

நானென்ன மைதாஸா தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு கேட்க எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை கிடைச்சா போதும்னு வேண்டிக்கிட்டே வீட்டுப் பரணை நோட்டமிட்டான் கிட்டு!. கிட்டியது நவராத்திரிக்கு வாங்கின ஒரு லட்சுமி மண் உண்டியல். குலுக்க, உள்ளிருந்து சப்தம் ஒண்ணும் வரலை! அமைதி காத்தது!
‘போட்டிருந்தாத் தானே வரும்?!’ புத்தி திட்ட, எட்டி உதைத்தான் உண்டியலை! அது, சுவரில் மோதி ‘கிளிங்க்’ என்ற சப்தத்தோடு ரெண்டானது உண்டியல்!. வாய் பிளந்த உண்டியலுள் வயிறு நிறைய ரூபாய் நோட்டுகள். வசந்தி வரும்முன் எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும் நினைத்தவன் நோட்டுகளை அவசர அவசரமாக அள்ளினான், எண்ணினான். கத்தை கத்தையாய்த் தேறியது.
தாகம் தொண்டையை வாட்ட, டாஸ்மாக் போய் குடித்தான். கண்கள் இருட்ட குடித்து, நடக்க முடியாமல் நடந்து வழி தப்பி வேறு ஊருபோய், ஒரு வன தேவதை கோயில் வாசல் திறந்திருக்க மப்பில் விழுந்து எழுந்து, அங்கிருந்த உண்டியல் ஆள் போல் தோன்ற, “வா! போலாம்! வா போலாம்!ணு அழைத்தபடி அதோடு அளவளாவி கட்டிப் பிடித்து உருண்டு உறங்கிப் போனான்.
ஊர்க்காரர்கள் கூடிவந்து வேல் கம்போடு எழுப்ப, எழுந்து மழுங்க மழுங்க விழித்தான். நவராத்திரி முழுக்க உருவேறி இருந்த பல்லவி, கிடுக்கிப் பிடி போட்டு இழுத்துச் செல்கையில் கீதமானது!!!
*****
அது ஒரு மாலை நேரம், உலகைப் படைத்த கடவுள் பறவைகளை படைத்தார். அவற்றிற்கு வண்ணங்கள் கொடுக்க விரும்பினார். அவருடைய கைகளில் பல வண்ணங்கள் நிறைந்த வண்ணப்பெட்டி ஒன்று இருந்தது.
பறவைகளைப் படைத்த இறைவன், உணவைக் கொத்தித் தின்ன அலகையும், பறக்க இறகையும், உந்திக் கிளம்ப அவற்றிற்குக் கால்களையும் கொடுத்தார். இதேமாதிரி எல்லாப் பறவைகளுக்கும் அதே போல செய்துவிட்ட பிறகு, அவற்றிற்கு வண்ணம் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் புறா ஒன்றைக் கையில் எடுத்த கடவுள், அதை சமாதானத் தூதுவனாக படைக்க விரும்பி, அதற்குத் தூய வெள்ளை நிறம் கொடுத்தார்!.
பறக்கும் பருந்துக்கு சாம்பல் நிறமும், எத்திப் பறிக்கும் காக்கைக்கு கரிய நிறமும் தீட்டினார். அதை அடுத்து, குயிலுக்கு அதே கருப்பு வண்ணம் கொடுத்தார்.
தான் படைப்பை முடித்துவிட்டதாக நினைக்கையில் குயில் அவரை நெருங்கி கதறிக் கதறி அழுதது.
"ஏன் அழுகிறாய்?" என்றார் கடவுள்.
"நானும் கருப்பு!, எத்தித்தின்னும் காக்கையும் கருப்பா…?! எனக்கு வேறு வண்ணம் கொடுத்திருக்கலாமே?!" என்று முறையிட்டது.
கடவுள் சொன்னார், "நீ திருப்தி இல்லாமலிருக்கிறாய் உனக்குத்தான் நான் அழகான் இனிய குரலைத் தந்திருக்கிறேனே? அதைக் கவனிக்கவில்லையா நீ? அதுமட்டுமல்ல. காக்கைக்கு உன் போலக் குரலில்லையே?" என்றார் கடவுள்.
"உண்மைதான்., காக்கையைவிட எனக்குக் குரல் இனிமையாகத்தான் தந்துள்ளீர்கள். ஆனால், காக்கைக்குக் கூடு கட்டத் தெரிகிறது எனக்குத் தெரியாதபடி என்னைப் படைத்துவிட்டீர்களே?" என்று மேலும் வருந்தியது!
கடவுள், "பறவைகளே நீங்கள் மட்டுமல்ல நான் படைத்த மனிதரில் சிலர் கூட தங்களிடம் என்ன இல்லை என்றுதான் எல்லாரும் எண்ணி வருந்துகிறார்களே ஒழிய என்ன இருக்கிறது என்று பெருமைப் படுவதில்லை நிறைவடைவதில்லையே ஏன்?" என்று கேட்க, குயில் வாயடைத்துப்ப் போனதாம்.