

உடனே எதிர் வீட்டு ஏகாம்பரமும், வீட்டு வெளியே விளக்கைப் போட்டார்.
பெரியவர் உடனே அவர்களை வீட்டின் பின்புறம் இருந்த மோட்டார் அறையில் தள்ளி தாளிட்டு, மோட்டாரும் போட்டு, ‘எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மோட்டார் எலக்டிரிக் லைன் எதிலும் கைவைக்காதிருக்கும் படியும்’ கூறவிட்டு, வாயில் கேட் வழியாக பார்த்தார்.
இரண்டு அடியாட்கள். கையில் வீச்சரிவாள். அவர்கள் வெளியில் காத்து நிற்கையில், ஏகாம்பரம் "இந்த வீடுதான்... இதே வீடுதான்” என்று அவர்களிடம் சைகையில் சொல்லிக்கொண்டிருந்தார்.
தூங்கி எழுந்த பாவனையுடன் வந்த பெரியவர், கதவைத் திறந்தார்.
‘தடதடவென’ உள்ளே நுழைந்தனர், இரு அடியாட்களும்.
“ஏம்பா யாரு நீங்களெல்லாம்? தொறந்த வீட்டுல நாய் நுழையற மாதிரி... அதுவும் வீச்சரிவாளோடு நுழையறீங்க... சொல்லுங்கப்பா...?” அவர் குரலில் ஒரு கம்பீரமும் கடூரமும் கொண்டு பேசினார். வந்தவர்களே திகைத்துப்போயினர்.
“யோவ் பெரிசு... இங்க யாராச்சும் ஆண் பெண் ஜோடி வந்துச்சா?”
“ரெண்டு நாய் வந்துச்சு. ஆனா இருட்டுல அது ஆணா பெண்ணானு பார்க்க முடியலே...” என்றார் பெரியவரும் சூடாக.