

கதை 1 - ராஜ பார்வை:
அந்த ‘மெமூ’ லோகல் டிரெயின் ஓடிக்கொண்டிருந்தது. ‘கீ ஸ்யின், செல் கவர், ஹேர்பின், அகர்பத்தி, கிளிப், கிளிப்’ என்றபடி பார்வை இழந்த ஒருத்தர் கைநிறைய பொருட்களை அடுக்கிக்கொண்டு ஓடும் ரெயிலில் தன் விற்பனைக்கு லிளம்பரம் செய்து கொண்டிருந்தார்.
உட்கார்ந்திருந்த உமாபதி "இதென்ன விலை?" ஸ்டிக்கர் பாக்கெட்டைக் காட்டிக் கேட்டான்.
"டுவெண்டி ருபீஸ்!" அழகாய் ஆங்கிலத்தில் அசத்தினார் அவர்.
உமபதி விடவில்லை… "இது…?" என்றான் இன்னொன்றைக் காட்டி..!
அவர் அதன் விலை சொல்ல, செல்போன் கவரைக் காட்டி "இது?" என்றான்.
அவர் விலை சொல்ல..!
"இதெல்லாம் வித்தா என்ன பெருசா கிடைக்கப்போகுது?!" என்றான் குத்தலாக.
அவர் இப்பக் கொஞ்சம் கடுப்பாயிருக்கக் கூடும். ரயிலில் பயணிப்போர் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க, அவர் உமாபதி பக்கம் திரும்பி, கொஞ்சம் உக்கிரமாகவே...
"சார்.. சும்மா.. ஒண்ணொண்ணக் கேக்கறீங்க?! எதையும் வாங்கறதாத் தெரியலையே?!"
உமாபதி திகைத்துப்பார்க்க…!
"நீங்க, சும்மா டைம்பாசுக்காக கேக்கறீங்க!. ஆனா, நான் லைஃப் பாஸுக்காக விக்கறேன்!" என்றபடி கம்பீரமாக நகர்ந்தான்.
*******
அவதி அவதியாய் அனுவின் பக்கம் ஓடினாள் அமுதா. ‘ஏய் அமுதா ஏண்டி இப்படி அவதிஅவதியாய் ஓடி வரே?’ கேட்டாள் அனு.
"ஒண்ணுமில்லை… இந்த 'மகி’ட்ட ‘பிரேக்கப்’ சொல்லிடலாம்னு இருக்கேன்!" என்றாள்.
"ஏன் என்னாச்சு..? ரெண்டு வருஷமா ரெண்டு பேரும் உயிருக்குயிராத்தானே பழகுனீங்க?!" கேட்டாள் அனு.
"பழகினோம்தான்!" என்றாள் அமுதா விரக்தியாக.
"அப்புறம் ஏண்டி?"
"இல்ல.. அவனுக்குப் பெரிய இவன்னு நெனைப்பு..! காக்கவச்சு காக்க வச்சு கழுத்தறுக்கறாண்டி! அவன அறுத்துவிட்டாத்தான் நம் அருமை புரியும்னு நெனைக்கிறேன்! காத்திருக்கறது எவவளவு கஷ்டம்னு தெரியணும் அவனுக்கு!" என்றாள் கடுப்பாக.
"அடி அசடே… காத்திருப்பது கஷ்டம்தான் யார் இல்லைனா?! ஆனா, காத்திருப்பதைவிட, ஒன்றை இழந்துட்டு இழந்துட்டமேன்னு படுற கஷ்டமிருக்கே அதை நெனைச்சுப் பார். ‘காதலில்’ கஷ்டம் காத்திருப்பதில் இல்லைடீ..! இழந்துட்டு, அதுக்காக காலமெல்லாம் நினைச்சு நினைச்சு கஷ்டப்படறது இருக்கே.. அது மாதிரிக் கொடுமை உலகத்திலேயே எதுவுமில்லை..! அந்தக் கஷ்டம் என்னன்னு எனக்குத்தாண்டி தெரியும். அது ரொம்ப ரொம்பக் கொடுமை!. நான் அனுபவிச்சவள். காத்திரு! கைக்கு வரட்டும். அப்புறம் உன் அருமையைக் காட்ட வாய்ப்பு வராமலா போகும்?!" என்றாள்.
*****
கதை 3 - குத்துங்க…! நல்லா குத்துங்க!:
வாழ்க்கை சிலபேருக்கு பரமபத விளையாட்டு!. சின்னச் சின்னதாகவாவது ஏற்றிவிட ஏணி இருக்கும்!. ஆனால், சுதாகருக்கு மட்டும் அது வேறு மாதிரி. சூப்பரா கிடுகிடுன்னு உயர்ந்தான். ஆனால், உயர்ந்த வேகத்திலேயே அந்த பரமபத அனகொண்டா தீண்டிக் கீழிறக்கி விட்டா மாதிரி அதள பாதாளத்துல விழுந்தான்.
அவனுக்கு எப்பவும் ஒரே வருத்தம். தன்னை இப்படி ‘பரமபத ஆட்டப் பாம்பாக ஏற, ஏற யாராவது இறக்கிவிடுகிறார்களே!’ என்று. அதுக்கெல்லாம் அவன் அதைரியப்படற ஆள் இல்லை! என்றாலும் அவனுக்கு ஒரு நினைப்பு தன்னைச் சீண்டறவன் நேருக்கு நேர் சந்திச்சா ஒரு கை பார்த்துடலாம். ஆனால் அயோக்கியனுக பின்னாடி இருந்துல்ல குத்தறானானுக?!’ இதை ஒருநாள் சொல்லியே விட்டான்.
கேட்டுக் கொண்டிருந்த கேசவன் கேட்டான் "என்ன முதுகுல குத்துறாங்கன்னு வருத்தப்படறயா? குத்தறவனைக் குத்துங்க குத்துங்கன்னு குத்தவிடு!” என்றான் கேசவன்
"நீ என்ன சொல்றே?" குழம்பினான் சுதாகர்.
"உனக்கு வாழ்க்கைத் தத்துவம் புரியலை!யா" கேட்டான் கேசவ் .
கேசவனை ஏறிட்டுப் பார்த்தான் சுதாகர்.
“உலகத்துல எவனை முதுகுல பின்னாடி இருந்து குத்தும் தெரியுமா? தனக்கு முன்னாடி இருப்பவனை!., ஆக, நீ தெரிஞ்சுக்கோ நீ குத்தறவனுக்கு முன்னாடி இருக்கேன்னு., அதுமட்டுமில்ல, இன்னைக்கு முன்னாடி இருப்பவன் எல்லாம் பின்னாடி குத்து வாங்கினதுனால முன்னுக்கு வந்தவனில்லை., முன்னாடி வரவர பின்னாடி குத்தப்படறோம்னு தெரிஞ்சே அடி பட்டு உயர்ந்தவங்க, உயர்றவங்க தான்!’ என்றான்.
அவன் சொன்னது ஆதரவாய் இருந்தது சுதாகருக்கு.