

ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார்.
"என்ன டாக்டர் எதோ மளிகை சாமான் லிஸ்டுக்கு ஓகே சொல்றா மாதிரி எல்லா டெஸ்டும் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுக்கறீங்க?’ பதறிப்போகுதில்ல..?!" என்றார் டெஸ்ட்டுக்கு ஆகும் செலவை மனசுள் நினைத்துக் கொண்டு!
டாக்டர் சிரித்தபடியே சொன்னார். "வயசாச்சுல்ல, பிரச்னை இருக்கும். அது என்னன்னு தெரிஞ்சாத்தானே மருந்தெழுத முடியும்?"
டாக்டரை விட்டு வெளியே வந்தார் பரமசிவம். முகம் தொங்கிப் போயிருந்தது.
"சே!... ம்! இந்த மாசமும் பட்ஜெட்ல துண்டு விழும் போலிருக்கே? கடனில்லாம ஒரு மாசமும் கழிக்க முடியாதா?" கண்ணீர் சிந்தாத குறையா வீடு வந்தார்.
டாக்டரிடம் டெஸ்ட்டுக்குக் கூட்டிப் போன பேரனுக்கு புரிந்தது தாத்தாவின் தவிப்பு! 'பணம்னா பொணங்கூட வாயைத் திறக்குமாமே! இன்னும் எத்தனை நாளில் இது பொணமா விழப்போகுதோ? தெரியலை! பர்ஸிலிருந்து காசை எடுக்கணும்னா கசக்குமே மனுஷனுக்கு?!’ நினைத்துக் கொண்டான் பேரன். இருவரும் வீடு வந்தார்கள்.
"ஓவர்ஹெட் டேங்குக்கு தண்ணி ஏத்தணும் மோட்டர் போடு!" என்றார் பரமசிவம். சுவிச் போட்டதும் முதலில் குர்ர்ர்னு சப்தமிட்டுவிட்டு ‘உய்ய்ங்க்’ என்ற ஒரு சப்தத்தோடு சப்த நாடியும் அடங்க நின்று போனது மோட்டர்.
"போச்சு! இதுக்கும் வேற தண்டம் அழணுமா? பிளம்பர் ரங்கநாதனைக் கூப்பிடு. என்னன்னு பார்க்கட்டும். இனி அவனுக்கு வேற சர்வீஸ் சார்ஜ்..." புலம்பத் தொடங்கினார் பரமசிவம்.
பேரன் தொடர்ந்தான்…
"தாத்தா மோட்டர் வாங்கி ரெண்டு வருஷமாச்சு! ஒரு வருஷம்தான் கியாரண்டினான். ரெண்டு வருஷம் வந்ததே பெருசு!காசுபோட்டு வாங்கி வந்த மோட்டருக்குக் கூட ஒரு வருஷம் ரெண்டு வருஷம்தான் கியாரண்டி! பத்து பைசா செலவில்லாம வாங்கி வந்த இந்த மனுஷ ஜென்மத்துக்கு கியாரண்டியெல்லாம் இல்லை! இதுவரைக்கும் உழைச்சதே பெருசு! 'நீதான் எழுபதைத் தாண்டீட்டயே அப்புறம் என்ன? டெஸ்டுக்கு காசு கொடுக்க சுணங்குறேன்?' னு கடவுள் என்னைக்காவது கேட்டதுண்டா தாத்தா? ரங்கநாதன் வந்தா இதைத் தான் சொல்வார்..'கியாரண்டி பீரியடு முடிஞ்சுபோச்சு! செக்கப்ங்கறது சர்வீஸ் பண்றா மாதிரி! சுணங்காம பண்ணினா இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஓடலாம் அப்புறம் உன் இஷ்டம்!" என்றான்.
பேரக் குழந்தையின் வார்த்தையில் நல்லதொரு தத்துவத்தைக் கண்டார் பரமசிவம்.
மயிலாத்தாள் அந்த வீட்டுக்கு மருமகளாக காலடியெடுத்து வைத்தபோது நிகழ்ந்தவற்றை நினைத்துக் பார்த்தபடி பயணித்தாள்… மல்லாந்து படுத்தபடி!
வார்த்தைகளால் வருத்தியவர்கள் ஆயிரமாயிரம் பேர்! கணவனை ஒப்பிடும் போது, அவன் அழகுக்கு அவள் சற்றும் பொருத்தமில்லாதவளாய்த் தெரிந்திருக்கிறாள் ஊர்க் கார்களுக்கெல்லாம்.
"ம்… எல்லாம் நேரம்தான்! கொடுத்து வைத்தவள்! இல்லைனா பத்து கூட முடிக்காதவளுக்கு இப்படியொரு பத்தரை மாத்துத் தங்கம் கிடைத்திருக்குமா?" என்றார்கள் அவனைப் பெருமையாகவும் அவளை மட்டம் தட்டியும்.
அவள் மவுனமாய் இருந்தாள். வேறு என்ன செய்ய முடியும்!?
மாமியார், அவள் என்ன சமைத்தாலும் குற்றம் சொல்லாமலில்லை. ஆனால், மாமியார் பலே கெட்டிக்காரி! ஒருவார்த்தை கூட, குறையாய்ச் சொல்ல மாட்டாள்! வார்த்தையை வீணாக்காமலேயே வதக்கி எடுத்துவிடுவாள். பெருமூச்சுவிடுவாள்! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இறுக்கமாய் தன் செயல்கள் மூலமே மயிலாத்தாளைக் கஷ்டப்படுத்திவிடுவாள் அவள்!
மாமனார் கையாலாகாத கட்டை. வயசுக்காலத்தில் வாழ்வதே துக்கமாய் நினைக்கிற அவர், கொட்டாவி விட மட்டுமே வாய்திறக்க வாய்ப்புள்ளவர் பாவம்! அவரும் மவுனத்தால் மனவலிதரக்கூடிய மனிதர்தான்!
வார்த்தையாலும், செயலாலும், மவுனத்தாலும் மனரோகம் தருகிற மனிதர்கள் மத்தியில் இந்த முப்பது வருடத் தாம்பத்திய வாழ்க்கையில் ஆறுதலாய் துணை நிற்க வேண்டிய கணவன் பழனிச்சாமிகூட, காரியமாவதற்காக அவளைத் தனிமையில் புகழ்ந்த போதெல்லாம், துளுக்கும் கண்ணீர்த் துளிகளைக் கணவனின் மார்பில் கனகாபிசேஷமாய்ச் செய்து புகழ்ச்சிகளைப் புறந்தள்ளி. "மயிலு மயிலுதான்!" என்று பேரெடுத்தாள்!
ராணியாய் பயணிக்கிறாள் பாராட்டுகளை பகிஷ்கரித்து… நாலு பேர் சுமக்கும் பாடைப் பல்லக்கில் மல்லாந்து படுத்தபடி அமைதியாய்!