

உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் ஒன்று பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் 1793 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வருடத்திற்கு 87 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் சென்ற அக்டோபர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று துணிகரத் திருட்டு (louvre museum heist) நடந்தது.
இந்த அருங்காட்சியகத்தில் "அபோலோ காலரி” என்ற அறையிலிருந்து விலை மதிப்பற்ற, நெப்போலியன் குடும்பத்து நகைகளை திருடர்கள் கொளையடித்துச் சென்றனர். இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் எட்டே நிமிடங்கள். இந்தத் துணிகரக் கொள்ளையை, சர்வ சாதாரணமாக நுழைந்தோம், எடுத்தோம், தப்பிச் சென்றோம் என்று செய்துள்ளார்கள்.
காலை 9.30 மணியளவில் முகமூடியணிந்த நான்கு திருடர்கள் ட்ரக்கில் அருங்காட்சியகம் வந்தனர். அபோலோ காலரி இருக்கும் பகுதியில் ஜன்னலின் கீழே ட்ரக்கை நிறுத்தியுள்ளார்கள். ட்ரக்கின் பின்பகுதியில் இருந்த மின்சார ஏணியின் மூலம் காலரி ஜன்னலை நெருங்கினார்கள். மின்சார ஏணி பொருத்தப்பட்ட ட்ரக் பிரான்சு நாட்டில் சர்வ சாதாரணம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பெரிய அளவிளான வீட்டு உபகரணங்களை மாடிக்குக் கொண்டு செல்ல இது போன்ற ட்ரக்குகளை பயன்படுத்துவார்கள். ஆகவே, இது மற்றவர்கள் மனதில் சந்தேகத்தை விதைக்கவில்ல.
ஜன்னலில் இருந்த கண்ணாடியை “டிஸ்க் கட்டர்” என்ற கருவியின் மூலம் தகர்த்து, இரண்டு திருடர்கள் காலரியில் நுழைந்த நேரம் 9.34. அந்த காலரியில், நகைகளை காட்சிக்கு வைத்திருந்த இரண்டு கண்ணாடிப் பெட்டகங்களை டிஸ்க் கட்டரைக் கொண்டு உடைத்து, அதிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டார்கள். டிஸ்க் கட்டர் கொண்டு காவலாளிகளை அச்சுறுத்தி, ஏணியின் வழியாக கீழே இறங்கி, கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த மின்சார ஸ்கூட்டரில் அமர்ந்து தப்பிச் சென்ற நேரம் 9.38. அந்த காலரியில் கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், அது இவர்கள் உடைத்த கண்ணாடிப் பெட்டகங்களை நோக்கி இருக்கவில்லை. இவர்கள் கொள்ளையடித்துச் சென்றது நெப்போலியன் குடும்பத்தின் இராணிகள் அணிந்து கொண்டிருந்த நகைகள்.
அருங்காட்சியகத்தில் திருட முற்படுபவர்கள் அங்கிருக்கும் கலைப் பொருட்களான ஓவியம், சிலைகளை குறி வைத்து செயல்படுவதுண்டு. இவற்றை, கருப்புச் சந்தையில், இடைத் தரகர்கள் உதவியுடன் அதிக விலைக்கு விற்பார்கள். பெரும் பணக்காரர்கள், இவற்றை வாங்கித் தங்களுடைய தனிப்பட்ட கலைக் கூடத்தில் காட்சிப் பொருளாக வைத்திருப்பார்கள். இவை யாரிடம் இருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் அதனை காவல் துறை மீட்டெடுக்க முடியும். இந்த வகைத் திருட்டை “கலைத் திருட்டு” என்பார்கள்.
ஆனால், லூவ்ரேயில் நடந்த திருட்டு “பொருள் திருட்டு” என்று கருதுகிறார்கள் நிபுணர்கள். திருடர்கள் எடுத்துச் சென்ற நகைகளில் விலை மதிக்க முடியாத தங்கம், வைர, மரகதக் கற்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்தெடுத்து திருடர்கள் தனித்தனியாக விற்க முயலக் கூடும். திருடர்களைப் பிடித்தாலும் நெப்போலியன் குடும்பத்து நகைகளை முழுவதுமாக மீட்க முடியுமா என்பது சந்தேகம்.
அவர்கள் திருடிய பொருட்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
இராணி ஹார்டென்ஸ் மற்றும் இராணி மேரி அமெலி அணிந்திருந்த கிரீடம். இராணி ஹார்டென்ஸ், நெப்போலியன் போனபார்ட்டின் வளர்ப்பு மகள், மற்றும் அவரது மனைவி ஜோசபின் இயற்கை மகள். 1806 ஆம் வருடம் முதல் சில காலங்கள், ஹார்டென்ஸ், ஹாலந்த் நாட்டின் இராணியாக இருந்தார். நேபிள்ஸைச் சேர்ந்த மேரி அமெலி, 1809ஆம் வருடம் பிரான்சின் லூயிஸ் பிலிப்பை மணந்து கொண்டார். பிற்காலத்தில் லூயிஸ் பிலிப்ஸ், பிரான்சின் மன்னரானார்.
இந்த கிரீடத்தில் 24 நீலக்கல் மற்றும் 1083 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இந்த நகைகளில், இராணிகள் பயன்படுத்திய நெக்லெஸ் மற்றும் காதணிகளும் களவாடப்பட்டன. நெக்லஸில் எட்டு நீலக்கல் மற்றும் 631 வைரங்கள் உள்ளன. காதணியில் இரண்டு நீலக்கல் மற்றும் 59 வைரங்கள்.
திருடப்பட்ட நகைகளில் நெப்போலியன், தன்னுடைய இரண்டாவது மனைவி மேரி லூயிஸூக்கு 1810ஆம் ஆண்டு பரிசளித்த மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகளும் அடங்கும். நெக்லஸில் 32 மரகதங்கள், 1138 வைரங்கள் உள்ளன. காதணிகளில் பதிக்கப்பட்டவை 6 மரகதங்கள், 108 வைரங்கள்.
இதைத் தவிர திருடர்கள் இராணி யூஜினிக்கு சொந்தமான 1855ஆம் ஆண்டைச் சேர்ந்த “ரெலிகுவரி” மற்றும் “வில் வடிவ” ப்ரூச்சுகள், 1853ஆம் ஆண்டைச் சேர்ந்த கீரிடம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இராணி யூஜினி பிரெஞ்சு பேரரசர் மூன்றாம் நெப்போலியனின் மனைவி.
“ரெலிகுவரி” ப்ரூச்சில் 94 வைரங்களும், “வில் வடிவ” ப்ரூச்சில் 2438 வைரங்களும், 196 ரோஜா வெட்டு வைரங்களும், கிரீடத்தில் 212 முத்துகள், 1998 வைரங்கள் மற்றும் 992 ரோஜா வெட்டு வைரங்கள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடித்துச் சென்ற நகைகளின் மொத்த மதிப்பு 102 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது (90 கோடி ரூபாய்).
ஆக மொத்தம், கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற நகைகளில் 7549 வைரக்கற்கள், 1148 ரோஜா வெட்டு வைரங்கள், 212 முத்துகள், 38 மரகத கற்கள், 34 நீலக்கற்கள் அடங்கியுள்ளன. தப்பிச் செல்லும் அவசரத்தில் கொள்ளையர்கள் இராணி யூஜினியின் 1855ஆம் வருடத்தைச் சேர்ந்த கிரீடத்தை வெளியிலே விட்டுச் சென்றனர். சேதமடைந்துள்ள அந்த கிரீடத்தில் 1354 வைரங்கள், 1136 ரோஜா வெட்டு வைரங்கள் மற்றும் 56 மரகதங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தப்பிச் செல்லும் போது தங்கள் உபகரணங்களை விட்டுச் சென்ற கொள்ளையர்கள் தங்கள் வாகனத்திற்கு தீ வைக்கும் முயற்சியில் தோல்வியடைந்தனர்.
கொள்ளைக் கும்பலைத் தேடும் புலனாய்வாளர்கள், விட்டுச் சென்ற தலைக்கவசம் மற்றும் கையுறைகளில் டிஎன்ஏ மாதிரிகளின் தடயங்களைக் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், அவை திருடிச் சென்றவர்களின் டிஎன்ஏ மாதிரியா என்பது தெளிவாகவில்லை. அவர்கள் தப்பிச் சென்றதை காட்டும் புதிய வீடியோ இருப்பதாக கூறுகிறார்கள்.
சமீபத்திய செய்திகளின் படி, பிரான்ஸ் மற்றும் உலகை உலுக்கிய இந்தத் திருட்டு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேர் – மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் – "தெளிவாக உள்ளூர் வாசிகள்" என்றும் கூறுகிறார்கள்.