்டதாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஆகியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட ஆர்.சேகர், ஐபிஎஸ் (முன்னாள் டிஜிபி) அசாதாரணமான தனி நபர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ரோட்டரி சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசுகையில், “மரணம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத யதார்த்தம் என்றாலும், நாம் அனைவரும் எங்கும், எப்போதும் மற்றவர்களுக்கு நல்லது செய்ய பாடுபட வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.