சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ

-சோம.வள்ளியப்பன்

ம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொபெட் வண்டி. இயலாதுபோக, பின்பு மொபெட்டை ஸ்டாண்டு போட்டுவிட்டு, கேட்டைத் திறந்தான். உள்ளே இரண்டாம் நம்பர் பிளாட் அம்மா வாசலில் நிற்பது தெரிந்தது. கஷ்ட காலம், மொபெட்டை உள்ளே நிறுத்திவிட்டு வந்து இந்த கேட்டுச் சனியனைத் திரும்ப மூடி விட்டுப் போகவேண்டும்.

'ஆளாளுக்கு கேட்டைத் துறந்து போட்டுட்டுப் போனா... எவ மூடிக்கிட்டு இருக்குறதாம்? உனக்கென்ன, மாடிப் பிளாட்டு... ஆடு, மாடு உள்ள நுழைஞ்சா மாடியா ஏறப்போவுது?'

கருப்பாய், குண்டாய்... அப்பப்பா... உருவத்தைவிட பேச்சு உக்கிரம்... வாயைத் திறந்தால் வன்மம்தான். ராகவனுக்கு இரண்டாம் நம்பர் அம்மாவைப் பார்த்தாலே கொஞ்சம் அச்சம்தான்.

மொபெட்டையும் சுவற்று ஓரமாக நிறுத்த வேண்டும். பாதையையும் மறைக்கக்கூடாது... முக்கியமாய் இரண்டாம் நம்பர் வீட்டு ஸ்கூட்டர் மீதும் பட்டு விடக்கூடாது... பொரிந்து விடுவாள் பொரிந்து.

தலையைக் கவிழ்த்தபடி மாடி ஏறினான்... 'எல்லாருந்தான் காசு குடுத்து பிளாட்டு வாங்கி இருக்கோம். கீழ் பிளாட்டுல இருந்துக்கிட்டு என்னமோ இவுங்கதான் வீட்டு சொந்தக்காரங்க மாதிரியும், மத்தவங்கல்லாம் குடித்தனக்காரங்க மாதிரியுமில்ல... ராச்சியம் நடத்துறா இவ...'

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!
ஓவியம்; கரோ

மாடி வந்ததும் சுதந்தரமாய் உணர்ந்தான். ஜில்லென்று காற்று வீசியது. அவன் பிளாட் கதவு திறந்தே இருந்தது. சோபா மேல் ராஜனுடைய யூனிபார்ம் சட்டையும் டையும்;  யாருமில்லாத ஹாலில் ஓடியபடி ஃபேன்; மூலைக் கொன்றாய் ரம்யாவின் ஸாக்சுகள்.....கதவுகள் மேலெல்லாம் துவைத்த ஈரத்துணிகள்.

மைதிலி அடுக்களையில் இருந்தாள். தலையில் இடித்த ஒரு ஈர பனியனைக் கோபமாகத் தள்ளியபடி கத்தினான்.

"என்ன கண்றாவி இது... துவைச்சதை வெளியில கம்பியில காயப் போடா... வீடெல்லாம்...?"

"ம்... என்னையக் கேளுங்க... கோவமா! சொந்த வீட்ல குடியிருக்குற மாதிரியா இருக்கு? சனியன்... ஸ்கூட்டர்கார ராணி ஆர்டர். இனி யாரும் வெளிக் கம்பியில துணி காயப் போடக் கூடாதாம். அவ வீட்ல.. தண்ணி சொட்டுதாம். இந்தப் பிரச்னை வந்து ஒரு வாரமாகுது. உங்களுக்கு இந்த வீட்ல நடக்குறது என்ன தெரியுது?

போட்டா என்ன பண்ணிருவாளாம்?" கைலிக்கு மாறியபடி கேட்டான்.

"மேல அஞ்சாம் நம்பர் மாமி நேற்று காயப் போட்டிருக்காங்க. 'ஸ்கூட்டர் ராணி' என்ன பண்ணியிருக்கா தெரியுமா? அவ வீட்டு ஒட்டடைக் கம்புல, இன்னொரு கம்பு ஓசி வாங்கிக் கட்டி, மாமி வீட்டுத் துணியை எல்லாம் மத்தியானமா எடுத்துத் தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டாளாம்.."

அடுக்களையிலேயே ஸ்டூலில் அமர்ந்து காப்பி சாப்பிட்டபடி யோசித்தான். கணவன் -மனைவி இரண்டு பேருமே பொல்லாதவர்கள். மைதிலி கதை கதையாய் சொல்லியிருக்கிறாளே!

பிளாட்டில் உள்ள மற்ற ஐந்து வீடும் ஒரு கட்சி. அவர்கள் மட்டும் ஒரு கட்சி. கந்து வட்டிக்கு கொடுக்கிறார்கள். பணம் வாங்கிச் செல்வதெல்லாம் இல்லாதவர்கள்தான். வராத வட்டிக்கு அந்த அம்மாள் போடும் சத்தம் காது கொடுத்துக் கேட்க முடியாது.

"நம்பளை மாதிரி அவளுக்கு வீட்ல வேலையே இருக்காதாங்க? சதா.. இருபத்து நாலு மணி நேரமும் வாசல்லயே நின்னுக்கிட்டு பிளாட்டுல நடக்குறது மொத்தத்தையும் கடுவண் பூனை கணக்கா நோட்டம் விட்டுக்கிட்டு.."

"பார்த்தா பார்த்துட்டுப் போறா.. உங்களுக்கு என்ன?"

"பாத்திட்டு சும்மாவா இருப்பா' சாயங்காலம் புருஷன் பொண்டாட்டியா வெளிய கிளம்பிட்டா வயிறெரிஞ்சிடுவா! சிங்காரிச்சிக்கினு கிளம்பிட்டா... அப்படிம்பா. அப்பப்பா. இந்தத் தெருவுக்கே இவதான் மாமியாரு மாதிரி...''

மைதிலி, மாமி, பேங்க்கார வீடு... பெங்காலி மேடம் எல்லோருக்குமே 'ஸ்கூட்டர் ராணி' யைக் கண்டால் பிடிக்காது என்பதைவிட பயம் என்பதுதான் சரி.

"இந்தக் கண்றாவியெல்லாம் தொலைச்சிட்டு.. அக்கடான்னு ஒரு வாரம் எங்கயாவது! போய் இருக்க முடியுதா? உங்களால் ஆபீசுக்கு லீவு போட முடியுமா? தினம் இதுங்களுக்குள்ள கிடந்து மாய வேண்டியிருக்கு..."

மைதிலியின் நெடுநாள் ஆதங்கம் இன்றும் ஒருமுறை வாசிக்கப்பட்டது.

"அது சரி... புள்ளைங்க எங்கே?"

''ராஜனும் ரம்யாவுமா? மொட்டை கிரவுண்டுக்கு விளையாடப் போயிருக்காங்க. இவ சீனாம்பர ஸ்கூட்டர் நிக்குதுன்னு...புள்ளைங்க கீழ விளையாடக் கூடாதே! சீ... இப்படியுமா ஒரு பொம்பளை இருப்பா... அன்னைக்கு எதிர் பிளாட்டுக்காரப் பையன் 'பந்தத் தாங்க ஆன்ட்டி'ன்னு கேட்டிருக்கான். கூட நம்ம ராஜனும் நின்னிருக்கான். 'செருப்பால் அடி நாயே, போங்கடா'ன்னு இருக்கா. எனக்கு வயித்தைப் பத்திக்கினு எரியுது... புள்ளைகளை வையுறா... அதான் ஆண்டவன் இவளுக்கு ஒரு குழந்தை தராம வச்சிருக்கான்.."

இதையும் படியுங்கள்:
3 சுவையான பாயாசம் வகைகள்!
ஓவியம்; கரோ

குழந்தைகள் கிரௌண்டிலிருந்து விளையாடி விட்டு வர, படிப்பும் முடிந்து சாப்பிட்டுப் படுத்தார்கள். ராகவனுக்கு மைதிலியைப் பார்க்க, பாவமாக இருந்தது. சரி, இந்த டென்டர் வேலை முடித்துவிட்டால் நாலு நாள் லீவு கேட்கலாம். குழந்தைகளையும் மைதிலியையும் எங்காவது கூட்டிச் செல்லலாம் என திட்டமிட்டான்.

லீவுக்கு பர்மிஷனும் கிடைத்தது. உடன் மேனேஜர், அவர் உபயோகப்படுத்தாத ஹாலிடே ரெசார்ட் டைம் ஷேரையும் நாலு நாளைக்குக் கொடுக்க, ராகவனுக்கு ஏக சந்தோஷம்.

விஷயத்தை மைதிலிக்கு திடீரென்று சொல்லி சந்தோஷப்பட வைக்க வேண்டுமென்று யோசித்து, வேலைகள் செய்தான். ஆயிற்று. இரண்டு நாளில் கிளம்ப வேண்டும். கொடைகானலுக்கு. அனைத்தும் தயார். மைதிலிக்கு மாலை சொல்லி, அவள் படும் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாய் இருந்தான்.

மொபெட் நிறுத்துகையில் இரண்டாம் நம்பர் வீட்டு வாசலில் 'ஸ்கூட்டர் ராணி' இல்லாததும் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. லேசாய் சீட்டி அடித்தபடி மாடியேறினான். டிக்கெட்டுகள், கொடைக்கானலில் தங்கும் அறை காகிதங்களை மேஜை மேல் பரப்பினான். மைதிலியை தற்செயலாகப் பார்க்க வைத்து, மெலிதாகத் துவங்கி ஆச்சரியத்தில் அவள் முகம் விரிய விரிய பெருமைப்பட்டான்.

"எஸ்.. நாம் இன்னும் ஜஸ்ட் இரண்டே நாளில் அதாவது நாளன்னிக்கு மறுநாள்..." வீடே குதூகலித்தது.

"அது சரி... என்ன ஸ்கூட்டர் ராணி வீட்ல யாரையும் காணோம்?"

"தெரியலைங்க... இரண்டு நாளாச்சு. வீடு பூட்டிக் கிடக்கு. அடச்சே! அவுங்க இல்லாததை இங்க இருந்து அனுபவிக்க முடியாம போயிடும் போலிருக்கே! இப்பப் பார்த்து டூர் போறோமே!"

மைதிலி சந்தோஷமும் கேலியுமாய்ச் சொல்ல... குழந்தைகள் கூடச் சிரித்தன.

ஊருக்குக் கிளம்ப வேண்டிய அன்றைக்கு முதல் நாள் மதியம் சில பொருட்கள் வாங்கிக்கொண்டு ராகவன் இரும்பு கேட்டைத் திறக்கையில் கவனித்தான், இரண்டாம் நம்பர் வீட்டில் பிளாட்டுப் பெண்கள் நின்றிருந்தனர். மைதிலியும் நின்றிருந்தாள்.

ராகவனைப் பார்த்ததும், உடன் மாடிக்கு வந்தாள். படியேறுகையிலேயே விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.

''ஸ்கூட்டர்காரர் இரண்டாங் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்... இவளைத் தள்ளி வைச்சிடப் போறாராம்..."

"ஏன்...?"

"கல்யாணமாகி பத்து, பன்னெண்டு வருஷமாகுதுங்க... பிள்ளையே பொறக்கலையே..." மிகவும் சரிதான் என்பதுபோல அவள் குரல் இருந்ததோ...

அந்த விஷயம் எங்கள் எல்லோருக்கும் படு ஆச்சர்யம். ஆனால், ஸ்கூட்டர் ராணி கலங்கவே இல்லை என்பதுபோல இருந்தது. மற்ற பெண்களும் மைதிலியும் கூடிக் கூடிப் பேசினார்கள்.

இதையும் படியுங்கள்:
ருசித்து மகிழ விதவிதமான 3 வகையான புட்டுகள்!
ஓவியம்; கரோ

ராகவன் ஒருவனாகவே ஊருக்குப் போகும் மூட்டைகள் கட்ட வேண்டியிருந்தது. மைதிலி அதிகம் கலந்து கொள்ளவில்லை. இரவு சாப்பிட்டு விட்டுப் படுத்தார்கள். காலை சீக்கிரம் எழ வேண்டும்.

மைதிலி சரியாகவே பேசவில்லை. முகமும் 'உம்' என்று இருந்தது. என்ன கோபமோ! ராகவன் நெருங்கி அமர்ந்தான்.

"என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா...?"

"...................."

"ஹலோ... மேடம்... உங்களைத்தானே! என்ன டல்லா இருக்கீங்க?'

"சீ... என்ன ஆம்பளைங்களோ! பிள்ளை பிறக்கலைங்கறதுக்காக கட்ன பொண்டாட்டியே வேணான்னுட்டு..." கண்கள் கலங்கி... முகம் சிவந்து, அழுதுவிடுவது போல் அரற்றினாள்.

"பாவம்... இனி அவ போயிர வேண்டியதுதானா? எவ்வளவு வடிச்சுக் கொட்டியிருப்பா... எவ்வளவு நல்லது கெட்டது பார்த்திருப்பா! இவ்வளவு நாள் குடித்தனம் பண்ணிட்டு, கூசாம டைவர்சாம்.. இன்னொரு கல்யாணமாம்.. தூ... கொடுமைக்கார ஆம்பிளைங்க.. இன்னொரு பொம்பளை கட்டிக்கிட்டு அவன் நல்லாயிருந்துருவானா?"

குப்புறப்படுத்துக் கொண்டே மைதிலியை வியப்பாகப் பார்த்தான் ராகவன்.

"சரி... சரி... விடு. இதுக்கெல்லாம் போய் 'அப்செட்' ஆயிகிட்டு... நாளைக்கு ஆரம்பிக்குது நம்ம ஜாலி டூர்..."

தொட்டுத் திருப்பியவனை திரும்பிப் பார்த்து, "நான் வர்லைங்க..." என்று 'வெடுக்' கென்று சொல்லி விட்டு நகர்ந்து படுத்துக்கொண்டாள்.

'எத்தனை வருடமாய் எதிர்பார்த்த டூர்... வசதி வாய்ப்புகளோடு அமைந்திருக்கும் டூர்... மைதிலிக்கு திடீரென்று சாதாரணமாகி விட்டதா?" ராகவனுக்கு எரிச்சலாக இருந்தது.

குழந்தைகள் தூங்கியபடி இருக்க, கடிகாரத்தின் 'டிக், டிக்' மட்டும் சத்தமாக கேட்டது. நாலு மணிக்கு அலாரம் வைத்திருந்தான். பத்து நிமிட யோசனைக்குப் பிறகு ராகவனும் படுத்து விட்டான்.

காலை ஆறரை மணிக்கு விழிப்பு வந்த மைதிலி திடுக்கிட்டு, "என்னங்க அலாரம் அடிக்கலையா? டிரெயின் போயிருக்குமே!"

"போகட்டுமே. நான்தானே அமர்த்தினேன். டூர் இன்னொரு முறை பார்த்துக்கலாம்... இரண்டாம் நம்பர் வீட்டுக்கு ஏதும் தேவையான்னு பாரு... ஐயாவுக்கு நாலு நாள் லீவிருக்கு!"

மைதிலி, ராகவன் கையை அழுந்தப் பற்றினாள் சந்தோஷமாக.

பின்குறிப்பு:-

கல்கி 17 செப்டம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com