

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. ஒவ்வொரு மாணவர்களும் எந்த உயர் கல்வியை எடுத்து படித்தால் வேலை கிடைக்கும் (career options) என்று தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டனர்.
இன்ஜினியரிங், டாக்டர், வக்கீல், பார்மசிஸ்ட், ஆடிட்டர் போன்று எத்தனையோ வகையான வேலைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு தகுந்தவாறு படிப்புகளை மாணவர்கள் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து விட்டு தம்முடைய தமிழ் மொழியை எடுத்து படிப்பதற்கு மாணவர்கள் தயங்குகிறார்கள். தமிழ் படித்து என்ன செய்யப் போகிறோம்? என்ன வேலை கிடைக்கப் போகிறது? என்று ஏளனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எத்தனையோ தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் தமிழ்த் துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகத் தான் இருக்கிறது.
12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் உங்களுக்கு B.A தமிழ் இலக்கியம் எளிமையாக கிடைக்கும். தமிழ் இலக்கியத்தை படிக்கும் பொழுது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' எடுத்து உரைக்கிறது என்று தான் கூற வேண்டும். எத்தனையோ வகையான இலக்கியங்கள்! எத்தனையோ வகையான இதிகாசங்கள்! எத்தனையோ வகையான புராணங்கள்! ஒவ்வொன்றும் மனிதருக்கு வாழ்க்கை பாடங்களைக் கற்றுத் தருகின்றன. அவற்றை நம் வாழ்வியலில் புகுத்த முடியும்.
அரசுத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு!
B.A தமிழ் இலக்கியம் படித்தால் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளில் 100 மதிப்பெண்ணுக்கு தமிழில் வினாக்கள் வருகின்றன. இதனால் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அரசு தேர்வு கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும். தமிழ் வழியில் படித்து அரசு பணியில் சேர்ப்பவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர் பணி!
தமிழ் இலக்கியம் படித்தால் மொழிபெயர்ப்பாளராக நாம் பணியில் சேர முடியும். தமிழ் மொழியோடு கூடுதலாக வேறு ஒரு மொழியையும் நாம் படித்து வைத்துக் கொண்டால் மொழிபெயர்ப்பாளராக பணிகளில் சேர முடியும் என்பது உறுதி.
வானொலி நிலையத்தில் பணி!
படிக்கும்போதே கல்லூரிகளில் நடத்தக்கூடிய பேச்சுப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு, உங்களுடைய பேச்சாற்றலை நன்றாக வளர்த்துக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிகள் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
சிறப்புப் பேச்சாளர்!
தமிழை நீங்கள் ஆழமாக படித்தால் உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு பிடித்ததாக இருந்தால் உங்களை பல இடங்களில் உரையாற்றுவதற்கு அழைப்பார்கள். அதன் மூலம் நீங்கள் மிகுந்த வருவாயைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள் மற்றும் ஊடகத்துறையில் பணி!
பல்வேறு வகையான செய்தித்தாள் நிறுவனங்களிலும், பத்திரிக்கை நிறுவனங்களிலும் நீங்கள் ஒரு எழுத்தாளராகப் பணியில் சேர முடியும். பிழை திருத்தும் பணிகளும் உங்களுக்கு அங்கே கிடைக்கும். நல்ல ஊதியமும் உங்களுக்கு வழங்கப்படும்.
பள்ளிகளில் தமிழாசிரியர் பணி!
இளங்கலை தமிழ் இலக்கியமும், முதுகலை தமிழ் இலக்கியமும் படித்து கல்வியியல் முடித்திருந்தால் உங்களுக்கு பள்ளிகளில் தமிழாசிரியராக பணிபுரிவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
கல்லூரிகளில் பேராசிரியர் பணி!
முதுகலைத் தமிழ் இலக்கியத்துடன் தேசிய திறனறித் தேர்வில் நீங்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தால் உங்களுக்கு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றுவதற்கு பல்வேறு வகையான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊக்கத்தொகையோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி!
முதுகலைத் தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு தேசிய திறனறித் தேர்வில் நீங்கள் ஆராய்ச்சியாளர் தகுதியில் தேர்ச்சி பெற்றிருந்தால் உங்களுக்கு நல்ல உதவி தொகையுடன் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை புத்தக செலவினங்களுக்காக ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியம் படிக்க உதவித்தொகை!
தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் இலக்கியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 2000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
தமிழில் முனைவர் பட்ட ஆராய்ச்சி!
செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் தமிழராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நீங்கள் ஏதாவது ஒரு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, இந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி உதவித்தொகையை செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் பெறலாம்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு!
சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல்வேறு வகையான நாடுகளில் தமிழ் சங்கங்களும், தமிழ் பள்ளிகளும், கல்லூரிகளும் அதிகமாக இருக்கின்றன. அங்கே தமிழாசிரியராகவும், தமிழ் பேராசிரியர்களாகவும் நம்முடைய தமிழ் பணியை அங்கே செம்மையாகச் செய்ய முடியும். சிறப்பான ஊதியமும் வழங்கப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
ஊடகத்துறையில் வேலை வாய்ப்பு!
தமிழ் மொழியை விருப்பப்பட்டு நன்றாகப் படித்தால் தமிழ் உச்சரிப்பில் நீங்கள் சிறந்து விளங்கினால் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், விளம்பர நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நீங்கள் தொலைக்காட்சிகளில் வலம் வரலாம். உங்கள் வாழ்க்கையில் நலம் பெறலாம்.
எழுத்தாளர்!
படிக்கும் போதே கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றை நீங்கள் சிறப்பாக எழுதக் கற்று இருந்தால் பல்வேறு வகையான படைப்புகளை உருவாக்கி தலைசிறந்த எழுத்தாளராக முடியும். சாகித்ய அகாதெமி போன்ற விருதுகளையும் பெற முடியும். நீங்கள் படைக்கும் படைப்புகளுக்கு நல்ல காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
சொற்பொழிவாளர்!
தமிழ் மொழியிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் நீங்கள் புலமை பெற்றிருந்தால் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்பொழிவு போன்ற எத்தனையோ நிகழ்ச்சிகளை நீங்கள் பங்கு பெற்று தமிழ் மணம் பரவச் செய்யலாம். உங்களுக்கு அதன் மூலம் நல்ல வருவாயும் கிடைக்கும்.
“பல மொழிகளைக் கற்று வை!
உன் தாய் மொழியில் பற்று வை!”
நீங்கள் எத்தனையோ மொழிகளை கற்றுக் கொண்டாலும் உங்களுடைய தாய் மொழியில் நீங்கள் எப்பொழுதும் பற்றுடன் இருங்கள். அது உங்களை வாழ்க்கையில் உயர்த்தி உயர்வைத் தரும். எல்லா மாணவர்களும் அவர்கள் எடுக்கும் துறையில் உள்ள பாடங்களை ஆங்கில மொழியிலேயே படிக்கிறார்கள். அதனால் முழுமையான கல்வியை ஒரு சில மாணவர்கள் மட்டுமே புரிந்து கற்றுக் கொள்கிறார்கள். மற்ற மாணவர்கள் அதனை மனப்பாடம் செய்தே தேர்ச்சி பெறுகின்றனர். எந்த ஒரு பாடத்தையும் அவர்களினுடைய தாய் மொழியில் படித்தால் மட்டுமே அவர்கள் சிறப்பாக அந்த துறையில் வெற்றி பெற முடியும் என்பது திண்ணம்.
“சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்!
என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்!”
என்று ஈழத்து கவிஞர் கா. சச்சிதானந்தன் கூறுகின்றார். அதைப்போல நாம் தமிழை நன்றாக படிக்க வேண்டும். நம்முடைய புகழ் தமிழைப் போல மணக்க வேண்டும்.