வயலும் வரப்பும் உள்ளவரை மரணமில்லை! பாரதிராஜா என்னும் தமிழ் பண்பாட்டு அடையாளம்!

Realistic Tamil Cinema - பாரதிராஜா
Realistic Tamil Cinema - பாரதிராஜாAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

“என் இனிய தமிழ் மக்களே...” எனும் குரல் இன்று அத்தனை தமிழ் இதயங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கூப்பிய கரங்களும் கரகரத்த குரலில் அன்பை மட்டுமே உச்சரித்த அந்த அழைப்பு இனி நினைவுகளின் ஆழத்தில் இருந்து மட்டுமே கேட்கும்.

தமிழ்த் திரையுலகம் ஒரு இயக்குநரை இழந்திருக்கலாம். ஆனால் தமிழ் மண் இன்று தனது கதை சொல்லியை இழந்திருக்கிறது.

காலம் எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் சிலரையே ஒரு பண்பாட்டின் அடையாளமாக மாற்றியிருக்கிறது. அந்த அரியவர்களில் முதன்மையானவர் பாரதிராஜா.

அவர் திரைப்படங்களை இயக்கவில்லை - அவர் மண்ணை மொழி பெயர்த்தார். வயல்வெளிகளின் அமைதிக்கு வசனம் எழுதினார். கிராமத்து மனிதர்களின் இதயத் துடிப்பை ஒலிப்பதிவு செய்தார். அவருக்கு முன் கிராமம் ஒரு காட்சி.அவருக்குப் பின் கிராமம் ஒரு கவிதை. அவருக்கு முன் மண் ஒரு பின்னணி.அவருக்குப் பின் மண் ஒரு கதாநாயகன்.

“கர்ணனோடு கொடை போயிற்று; உயர்கம்பனோடு கவிதை போயிற்று” என்று ஏங்கிய தமிழுக்கு, முண்டாசு கட்டிய மகாகவி பாரதி வந்ததுபோல், சுவர்களுக்குள் சிக்கிக் கிடந்த தமிழ்த் திரையுலகை திறந்த வானத்தின் கீழ் கொண்டு வந்து நிறுத்திய திரைச்சுடரொளி பாரதிராஜா.

அவருக்கு முன் தமிழ் சினிமா பெரும்பாலும் அரங்குகளிலும் அலங்காரங்களிலும் வாழ்ந்தது. அவர் வந்த பிறகு அது வயல்வெளிகளில் நடந்தது. வரப்புகளில் ஓடியது. மழையில் நனைந்தது. மண்ணின் மணத்தை சுவாசித்தது. கிராமத்தின் இதயத்துடிப்பை திரையில் கேட்க வைத்தது.

16 வயதினிலே திரைப்படத்தில் மயிலு, சப்பாணி, பரட்டை ஆகியோர் பிறந்தபோது, தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய யுகமும் பிறந்தது.

அந்த யுகம் பின்னர் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், மண் வாசனை, முதல் மரியாதை என விரிந்துகொண்டே போனது.

Realistic Tamil Cinema - பாரதிராஜா
Realistic Tamil Cinema -பாரதிராஜா

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் காதலை வெறும் உணர்வாக அல்ல, உயிரின் இயற்கையான மொழியாகக் காட்டியது. “யானும் நீயும் எவ்வழி அறிதும்?” என்ற சங்க இலக்கியத்தின் மென்மையை நவீன காதலின் இதழ்களில் எழுதிக் காட்டியது.

கடலோரக் கவிதைகள் திரைப்படம் எண்பதுகளின் இளைய தலைமுறைக்கு அழகியலின் புதிய அகராதியைத் தந்தது. மழை, கடல், குடை, காதல்—இவை அனைத்தும் அந்தப் படத்திற்குப் பின் வேறு அர்த்தம் பெற்றன.

முதல் மரியாதை மூலம் கிராமத்து மனிதனின் உள்ளத்தின் உயரத்தையும், காதலின் கண்ணியத்தையும் உலகறியச் செய்தது. வயதைத் தாண்டிய உணர்வு களுக்கும் மரியாதை உண்டு என்பதை தமிழ்ச் சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தவர். பூவரசம்பூ பூக்கும் சமயமெல்லாம் இன்று வரை நம் மனங்களிலும் ஒரு பருவத்தை மலரச் செய்கிறது.

பாரதிராஜா காதலை மட்டுமே பாடியவர் அல்ல. சமூகத்தின் காயங்களையும் அவர் மறைக்கவில்லை.

சாதிச் சுவர்களைத் தகர்த்த பாரதிராஜா வின் சமூகப் பார்வை:

கருத்தம்மா திரைப்படம் பெண் சிசுக்கொலை என்ற கொடூரத்தை தமிழ்ச் சமூகத்தின் முகத்தில் அறைந்தது. ஆயிரம் சொற்பொழிவுகள் செய்ய முடியாத விழிப்புணர்வை ஒரு திரைப்படம் செய்தது.

வேதம் புதிது திரைப்படம் சாதியின் சுவர்களை சவாலுக்கு உட்படுத்தியது. மனிதன் பிறப்பால் உயர்வதில்லை; மனிதத்தால் உயர்கிறான் என்ற பேருண்மையை உரக்கச் சொன்னது.

புதுமைப்பெண் பெண்ணின் சுயமரியாதையைப் பேசியது. அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், பசும்பொன் போன்ற படங்கள் பெண் மனங்களின் நுண்ணிய வலிகளையும் வலிமைகளையும் பதிவு செய்தன.

சிகப்பு ரோஜாக்கள் மூலம் உளவியல் திகில் திரைப்படத்திற்கே புதிய இலக்கணம் எழுதினார். கிராமத்தை மட்டுமல்ல, மனித மனத்தின் இருண்ட மூலைகளையும் ஆராய்ந்த கலைஞர் அவர் என்பதை நிரூபித்தார்.

மண், காதல், சாதி, மதம், பெண்ணுரிமை, வறுமை, மனித உறவுகள், அரசியல், சமூக அநீதிகள்—எதுவும் அவரது பார்வைக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை; ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு காவியம்; ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கைப் பாடம்.

தமிழ்த் திரையுலகில் பல இயக்குநர்கள் வந்தனர். பல வெற்றிகளும் நிகழ்ந்தன. ஆனால் “மண்ணின் மணம்” என்ற ஒற்றை சொல்லுக்கு முகவரியாக மாறியது பாரதிராஜா என்ற பெயர் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
'என் இனிய தமிழ் மக்களே...' மௌனமாகி போனது!
Realistic Tamil Cinema - பாரதிராஜா

தமிழ் பேசப்படும் வரை அழியாத பாரதிராஜா வின் நினைவுகள்:

ஒரு கலைஞன் தனது காலத்தை எப்படி பதிவு செய்யவேண்டும் என்பதற்கு பாரதிராஜாவின் படைப்புகளே பாடநூல்கள்.

இன்று அவர் இல்லை.

ஆனால் அவர் உருவாக்கிய உலகம் இன்னும் உயிரோடு இருக்கிறது.

மயிலு இன்னும் சிரிக்கிறாள்.

சப்பாணி இன்னும் காதலிக்கிறான்.

கருத்தம்மா இன்னும் கேள்வி கேட்கிறாள்

பூவரசம்பூ இன்னும் பூத்துக்கொண்டே இருக்கிறது.

மண்ணின் மணம் இன்னும் வீசிக்கொண்டே இருக்கிறது.

இவர்களெல்லாம் வாழும் வரை பாரதிராஜாவும் வாழ்ந்துகொண்டே இருப்பார். மண்ணைத் திரையில் விதைத்து, மனிதத்தை அறுவடை செய்த மாபெரும் கலைஞனே!

இமயமே…இந்தக் கட்டுரை வெளிவரும்போது, உங்கள் உடல் இன்னும் இந்த மண்ணில் கிடத்தப்பட்டு இருக்கலாம்.

உங்களை நேசித்த கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் கண்ணீரும் இந்த எழுத்துகளோடு சேர்ந்து பயணிக்கலாம்.

உங்கள் உடல் இந்த மண்ணை விட்டுச்செல்லும் முன், தமிழ்ச் சமூகம் ஒருமுறை தலைவணங்க விரும்புகிறது.

எங்களுக்கு நம்முடைய கிராமத்தைத் திருப்பிக் கொடுத்ததற்கு...

மண்ணின் மணத்தைத் திரையில் நிரந்தரமாக்கியதற்கு...

காதலுக்கு கவிதையையும், மனிதத்துக்கு மரியாதையையும் கற்றுக் கொடுத்ததற்கு...

நன்றி.

இன்று உங்கள் உடல் மண்ணை விட்டு செல்லலாம். ஆனால் நீங்கள் விதைத்த மண், உங்களை ஒருபோதும் விடைபெறச் செய்யாது. ஏனெனில்,

வயலும் வரப்பும் இருக்கும் வரை,

தமிழ்மண் மணக்கும் வரை,

தமிழ் பேசப்படும் வரை,

பாரதிராஜா மரணிக்க மாட்டார்.

அவர் ஒரு பெயர் அல்ல.

ஒரு யுகம்.

ஒரு பண்பாடு.

ஒரு மண்ணின் நினைவு.

தமிழ் மண்ணின் மகத்தான கதைசொல்லிக்கு கண்ணீரில் இறுதி வணக்கம்.

வணிக நோக்கங்களைத் தாண்டி, சாதியக் கொடுமை களுக்கும் பெண் சிசுக்கொலைக்கும் எதிராகத் திரை ஊடகம் எவ்வாறு ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்பட்டது என்ற விழிப்புணர்வை அடையலாம்.

logo
Kalki Online
kalkionline.com