மதுக்கடைகளை அரசு மூடினால்தான் என்னவாம்?

Tasmac Shop
Tasmac Shop
Published on
kalki vinayagar
kalki vinayagar

- பி.ஆர்.லட்சுமி

திய உணவைத் தந்து பிள்ளைகளின் கல்வி அறிவை வளர்த்தவர் கர்மவீரர் காமராசர். மக்களின் உடல் நலத்தை பேணி, தொழில் வளத்தை மேம்படுத்த மதுக்கடைகளைத் திறப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் இராஜாஜி. இவர்கள் எல்லாம் எந்தக் கல்லூரியிலும் சட்டம் படித்த மேதைகள் இல்லை. ஆனால், சட்டம் படித்த நீதிபதிகளையும் அரசியல் வல்லுநர்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு நாட்டையும் ஆட்சியையும் வழிநடத்தி வந்தனர்.

ஆனால், இன்று தரமான இலவசக் கல்வி என்ற நிலை மாறி, பிள்ளைகளின் நல்ல கல்விக்கு பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை. அதுமட்டுமின்றி, உடலில் பலமும் நல்ல வயதும் இருக்கும் பலரே பொழுது விடிந்ததும் அரசு விற்கும் மதுக்கடைகளின் வாசலில் அரசு விற்கும் சாராயத்தை குடிப்பதற்காக தவம் இருக்கும் அடிமைத் தனமான நிலை. அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால் மது குடிப்பது ஒன்றும் தவறான செயல் இல்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தினால் மதி மயங்கி குடிக்கு மக்கள் அடிமையாகி விட்டனர்.

அரசுப் பேருந்தில் மகளிர்க்கு இலவசப் பயணம் அளித்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களின் தாலி கழுத்தில் நிலைத்து நிற்க அரசு யோசிக்க வேண்டாமா? நாள் முழுவதும் உழைத்து அலுப்பு தீரவும், கவலையை மறக்கவும் போதை தரும் குடியைத் தேடும் மனித சமூகத்தைத் திருத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா?

விஷச் சாராய பலி
விஷச் சாராய பலி

தவறு செய்யும் மக்களை தண்டிக்கும் அரசு, தவறு செய்யும் காவல் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், எம்எல்ஏ, எம்பிக்களையும் தட்டிக்கேட்க ஏன் தயங்க வேண்டும்? இப்படியே நாள் கடத்தி வந்தால், சாராய பலியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். 'விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்களின் பிணக்காட்டின்மேல்தான் அரசு தனது வருவாயைப் பெருக்கிக் கொள்கிறது' என்பது போன்ற கடுமையான விமர்சனங்களும் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுகின்றன. ‘காலம் காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது’ என்பது காவல் துறையினரின் மௌன தலையசைப்பாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நாடிழந்து நம்பி வந்தோர்க்கு துணை நிற்போம்!
Tasmac Shop

வள்ளுவரின் வாய் மொழியை வழிகாட்டியாக வைத்திருக்கும் இந்த அரசுக்கு பண வருவாயை ஈட்ட, இந்தக் ‘குடிமகன்களின்’ உயிரும், அப்பாவிக் குழந்தைகளின் கேள்விக்குறியான வாழ்க்கையும்தான் மூலதனமா?

அரசு இந்த மதுக்கடைகளை மூடினால்தான் என்ன? வரவு செலவுகளைச் சரிக்கட்ட தேர்ந்தெடுத்த நிதி அலுவலர்கள் தலைமைச் செயலகத்தில் இருக்கிறார்கள்தானே!

இறந்தவர்கள் அப்பாவி ஏழை மக்கள்! தமிழை போற்றிப் பாதுகாக்கும் தமிழக திராவிட அரசிற்கு அப்பாவி பெண்களின் வாழ்க்கை பெரிதாகத் தோன்றவில்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com