

-அழகியசிங்கர்
தெருவே ஏற்றுக்கொள்ளாத சோக நிகழ்ச்சிதான். ஆனால் நடந்துவிட்டது. இனி ஒன்றும் செய்யமுடியாது. தெருவிலுள்ளவர்கள் மாரிக்கு ஏற்பட்ட துர்மரணத்தைப் பற்றிப் பேசாமலில்லை. ஆறுமுகம் குடும்பத்தில் பழகுவதற்கு மாரி வித்தியாசமானவன். யார் வம்புக்கும் போகாதவன். அவனைத் தெருவில் அடிக்கடி பார்ப்பதே அபூர்வம். எதாவது கலாட்டா என்றால் அங்கு தென்படமாட்டான். அக்குடும்பத்திலுள்ள அனைவரும் தச்சு வேலை செய்பவர்கள். கடுமையான உழைப்பாளிகள்.
ஆறுமுகத்திற்கு ஆறு பிள்ளைகள். மாரி மூன்றாவது பையன். அவனைத் தவிர அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் குடும்பத் தொழிலில் ஈடுபடுபவர்கள். அவனுக்கும் தச்சு வேலை தெரியும். தெரிந்தாலும் வளசரவாக்கத்திலுள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்தான்.
வழக்கம்போல் அன்று தொழிற்சாலைக்குச் சென்றான். மதியம் வரை கடுமையான வேலை. மதியம் ஒரு மணி சுமாருக்கு அவன் பகுதி அதிகாரி அங்கு பணிபுரியும் தொழிலாளிகளைப் பார்த்து, யாருக்காவது கிணறு இறங்கத் தெரியுமா என்று கேட்டார். கிணறை சுத்தப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். மாரிக்குத் தெரியும். அவன் முன் வந்தான். கிணற்றில் இறங்கினால் கூடுதலாகப் பணம். பல ஆண்டுகளாக பயன்படுத்தாத ஒரு பாழ் கிணற்றில் மாரி இறங்கினான்.